Friday, December 9, 2011

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 22

இடைவெளி சில வாரங்களே ஆனாலும், இந்தத் தொடரை எழுதாமல் இருந்த இந்த சில வாரங்களில் நடந்திருக்கும் சில நிகழ்வுகள் பிரமாண்ட மானவை என்பதால் அவற்றை முதலில் பார்க்கலாம்.

ஐ.டி. துறையைப் பலமாக அசைத்துப்போட்டது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் அகால மரணம். 56 வயதுக்குள் அவர் செய்த சாதனைகள் குறைந்தது அடுத்த 50 ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் என்னவாகும்? குறுகிய காலத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் வரப்போவது இல்லை. தனக்குப் பின்னால் தலைமைச் செயல் அதிகாரியாக டிம் குக்கை நியமித்த பிறகுதான் அந்தப் பதவி யில் இருந்து விலகினார் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்திடம் 81 பில்லியன் டாலர்கள் இன்றைய தேதியில் பணமாக மட்டும் இருக்கிறது. இதைக் கரைத்து, ஒடிந்துபோக பல இமாலயத்தவறுகள் நடந்தாக வேண்டும். டிம் குக், ஜாப்ஸ்போல பொருள் தயாரிப்பில் (Product Development) வல்லுநராக இல்லாவிட்டாலும், ஆப்பிளை வழிநடத்திச் செல்வதில் திறன் மிகுந்தவராகவே தெரிகிறார். 

பின்குறிப்பு: ஜாப்ஸின் உயிர் பிரிகையில் அவரது அருகிலேயே இருந்த அவரது சகோதரி மோனா சிம்சன், நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை அற்புதமானது. 'ஸ்டீவின் கடைசி வார்த்தைகள்: 'ஓ வாவ்... ஓ வாவ்... ஓ வாவ்!’ ரொம்பவே சிம்பிளான வாழ்க்கை வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் சில வருடங்களுக்கு முன்னால், ஒரு விழாவில் உரையாற்றியபோது 'ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் கடைசி நாளாகப் பாவித்து, அதற்குள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று நினைத்ததுதான் எனது வெற்றிக்குக் காரணம்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது!''

மோனாவின் முழுப் பேச்சு படிக்க http://www.nytimes.com/2011/10/30/opinion/mona-simpsons-eulogy-for-steve-jobs.html?pagewanted=all உரலியையும் ஜாப்ஸின் உரை யைக் கேட்க http://www.youtube.com/watch?v=D1R-jKKp3NA உரலியையும் க்ளிக்கவும்.

அடுத்தது, அமேசான்.

பங்குச் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது வருமான, செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதிமுறை. காலாண்டுக் கணக்கு எனப்படும் இந்த அறிக்கையின் மீது பங்குச் சந்தை நிபுணர்கள் கவனம் செலுத்துவது நடைமுறை. குறிப்பிட்ட சில நிபுணர்கள் என்ன நிறுவனங்கள் எவ்வளவு வருமானம் மற்றும் லாபம் ஈட்டும் என்பதை அனுமானித்துச் சொல்வதும் உண்டு. ஒரு நிறுவனம் லாபகரமாக காலாண்டை நடத்தியிருந்தும், மேற்கண்ட அனுமானத்தை எட்ட முடியவில்லை என்றால் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடையும். இதனால், பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரிகள் காலாண்டுக் கணக்கை வெளியிடும்போது நகம் கடித்து நெர்வஸாக இருப்பது உண்டு. ஒருவேளை நிபுணர்களின் அனுமானத்தை அடைய சில புள்ளிகள் தவறியிருந்தாலே, அதற்கான காரணங்களை முதலீட்டாளர்களிடம் மீடியா மூலமாக விளக்கம் அளித்து பங்கு மதிப்பு வீழ்ந்துவிடாமல் இருக்க முயற்சிகள் எடுப்பார்கள். காலாண்டுக் கணக்குபற்றி தீர்க்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த உரலியைச் சொடுக்குங்கள் http://help.wsj.com/help/tools-and-formats/company-research/earnings-estimates/

அமேசானின் காலாண்டுக் கணக்கு சென்ற வாரம் வெளியானது. அதன் லாபம் 70 சதவிகிதத்துக் கும் மேலாக வீழ்ச்சி அடைந்ததாகச் சொன்னது அமேசான். வருமானம் 40 சதவிகிதத்துக்கும் மேல் இருந்தாலும், லாபம் ஏன் இப்படிக் குறைந்தது என்பதை அலசினால், அமேசான் தொலைநோக்கிலான வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்திருப்பது தெரியவரும். இந்தக் காரணத்தால், அமேசானின் பங்கு மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. அப்படி என்ன தொலைநோக்குத் திட்டங்கள்? ஆன்லைன் புத்தக வியாபாரியாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்த இந்த நிறுவனம், உலகின் மிகப் பெரிய சந்தையாக மாறியதுடன், இணைய சேவைக் கூறுகள் (Amazon Web Services - http://aws.amazon.com/ ) எனப்படும் மேகக்கணினியகச் சேவைக்குள் சில வருடங்களுக்கு முன்னால் சந்தடி இல்லாமல் நுழைந்து பாரம்பரிய டெக் நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் போன்றவை மேகக்கணினியத்தில் ஈடுபடாமல் இருக்கும்போதே அதில் நுழைந்து, தொடர்ந்து இந்த ஏரியாவில் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் இணையக் கூறுகள் துறையில் இருந்து மட்டுமே அமேசானுக்கு 1 பில்லியன் டாலர் வருமானம் வந்தது என்பது அமேசானின் தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் அத்தாட்சி எனச் சொல்லலாம். ஐ-பேடுக்குப் போட்டியாக அமேசான் வெளியிடும் கிண்டில் ஃபயர் (Kindle Fire) குளிகை இவ்வருடக் கடைசிக்குள் 2 மில்லியன் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்குப் பின்னர் அமேசானின் ஜெஃப் பெசோஸ் டெக் உலகின் விற்பன்னராகப் (Talisman)பார்க்கப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.

கடைசியாக, ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் தளத்தை அடிப்படையாக வைத்து மென்பொருள் தயாரிப்பவர்களுக்கான வருடாந்திர எஃப்8 மாநாட்டில் ஆச்சர்யங் களுக்குக் குறைவில்லை. பயனீட்டாளர்களின் வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் நிகழ்ந்தவற்றை அந்தந்தக் காலகட்டங்களில் வெளியிடும் டைம்லைன் (Timeline) ஃபேஸ்புக் பயனீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் எனத் தோன்றுகிறது.

வாஷிங்டன் போஸ்ட் தினசரியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு இருக்கும் சோஷியல் ரீடர் (Social Reader) இன்னொரு மைல்கல். ஃபேஸ்புக்குக்குள் இயங்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள்

உங்களுக்கு விருப்பமான செய்திகளையும் உங்கள் நண்பர்களுக்குப் பிடிக்கும் செய்திகளையும் முதன்மையாகப் படிக்க முடியும். (உரலி-http://www.washingtonpost.com/socialreader) பல மீடியா நிறுவனங்கள் இந்த அடிப்படையைப் பயன்படுத்தி மென்பொருள் எழுதப்போவது உறுதி.

800 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களுடன் வெற்றிநடைபோட்டாலும், ஃபேஸ்புக்கின் எதிர்காலம் இப்போது சற்றே கேள்விக்குறியுடன் பார்க்கப்படுகிறது. அது ஏன் என்பதை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்!

No comments:

Post a Comment