Showing posts with label சுவாரஸ்யம். Show all posts
Showing posts with label சுவாரஸ்யம். Show all posts

Tuesday, June 21, 2011

போங்கடா! காதலாவது... கத்தரிக்காயாவது...

“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்!

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம்.



நன்றி : flickr

இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தமிழில் கத்தரிக்காய் பற்றி தெனாலி ராமன் கதை ஒன்று இருக்கிறது; ஹிந்தியில் பீர்பால். இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. ஆனால் ஔவையார் பாட்டி கத்தரிக்காய் வதக்கல் சாப்பிட்டிருக்கிறார்.
புல்வேளூர் பூதன் என்பவர் பாட்டிக்கு, பசி வேளையில், கத்தரிக்காய் வதக்கல் செய்து போட, அதைச் சாப்பிட்ட பாட்டி, ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்’ என்று வெண்பாவில் தான் என்னென்ன சாப்பிட்டார் என்று லிஸ்டே கொடுத்துவிட்டார். அடுத்த முறை புளித்த மோர்சாதத்துக்கு கத்தரிக்காய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெண்பா எழுத வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

நாலடியாரில், ‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே’ என்று வருகிறது. ‘வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது’ என்று கத்தரிக்காயை விதைக்க பாகன் (பாகற்காய்) முளைத்தது என்ற சுவாரஸ்யமான பாடல் ஒன்று, திருமந்திரத்தில் வருகிறது.

கத்தரிக்காயில் பல ரகங்கள் உள்ளன. சாம்பாரில் போட்டுவிடுவதால் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை, புளியம்பூ, வரிகத்தரி, பவானி, இளையம்பாடி,பொய்யூர், பூனைத்தலை, முள்ளு, தூக்கானம்பாளையம், சுக்காம்பார், அய்யம்பாளையம், வெள்ளைக் கத்தரிக்காய் என்று பலவகை இருக்கிறது.

பெங்களூரில் இரண்டு விதக் கத்தரிக்காய்; ஒன்று மெலிதாக, பச்சையாக ‘லாரல்’ மாதிரி இருக்கும். மற்றொன்று ‘ஹார்டி’ மாதிரி குண்டாக இருக்கும். இதை வெட்டினால் வெண்ணை மாதிரி இருக்கும். கால் மீது விழுந்தால் விரல் வீங்கும். (இவை சென்னையிலும் கிடைக்கும்.)

ஏன் பெரிதாக இருப்பதற்குப் பெயர் ‘பெங்களூர் கத்தரிக்காய்’ என்று என் மகளுக்கு தமிழ் சொல்லித்தரும் பக்கத்துவீட்டு நண்பரைக் கேட்டேன். அவர் குடமிளகாயைக் கூட நாங்கள் ‘பெங்களூர் மிளகாய்’ என்று தான் சொல்லுவோம் என்றார். பெரிதாக எது இருந்தாலும் அதற்கு முன் பெங்களூர் சேர்த்துவிடுவது தமிழ் மரபு போல!

வெள்ளைக் கத்தரிக்காய் கொஞ்சம் கடுக்கும், “ஏண்டா இதை வாங்கிண்டு வந்தே?” என்று எனக்கு அம்மாவிடம் திட்டும், “தளிகை பண்றப்போ துளியூண்டு சக்கரை போடு, கடுக்காம இருக்கும்” என்று என் அம்மாவுக்கு பாட்டியிடம் டிப்ஸும் கிடைக்கும். திருச்சி புத்தூர் மார்கெட்டில் ‘நாமம்’ கத்தரிக்காய் என்று ஒரு வகை; கத்தரிக்காயில் வெள்ளை கோடுகளுடன் கிடைக்கும்.

திருமண் (நாமம்) போட்ட வடகலை ஐயங்கார்கள் ‘அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி’ என்று வெள்ளைக் கத்தரியை விலக்கிவைக்க வேண்டும் என்று வேதாந்த தேசிகன் தன்னுடைய ‘ஆகார நியம’த்தில் கூறியுள்ளார்.. அவர் சொன்னது வெண் கத்தரி; ஆனால் இன்று எல்லா வகைக் கத்தரியும் உண்ணத் தக்கதல்ல என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை எக்பிளாண்ட் என்று கூறுவர். நேற்று தான் இதற்கு விடை கிடைத்தது (பார்க்க படம்).

தினமும் பல வகை காய்கறிகளைப் பார்க்கிறோம். திருச்சி மாம்பழச் சாலையில் ‘ஒட்டு’ மாம்பழம் என்று ஒரு வகை உண்டு. உங்களில் பலர் இந்த ஒட்டுச் செடிகளைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் அடுத்த முறை ஏதாவது நர்சரியில் பாருங்கள். இரண்டு செடிகளை லேசாக வெட்டிவிட்டு பாண்டேஜ் மாதிரி கட்டுப்போட்டு ஒட்டிவிடுவார்கள். ஒட்டப்பட்ட இடத்தில் வளரும் செடி இந்த இரண்டு வகையையும் சார்ந்து இருக்கும்.

பல வண்ணங்களில் பூக்கும் போகன்வில்லா; ஒரே செடியில் இரண்டு விதமான வண்ணப் பூக்களுக்கு எல்லாம் இந்த ஒட்டுதான் காரணம். அதே போல முருங்கையில் கூட ஒட்டு உண்டு.

சரி, இப்பொழுது ஒரு புளிய மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் ஒரு கேரட் செடியை ஒட்ட முடியுமா? உடனே முடியாது என்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்றால் இரண்டும் வெவ்வேறு வகை. ஒன்று மரம், மற்றொன்று செடி. ஆனால் மரத்திலிருந்து ஒரு ஜீனை எடுத்து செடியில் புகுத்தலாம். அட அப்படியா? எப்படி என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான உதாரணம் தருகிறேன்.

மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ராத்திரி வயல்வெளியில் மினுக் மினுக் என்று அலையும். அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பூச்சிகளின் ஒரு ஜீனை எடுத்து புகையிலை செடிக்குள் செலுத்தியுள்ளார்கள். பிறகு ஒரு விதமான தண்ணீர் ஊற்றும் போது அந்தச் செடியை ஸ்பெஷலாகப் படம் பிடித்துள்ளார்கள். ‘அவதார்’ படத்தில் தாவரங்களிலிருந்து ஒளி வருவது போல், செடியின் பல திசுக்கள் (tissue) அதில் தெரிந்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1986. ஆக, இப்படி மரபணுவைச் செடிகளில் செலுத்துவதால் அதன் ஆதார குணம் மாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.

நாளைக்கே தவளையின் டி.என்.ஏவை தக்காளியில் புகுத்தினால், ரசத்துக்குள் தக்காளி தானாகவே குதித்துக்கொள்ளும் சாத்தியக்கூறு இருக்கிறது!.

மேலும் கட்டுரையைத் தொடர, செல்கள், ஜீன், டி.என்.ஏ, குரோமோசோம் என்று நாம் கேள்விப்பட்ட சில வார்த்தைகளை திரும்பவும் பார்த்துவிடலாம்.

நீங்கள் அடுத்த முறை கண்ணாடி முன் நின்றுகொண்டு உங்களைப் பார்க்கும் பொழுது உங்கள் உடலில், 10 டிரில்லியன் (1000000000000 ) உயிரணுக்களைப் (Cells) பார்க்கிறீர்கள் என்பதை நினைவுவைக்கவும். உங்கள் தசைகள், குடல், முடி, ஈரல் என்று அதில் மொத்தம் 200 வகை. பற்களில் உள்ள எனாமல், நீங்கள் பார்க்கும் கண் லென்ஸ் கூட ஒரு வகை உயிரணு தான்.

உடைந்த எலும்பு சரியாவதும், நம் உடலில் உள்ள பாகங்கள் வளர்வதும் இந்த செல் செய்யும் மாயம் தான். நம் ஒற்றைத் தலைமயிரின் விட்டத்தில் (diameter) பத்தில் ஒரு பாகம் தான் செல்லின் அளவு!, உங்கள் விரல் நுனியில் 2-3 பில்லியன் செல்கள் இருக்கும்!

எல்லா மனிதர்களின் செல்களிலும் டி.என்.ஏ (என்கிற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் deoxyribonucleic acid) இருக்கிறது. இது முறுக்கிவிட்ட நூலேணி போல் இருக்கும்; பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கும் சுருளான ஜிகினா காகிதம் மாதிரி.

இந்த நூலேணிப் படிகளில் விதவிதமான புரோட்டீன்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. அவை கிட்டத்தட்ட நம்முடைய ரகசியங்கள் என்று சொல்லலாம். இந்த ரகசியத்தைத் தான் ஜீன்(Gene) என்கிறார்கள். முக அமைப்பு, நிறம் போன்ற தகவல்கள் எல்லாம் இந்த ஜீன்களில் தான் இருக்கிறது. எல்லா மனிதர்களின் ஜீன்களும் 98-99% ஒரே மாதிரி தான் இருக்கும். மிச்சம் இருக்கும் 1-2% தான் என்னையும், இதைப் படிக்கும் உங்களையும் வேறுபடுத்துகிறது.


மேலே படத்தில் இருப்பது செல், இதில் நூடுல்ஸ் மாதிரி இருப்பது தான் டி.என்.ஏ. ஒரு முறை பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.

இந்த முறுக்கிக் கொண்டு இருக்கும் நூலேணியில் கொஞ்சம் ஏறிப் பார்க்கலாம். முதலில் டி.என்.ஏ என்ற கூட்டணு தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் (டூப்ளிகேட் செய்துகொள்ளும்) குணம் பெற்றது. ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி… இப்படிப் பிரதியெடுக்கும். என்று நீங்கள் இப்போது இதை படிக்கும்போது கூட அவை பிரதியெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன..

நீங்கள் இந்த உலகத்தில் முதலில் ஒரு செல்லாக இருந்தீர்கள், பிறகு இந்த இரட்டிப்பு முறைத் தொடர் பிரதியெடுப்பினால் இன்று ஒரு மனிதனாக ஆகியுள்ளீர்கள். சரி இந்தப் பிரதியெடுப்பினால் எப்படி எனக்கு கண் காது மூக்கு எல்லாம் வந்தது என்று கேட்கிறீர்கள். டி.என்.ஏவில் விதவிதமான புரோட்டீன்கள் எப்படி உண்டாக்குவது என்ற குறிப்பு இருக்கும் என்று பார்த்தோம். கூடவே நம் செல்களில் என்னென்ன ரசாயன மாற்றங்கள் செய்ய வேண்டும், அவை எந்த அளவுக்கு வேண்டும் என்ற தகவல்கள், ஆணைகள் அதில் இருக்கிறது!

டி.என்.ஏவின் அடுத்த படிக்குச் செல்லாலாம்.


இந்தப் படத்தில் என்ன தெரிகிறது?. இரண்டு பக்கங்களிலும் நீல ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா? இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides). படத்தை மற்றொரு முறை கவனியுங்கள், படிகளில் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன?. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் என நான்கு வண்ணங்கள் இருப்பது தெரியும். இந்த நான்கு வண்ணங்களும் நான்கு வகையானவை. அவை என்னென்ன என்பதும் படத்தில் இருக்கிறது. வசதிக்காக, சுருக்கமாக A, T, C, G என்று வைத்துக்கொள்ளலாம். (மஞ்சள் – அடினைன், பச்சை – தயோமைன், ஆரஞ்ச் – சைடோசைன், சிகப்பு – குவானின் என்று பெயர்கள் ).

ஒவ்வொரு ந்யுக்ளியோடைடும் மூன்று பாகங்கள் கொண்டது – பாஸ்பேட் தொகுதி (phosphate group), சர்க்கரைத் தொகுதி (sugar group) மற்றும் நான்கு வித நைட்ரஜன் அடிப்படையில் ஏதாவது ஒன்றைக் கொண்டது (Nitrogen Base)

நான்கு வித நைட்ரஜன் தான் நாம் பார்க்கும் அந்த நான்கு வண்ண ஏணிப் படிகள். பக்கவாட்டில் நீல நிற ரிப்பன் மாதிரி இருப்பவை சர்க்கரை, பாஸ்பேட் ஆதாரக் கூட்டமைப்பு.

பள்ளியில் படித்த விஷயத்தை திரும்ப ஒரு முறை பார்க்கலாம். H2O என்றால் என்ன? – நீர். அதாவது (2)ஹைட்ரஜனுடன் (1)ஆக்ஸிஜனும் கூட்டு சேர்ந்தால் கிடைப்பது நீரின் மூலக்கூறு (Water Molecule)


படத்தை நன்றாக கவனித்தால், ஒரு மஞ்சள் (அடினைன்) பச்சையுடன் (தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (குவானின்) ஆரஞ்சுடன் (சைடோசைன்) சேருகிறது. இந்த நூலேணியை நடுவில் வெட்டினால் அவை இரண்டாகப் பிரிந்துவிடும். சரியான ஜோடி கிடைக்கும் போது திரும்ப ஒட்டிக்கொள்ளும். யார் உடன் யார் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற தகவல் பத்திரமாக அதனுள்ளேயே இருக்கிறது!

மனிதனாக இருந்தாலும், வெண்டைக்காயாக இருந்தாலும் டி.என்.ஏ ஒன்று தான் – அவை தன்னைத் தானே இரட்டிப்பு செய்துகொள்கிறது. தேவையான புரேட்டீன்களை உற்பத்தி செய்கிறது. என்ன விதமான புரோட்டீன் தேவை என்ற தகவல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பல ஜீன்களின் கூட்டுச் சேர்க்கை தான் உயிர். உதாரணமாக சோளத்தில் 2,50,000 விதமான ஜீன்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். டி.என்.ஏ முறுக்கு ஏணியில் எல்லா ஜீன்களும் வரிசையாக டி.என்.ஏ மூலக்கூறுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகள் பல்வேறு தொகுப்பாக, குரோமோசோம்களாக இருக்கின்றன.

மனிதனின் டி.என்.ஏவை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏணி போல அடுக்கி வைத்த புத்தகங்களை பார்த்திருப்பீர்கள். இதே மாதிரி 1000 டெலிபோன் டைரக்டரியை அடுக்கி வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு இருக்கும் மனிதனின் ஜீன்கள்! என்ன ஒன்று, அந்த புத்தங்களில் பெயர்களுக்கு பதில் எல்லாம் A,C,T,G என்ற எழுத்து தான் இருக்கும். நமக்கு தலை கால் புரியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்க்கும். இந்த எழுத்தை எல்லாம் 46 பாகங்கங்களாக பிரித்திருக்கிறார்கள். பாகங்களுக்கு பெயர் குரோமோசோம். அப்பாவிடமிருந்து 23; அம்மாவிடமிருந்து இன்னொரு 23!. ஆக மொத்தம் 46. இதில் உங்க அம்மா வழி, அப்பா வழி தாத்தா பாட்டி என்று எல்லாம் கலந்து இருக்கும். எல்லம் பிரதியெடுப்பதின் பலன்!. “அப்படியே மாமாவை உரிச்சு வெச்சிருக்கான்” என்பதன் ரகசியம் இது தான்!

ஒரு செடியில் இருக்கும் செல்லை எடுத்துப் பார்த்தால் இந்த குரோம்சோம் காப்பி அதில் பரவி இருக்கும்.அதே போல மனிதனோ, மிருகமோ, செடியோ உள்ளே சென்று பார்த்தால் எல்லா டி.என்.ஏவும் ஒன்று தான். இதனால் தான் ஒரு தவளையின் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் வெட்டி ஒட்டலாம். எந்த விதமான புரோட்டீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தகவல் அதில் இருக்கும். இந்த மாதிரி இரு வேறு விதமான டி.என்.ஏ சேரும் போது அந்தத் தக்காளியில் என்ன விதமான ரசாயன மாற்றம் வரும் என்று யாரும் அனுமானிக்க முடியாது. (அதுசரி, இப்படிச் செய்தால் அந்தத் தக்காளி வெஜ்ஜா நான்-வெஜ்ஜா?)

தென்னை மர ஓலையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி டி.என்.ஏ-வைப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். மிக நுட்பமான மைக்ராஸ்கோப் மூலமும், மைக்ராஸ்கோப் சர்ஜிக்கல் உபகரணம் கொண்டும் இந்த ஜீன்களை இரண்டாக வெட்டி, இன்னொரு ஜீனுடன் சேர்க்கிறார்கள். இதைத் தான் ஜெனட்டிக் எஞ்சினியரிங் என்று சொல்லுகிறார்கள். சுருக்கமாக GE.

எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கு முன் பிளாஸ்மிட் (Plasmid) என்ற ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நூல் ஏணி போல் இல்லாமல் வட்ட வடிவமாக உள்ள டி.என்.ஏ. தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்த ஸ்பெஷல் டி.என்.ஏ. ஒரு டி.என்.ஏவை வெட்டி மற்றொன்றுடன் எப்படி ஒட்ட வேண்டும் என்பதை சமையல் குறிப்பு போலத் தரலாம்.

1. முதலில் பிளாஸ்மிட் டி.என்.ஏவை எடுத்துக்கொண்டு ஒரு பகுதியை வெட்டிஎடுத்துவிடுங்கள்.
2. வெட்டப்பட்ட இடத்தில் வேறு ஒரு டி.என்.ஏவின் பகுதியைப் ஒட்டவைத்துவிடுங்கள்.
3. இந்த ஒட்டப்பட்ட புதிய டி.என்.ஏவை செல்லுக்குள் புகுத்திவிடுங்கள்.
4. புகுத்தப்பட்ட டி.என்.ஏ தன்னைத் தானே பிரதியெடுக்கத் தொடங்கும்.
5. புதிய வகை டி.என்.ஏ தயார்.

பிளாஸ்மிட் டி.என்.ஏவை வெக்டர்(Vector) என்பர். புகுத்தபட்ட டி.என்.ஏவை டோனர் (Donor) என்பர். வெக்டர் என்ன வகையான செல்களோ, அங்கே தான் இந்த மாற்றப்பட்ட டி.என்.ஏவை உற்பத்தி செய்வார்கள்.

உங்கள் வீட்டில் நீங்கள் தான் மார்க்கெட் போய் காய்கறிகளை வாங்குவீர்களா? கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே? நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal!

மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிரின்(பாக்டீரியா) பெயர் ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ (Bacillus Thuringiensis – BT) சுருக்கமாக ‘பி.டி’ (BT). இந்த பாக்டீரியாவில் இருக்கும் நச்சுத் தன்மை கொண்ட டி.என்.ஏ, பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கண்டுபிடித்துள்ளார்கள். முதலில் இதை பருத்திச் செடிகளில் சோதித்துப் பார்த்து, அதில் வெற்றி பெறவே அடுத்தது கத்தரிக்காய் பக்கம் வந்துள்ளார்கள்.

இந்த பி.டி நுண்ணுயிரின் நச்சுத் தன்மையை எடுத்து கத்தரிக்காய்ச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்துவதால், கத்தரிக்காய்ச் செடிகள் பூச்சிகளிடமிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளும். மின்மினி பூச்சியிலிருந்து எடுத்த டி.என்.ஏவை புகையிலைச் செடியில் புகுத்தினார்கள் அல்லவா அதே போலத் தான் இதுவும். இதிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு கத்தரிச் செடிகள் சாகுபடி செய்தால் எல்லாக் கத்தரிக்காய்களும் இனி பூச்சியில்லாமல் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு கத்தரிக்காய் வாங்கலாம். நச்சுத் தன்மை உடைய மரபணுவிற்குப் பெயர் cry1Ac.

இன்னும் கொஞ்ச விஷயம் இருக்கு. ஒரு நட்டும் போல்ட்டும் எப்படி வேலை செய்கிறது? நட்டில் இருக்கும் மரையும் போல்ட்டில் இருக்கும் மரையும் வேறு வேறு மாதிரி இருந்தால் தான் இரண்டும் ஒன்றுசேரும். அதே போல் தான் டி.என்.ஏவிலும். நான்கு வண்ண ஏணியைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் – மஞ்சள் ( A-அடினைன் ) பச்சையுடன் (T-தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (G-குவானின்) ஆரஞ்சுடன் (C-சைடோசைன்) சேருகிறது என்று பார்த்தோம். ஜீன் என்பது இந்த நான்கு A, T, G, C என்ற எழுத்துக்களால் ஆன பெரிய புத்தகம் மாதிரி என்று சொல்லுவார்கள். அதில் இந்த CTTAAG என்ற வரிசை முக்கியமானது. இதை EcoR1 (eco R one) என்று சொல்லுவார்கள். CTTAAG என்ற வரிசையை திருப்பி எழுதினால் GAATTC என்று வரும். இவை இரண்டையும் சேர்ந்த்து எழுதினால் கிடைப்பது ஒரு பாலிண்ட்ரோம்.

மஹாபாரதத்தில் ஜராசந்தன் கதை பார்க்கலாம். ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் கடுமையான சண்டை. ஜராசந்தனை தென்னை ஓலையை கிழிப்பது போல இரண்டாக கிழித்து போடுகிறான் பீமன். ஆனால் மாயக்காரனான ஜராசந்தன் பிரித்த உடல் இரண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று விடுகிறான். பீமனுக்கு என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் போது கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து மற்றி போடும் படி பீமனுக்கு சொல்கிறார். அதன் படி பீமன் ஜராசந்தனை கிழித்து மாற்றி போட ஜராசந்தன் அழிகிறான் இப்ப இந்த வரிசையை பாருங்கள்.

C – G
T – A
T – A
A – T
A – T
G – C

இதை இரண்டாக வெட்டி பீமன் ஜராசந்தனை போட்ட மாதிரி போட்டால் மாற்றி போட்டால் நட் போல்ட் போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். படத்தில், “புகுத்தப்பட வேண்டிய டி.என்.ஏ” என்ற இடத்தில் cry1Ac என்று போட்டுப் பாருங்கள், எல்லாம் புரியும்!

இன்னும் கொஞ்ச நாளில் ‘மாம்பழத்து வண்டு…’ என்ற பாடலை யாரும் பாட முடியாது. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் மனைவியிடம் காண்பித்தேன். படித்துமுடித்தவுடன்,
படித்துமுடித்தவுடன் “அடுத்த தடவை கத்தரிக்கா வாங்கிண்டு வரும் போது சொத்தையா பார்த்து வாங்கிண்டு வாங்க” என்றாள்.

இங்கிலாந்தில் டிசைனர் பிரா, பேண்டீஸ்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

இப்போதைய பெண்களிடையே தங்களது அந்தரங்க அழகை ஆராதனை செய்யும் மோகம் அதிகமாக உள்ளதாம். பேண்டீஸ் மற்றும் பிராக்களின் விற்பனை அதிகரிப்பு மட்டுமல்லாமல் குவிந்து வரும் புதுப் புது டிசைன்களும், விதம் விதமான மாடல்களும் இதை நிரூபிப்பதாக உள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் அதிகரித்துள்ளதாம்.

முன்பை விட இப்போது பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 117 சதவீத உயர்வைக் கண்டுள்ளதாம் இவற்றின் விற்பனை.

உலக அளவில் இந்த விற்பனை அதிகரிப்பு காணப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களில் பல்வேறு விதமான மாடல்கள் இந்த காலகட்டத்தில் குவிந்திருக்கின்றனவாம். எத்தனை டிசைன்களை அறிமுகப்படுத்தினாலும் அவை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறதாம். புதிய மாடல்களைக் கேட்டு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.

பெண்களுக்கான உள்ளாடைகளில் பிராக்களுக்குத்தான் நிறைய டிசைன்களை அறிமுகப்படுத்துகின்றனர் டிசைனர்கள். பல்வேறு விதமான, வடிவிலான, பிராக்களின் பெருக்கத்தால் பெண்களுக்கு 'சூஸ்' செய்வதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

முன்பெல்லாம் பிராக்களை அணிவதோடு பெண்கள் நின்று விடுவார்கள். இப்போது தங்களது மார்புகளின் தேவைக்கேற்ப அணிய விரும்புகிறார்கள். இதுவும் பிரா மாடல்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மேலும், பிரபல நடிகைகள், மாடல் அழகிகள் அணியும் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களும் இப்போது பெண்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அதே டிசைன், மாடலைக் கேட்டு வர ஆரம்பித்துள்ளனராம்.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த ஒரு பேஷன் டிசைன் நிறுவனம் புதிய வகை மாடல் பிராவை அறிமுகப்படுத்தியது. அது விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அத்தனை கடைகளிலும் விற்றுப் போய் விட்டதாம். முன்கூட்டியே அந்த பிரா குறித்து நிறைய விளம்பரப்படுத்தியிருந்ததால் பெண்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வந்து பிராக்களை அள்ளிக் கொண்டு போய் விட்டனர்.

இதுகுறித்து உள்ளாடை விற்பனையக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், முன்பை விட இப்போது உள்ளாடைகள் மீது பெண்களுக்கு புதிய மோகம், கூடுதல் அக்கறை பிறந்துள்ளது. முன்பெல்லாம் எந்தவித டிசைனும் இல்லாமல், பிரா மற்றும் பேண்டீஸ் அணிந்து வந்த பெண்கள் இப்போது டிசைன்களை எதிர்பார்க்கிறார்கள்.

விதம் விதமான மாடல்களை அவர்கள் விரும்புகிறார்கள். எப்படி வெளி உடைகளை விதம் விதமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதேபோல இப்போது உள்ளாடைகளையும் விதம் விதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

முன்பு மார்பழகு குறித்து அதிகம் மெனக்கெடாத பெண்கள் இப்போது விதம் விதமான பிராக்களின் மூலம் தங்களது மார்பழகை சிறப்பாக வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார்கள். அதற்கேற்ப பல்வேறு வகையான பிராக்கள் மார்க்கெட்டில் தற்போது உள்ளது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பிரா மட்டும் வாங்க பெண்கள் ஆண்டுக்கு 2700 பவுண்டுகள் வரை செலவழிக்கிறார்களாம். அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் குறைந்தது 16 வகையான பிராக்கள் இருக்கிறதாம்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இங்கிலாந்துப் பெண்களின் மார்பு அளவு சமீப ஆண்டுகளில் சராசரியாக 34பி என்பதிலிருந்து 36 டியாக உயர்ந்துள்ளதாம்.

பிரா, பேண்டீஸ் தவிர பின்னழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான ஜீன்ஸ் பேன்ட்டுகள் உள்ளிட்ட மேலும் பல அழகு சமாச்சாரங்களும் கடைகளில் கல்லாக் கட்டிக் காத்திருப்பதால், தங்களது உடல் அழகைக் கூட்டிக் கொள்ளும் பெண்களின் அளவும் அதிகரித்தபடியே போகிறதாம்.

பெரிய மார்பு உள்ளவர்களுக்குத்தான் டிசைன்கள் என்றில்லாமல், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கும், அவர்களது மார்பழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான பிராக்களும் மார்க்கெட்டில் ஏராளமாக இருப்பதால் அவற்றின் விற்பனையும் அள்ளிக் கொண்டு போகிறதாம்.

Monday, June 20, 2011

என் வீட்டு சிட்டுக்குருவி: The House Sparrow

எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான் அமைஞ்சிருக்கு. கிட்டத்தட்ட என்னோட வேலை இடத்தில நானும் இவைகளை எட்டு வருஷத்திற்கு மேலா பாத்துக்கிட்டு வாரேன்.

என்னய மாதிரி இல்லாம இந்த சிட்டுக்குருவிகள் பாட்டுக்கு அமைதியா எதைப் பற்றியும் கிஞ்சித்தும் அலட்டிக்காம தாவித் தாவி கிடைக்கிற உணவு விசயங்களை கொத்தி எடுத்திட்டு அங்கிட்டும் இங்கிட்டுமா தலையையாட்டி பார்த்திட்டு இருக்கும். தடிமாடு மாதிரி நான் அதன் வழியில நின்னா கொஞ்சம் நகருவனான்னு பார்க்கும் இல்லன்னா பொசுக்கின்னு தலைக்கு மேலே அடப் போப்பா அப்படின்னு பறந்து கூரையில கட்டி வைச்சிருக்க கூட்டில அமர்ந்து உணவு வழங்கிட்டு சிறிது நேரம் உள்ளரயே இருந்திட்டு மீண்டும் இரை தேட கீழே இறங்கிடும்.

அந்தக் கூடு நான் முதன் முறையாக வைத்துப் பார்த்த இடத்திலேயே அப்படியே இருக்கிது. அந்த அமைப்பில என்ன ஒரே ஒரு வித்தியாசம் பார்த்திருக்கேன்னா, கொண்டு வந்து சேர்க்கும் நார்களின் நிறத்தைக் கொண்டு அவை புதிதாக சேர்க்கப் பட்டிருக்கிறது எனவும், கூட்டின் நீளம் நீட்டப் பட்டிருக்கிறது என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். மற்றபடி வாகுவாக அதன் கூட்டை மிக்க சிரத்தையுடன் செங்கல் சுவற்றிற்கும் நீட்ட வாக்கில் ஓடும் இரும்பு கம்பிக்கும் இடையில் அமைத்து வைத்திருக்கிறது. அந்தக் கூடு என் தலைக்கு நேர் மேலாக இருக்கு, அங்க நின்று கொண்டிருக்கும் பொழுது நில நேரங்கள்ல அவைகளுக்கிடையேயான உரையாடல் சற்றே பலமாக இருக்கும் கீழே நின்று ரசிக்கும்படியாக. பல நேரம் மிக்க அமைதியாக இருந்துவிடுவதுமுண்டு.

என்னோட கூரையில அடையிற குருவி இனம் வந்து வீட்டுச் சிட்டுக்குருவி (the house sparrow -passer domesticus). எனக்கு இவைகளைப் பத்தி எழுதணும்னு ஆர்வம் வந்ததிற்குக் காரணமே இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள் மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.


சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.


இந்த சிட்டுக்குருவிகள் இனம் வந்து பனை மரத்தில கூடு கட்டி வாழுமில்ல முடைவான் குருவி (the weaver bird) அத்தோட இனம்தானாம்.

இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.

அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.


வருஷத்திற்கு ரெண்டு, மூணு முறை முட்டையிடும் போல, ஒவ்வொரு முறையும் 2-5 முட்டை வரைக்கும் இட்டு 14-16 நாட்கள் அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது. கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க. ஆனா, என்னயப் பொருத்த மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம் மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்; எனக்குமின்னு தெரியுது.

ஆனா, இது போன்ற ரொம்ப சாதாரணமா நாம கண்ணுற்று வந்த பல பறவைகளின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்கப்பட்டு, இப்பெல்லாம் நல்லா கண்ணை கசக்கிட்டு பார்த்தாத்தேன் தட்டுப்படுதுங்கன்னு கவனிச்சிட்டு வாரவங்களுக்குத் தெரியும். உலகம் முழுக்கவுமே இப்போ சிட்டுக்குருவிகள் 7.5% குறைஞ்சிடுச்சின்னும், பறவைகளின் ரெட் புக் இவைகளை அபாயத்தில் இருக்குங்கிற லிஸ்ட்லயும் சேர்த்து வைச்சிருக்கிது.

போன வருஷம் பறவை பார்த்தல் அப்படிங்கிற பதிவில இந்த செல் ஃபோன் டவர்களின் பெருக்கம் இது போன்ற பறவைகளின் இருத்தலை குறைச்சிடுச்சான்னு ஒரு பேச்சு வந்து ஒரு பின்னூட்டத்தின் மூலமா பேசினோம், அதனையும் இங்கே இணைக்கிறேன் ஆர்வமுள்ள மக்கள் எஞ்சாய்! ...


நண்பர் செந்தழல் ரவியும் அடைக்கலங் குருவிகள் என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு ரொம்ப ஃபீல்வோட சிட்டுக்குருவிகளின் ஆண்மையிழப்பிற்கான காரணத்தை அலசியிருக்கார். அங்கும் சென்று வாங்க!



...இயற்கை நேசி|Oruni said...

கல்வெட்டு,

//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//

நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...

சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?

எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணாமல் போகலாமின்னு... "வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...

யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.

அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.

பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது...Killing Fields - Electromagnetic Radiation ...

Sunday, April 24, 2011

ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒவ்வொரு வருடமும் முட்டாள் தின பல நகைச்சுவைகளை உருவாக்குவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நகைச்சுவைகளை உருவாக்குவதில் வெறுமனே Google.com இணையத்தளம் பங்கு கொள்ளாது, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான Google.co.uk, Google.com.au போன்ற பல நாடுகளுக்குப் பொறுப்பான தளங்களும் தன் பங்கிற்கு மிகச் சுவாரஸ்யமான விடயங்களை வழங்க தயாராகியிருக்கும்.

இதோ விரிகிறது இந்த ஆண்டின் கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

உயிர் எழுத்துக்களுக்குப் பஞ்சமான ஜிமெயில் தளம்.

இன்றைய ஜிமெயில் தளத்தில் காணப்பட்ட சொற்களில் ஆங்கில உயிர் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை.



விலங்கின் மொழியை மொழிபெயர்க்கும் கையடக்கத் தொலைபேசி செய்நிரல்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்குடன் கூகிள் விலங்குகளின் மொழிகளை மொழிபெயர்த்து மனிதர்களுக்குச் சொல்லக்கூடிய கையடக்கத் தொலைபேசி செய்நிரலொன்றை தயாரித்துள்ளது.



அந்தச் செய்நிரல் எப்படி இயங்குகின்றதென்பதைச் சொல்லுகின்ற வகையில் காணொளியொன்றையும் கூகிள் அந்தத் தளத்தில் இணைத்திருந்தது.

புத்தகங்களை முப்பரிமாணத்தில் வாசிக்கலாம்

Google Books தமது இணையத்தளத்தில் காணப்படும் புத்தகங்களை முப்பரிமாண முறையில் (3D) வாசிக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.



முப்பரிமாண முறையில் பாதையில் பயணம் செய்யலாம்

Google Street View என்பது பலராலும் விரும்பப்படுகின்ற ஒரு சேவையாகும். ஒரு இடத்தில் அமைவைத் துள்ளியமாகக் காட்டக்கூடிய தகவை இந்தத்தளம் கொண்டுள்ளது. இன்று அந்தத் தளத்தில் காணப்படும் படங்களை முப்பரிமாண முறையில் பார்க்கக் கூடிய வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தித் தந்திருந்தது.



YouTube செலவீனங்களைக் குறைக்க உதவுங்கள்

இன்றைய தினம் காணொளி பகிர்வுத் தளமான YouTube இன் இலட்சணையை (Logo) கூகிள் மாற்றம் செய்திருந்தது.



இதற்கான காரணத்தையும் அது தெளிவுற அதன் வலைப்பதிவில்குறிப்பிட்டிருந்தது. வீடியோக்களை textP என்ற நிலையில் பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.



இந்த text-only mode இன் மூலம் காணொளிகளை காண்பதால், செக்கனுக்கு ஒரு டொலரை YouTube சேமித்துக் கொள்ள உதவுவதாக கூகிள் கூறுகின்றது.



எல்லாவற்றையும் சேமிக்கும் Google Docs சேமிப்பகம்

ஆம். எல்லாவற்றையும் உங்கள் திறப்பு, வீட்டிலுள்ள பொருட்களைக் கூட சேமித்து வைக்கக்கூடிய கூகிள் டொக்ஸ் கட்டமைப்பு கூகிள் இன்றுஅறிமுகம் செய்து வைத்தது.



தேடலிற்கான நேரம் செக்கனில் இல்லை

கூகிளில் ஒரு தேடலை மேற்கொள்ளும் போது, தேடலிற்காக எடுத்துக் கொண்ட நேரத்தை வழமையாக செக்கனிலேயே தெரிவிக்கும். இன்று அவ்வாறில்லை. பல அளவீடுகளை இதனைத் தெரிவிக்கும் பொருட்டு பயன்படுத்திக் கொண்டது.



கூகிள் தனது தளத்தில் பயன்படுத்திய சில அளவீடுகள் பின்வருமாறு.

1.21 gigawatts
11.90 parsecs
0.30 centibeats
0.32 centons
0.33e+43 Planck times
0.97 times the velocity of an unladen swallow
0.17 microfortnights
at warp 8.96
0.07 nanocenturies
0.03 femtogalactic years
72.10 jiffies
0.41 microweeks
23.00 skidoo
1.56e-15 epochs
2.00 shakes of a lamb’s tail
3.49 hertz

இவ்வாறாக பல சுவாரஸ்யங்களை கூகிள், இன்றைய தினத்தில் அரங்கேற்றியது.