Tuesday, December 21, 2010

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா


கிரிஸ்துமஸ் விருந்தில் வழங்கப்பட்டஉணவு ஹலாலா? ஹராமா?


ஆகுமான உணவுப்பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பதுதவறல்லஎனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள்தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது.

பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர்கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜைசெய்யப்பட்ட பொருட்கள் ஆகியவைஹராம் என்று குர்ஆன் கூறுகின்றது.


சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக்காலங்களிலோ அல்லது மற்றகாலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன் படுத்தக்கூடாது.


وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى
أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ(121)6

அல்லாஹ்வின் பெயர்கூறப்படாததை உண்ணாதீர்கள்! அதுகுற்றம்.

அல்குர்ஆன்(6 : 121)

தாமாகச்செத்தவை, இரத்தம், பன்றியின்இறைச்சி,
அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடைசெய்திருக்கிறான்.
யார் வரம்புமீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப் படுகிறாரோ அல்லாஹ்மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபுமூலத்தில் "உஹில்ல''
என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள்
சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும்மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர்கூறி அறுக்கப்பட்டவை,மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும்போது வாங்கக்கூடாதுமற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

உங்கள் சகோதரர் உங்களுக்கு அளித்த விருந்தில் இஸ்லாம் தடை செய்த மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது ஹராமாகும்.
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளை அவர் வழங்கியிருந்தால் அது ஹலாலாகும். அதை உண்பது தவறல்ல.

வேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்

வேப்பமரத்து நிழல் குளிர்மையில் சாய்மனைக் கதிரையில் சாய்ந்து 80-90 வயதுகள் வரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மூதாதையர்களை நினைக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது.


இயற்கையோடு இசைந்த 
வாழ்வின் சுகங்களை எண்ணும்போது,
தொலைத்த எமது வாழ்வின் வசந்தங்களை
ஏக்கப் பெரு மூச்சுகளாக
வெளியேற்றவே முடிகிறது.


வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.

வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,

வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,
வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,
வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென
நினைந்து ஏங்கவே முடிகிறது.

வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.

'குடித்துப் பார்க்கவில்லையா?' என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் 'குடிக்கிறது கஷ்டம்' என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.


இன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.

ஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

தொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

1982ல் வெளியான மருத்துவ ஏட்டில் (Lancet Feb 1981 28:1 (8218):487-9)

"இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்"
என்றும் சொல்கிறது.

தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.

ஆனால் இது பழம் கதையல்ல.
இன்றும் தொடர்கிறது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாத Ceylon Medical Journal சஞ்சிகையில்
இது பற்றிய புதிய விபரம் வெளியாகி இருக்கிறது.

பூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு
வேப்பெண்ணெயைக் கொடுத்த போது
மூளை மண்டலம் பாதிப்புற்று
வாந்தி,
மயக்கம்,
முழுமையான வலிப்பு (Generalized Seizures)

ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

ஈரல் வீக்கம்,
ஈரல் பாதிப்பு,
Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.

வேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.

இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.

வேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol)  மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.

மருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.

வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும்
பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.

ஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய
ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும்
எண்ணெயானது
எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி
எங்கும் கட்டுப்பாடின்றி
விற்பனையாகிறது.

'வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது'
என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.


தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.

எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.

அது அவசியமும் கூட.

ஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.


வேப்பெண்ணெய் கசத்தாலும்
அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்
அதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

மோகத்தால் வந்ததா? - வைரஸ் வோர்ட் (Virus Wart)

இடதுகைச் பெரு விரலை மறுகையால் பொத்திக் கொண்டு வந்தாள் ரதி என மோகிக்க வைக்கும் அந்த இளம் பெண். வயது பதினெட்டு இருக்கும். ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருப்பது மோகத்தோடு சற்றும் சம்பந்தப்படாத நோய். 

கைவிரலில் கட்டிபோல ஒரு சிறு தோல் வளர்ச்சி. தட்டுப்பட்டால் சற்று வலிக்கிறதாம். பார்பதற்கு அவளைப் போல அழகானதாக அந்த வீக்கம் இருக்கவில்லை. 

சொறிப் பிடித்த நாயின் தோல் போல சொரசொரப்பான தோல்த் தடிப்பாக அது அரை சென்ரிமீட்டர் அளவில் மட்டுமே இருந்தது. 

"இது ஏதாவது ஆபத்தான நோயா? புற்றுநோயாக இருக்குமா அல்லது வேறு ஏதாவது கெட்ட நோயா" என்ற கவலை அவளுக்கு. தனது பேரழகைக் குலைக்க வந்த 'கரும் புள்ளி' என்ற சீற்றம் வேறு அவளுக்கு. 

இதனை வைரஸ் வோர்ட் (Virus Wart) என அழைப்பார்கள். காரணம் இது ஒரு வைரஸ் நோயாகும். மனித பப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) (HPV) என்ற வைரஸ் கிருமியால் எற்படுகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படுவது என்பதால் ஒரு தொற்று நோயும் கூட. நெருக்கமாகப் பிழங்குவதாலும், பொதுவான துவாய் பயன்படுத்துவதாலும் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவலாம். 

இது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். ஆயினும் அந்தப் பெண்ணுக்கு வந்ததுபோல கைகளிலியே அதிகம் ஏற்படுவதைப் பார்க்கிறோம். 

பெரும்பாலானோரில் முக்கியமாகக் குழந்தைகளில் எந்தவித சிகிச்சையும் இன்றி தானாகவே ஆறு மாத காலத்தினுள் மறைந்துவிடும். சிலருக்கு ஓரிரு வருடங்கள் கூடச் செல்லலாம். 

பயப்படுவதற்கு இந்நோயில் எதுவுமில்லை. தட்டுப்பட்டால் வலிக்கலாம், உரசினால் இரத்தம் கசியலாம், இவற்றைத் தவிர வேறு ஆபத்துக்கள் இல்லை. ஆனால் அசிங்கமாக இருக்கிறதே என மனத்திற்குள் மறுகி தாங்களே கவலைப்படுவதுதான் மிகப் பெரிய துன்பமாகும். 

தானாக மறையாவிட்டால் சாதாரண பூச்சு மருந்துகள் அதனைக் கரைக்க உதவும். உதாரணமாக சலிசிலிக் அமிலக் களிம்பு (Salicylic Ointment) உதவும். பல வாரங்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். குளித்த பின் அல்லது நோயுள்ள இடத்தைக் கழுவி ஈரலிப்பும் மெதுமையும் இருக்கும்போது மருந்தைப் பூசினால் கூடுதலாக உட்புறமாக ஊறி அதிகம் வேலை செய்யும். டுவோபில்ம்(Duofilm) எனும் திரவ மருந்தும் உபயோகிக்கக் கூடியது. ஆயினும் இவற்றை முகம், பாலுறுப்பு போன்ற மென்மையான இடங்களில் உபயோகிக்கக் கூடாது. நீரிழிவு உள்ளவர்களும் அவதானத்துடனேயே உபயோகிக்க வேண்டும். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றிப் பாவிக்க வேண்டாம். 


வைத்தியர்கள் திரவ நைதரசனால் எரிப்பது, மின்சாரத்தால் (Cautery)எரிப்பது போன்ற சிகிச்சை முறைகளையும் கையாளக் கூடும். 

விறைப்பதற்கு ஊசி மருந்திட்டு வெட்டியும் எடுப்பார்கள். ஆயினும் இச் சிகிச்சைகளின் பின்னரும் அவை சிலவேளைகளில் மீளத் தோன்றக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது. 

உடலில் ஏற்படுவதுபோலவே சிலருக்கு இத்தகைய நோய் பாதங்களிலும்வரலாம். பாதத்தில் தோன்றுவதை (Planter Wart) என்று சொல்லுவார்கள். இதுவும் பெரும்பாலும் இளவயதினரிடையேதான் தோன்றுகிறது. தோலின் மேற்பகுதியில் ஆரம்பிக்கும் இது நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தால் உட்தோல் வரை பரவி வலியையும் உண்டுபண்ணலாம். காலில் ஏற்படும் இத்தகைய வீக்கத்தின் மத்தியில் சற்றுக் கருமையான பள்ளம் போன்ற புள்ளி காணப்படுவது இதனைச் சுலபமாக இனங்காண வைத்தியர்களுக்கு உதவுகிறது. 

உடலில் ஏற்படும் அத்தகைய வோர்ட்சை ஒத்த நோய் பால் உறுப்புகளிலும் ஏற்படுவதுண்டு. ஆண், பெண் ஆகிய இருபாலாரிலும் இது வரலாம். இதனைபாலுறுப்பு வோர்ட்ஸ்(Genital Warts) என்பர். இது ஒரு பாலியல் தொற்று நோய். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற நெறியை மீறுவதால் என்று சொல்லலாம். இன்று பாதுகாப்பற்ற பாலுறவு(Unprotected Sex) என்ற சொற்தொடரை உபயோகிக்கிறார்கள். நோயுள்ள ஒருவருடன் உடலுறவு வைப்பதால் இது தொற்றுகிறது. கருத்தடை ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவு கொண்டால் தொற்ற மாட்டாது. 

ஆண் உறுப்பில் சிறுதோற் தடிப்பு அல்லது கட்டிபோலவே இதுவும் இருக்கும். பெண்களின் உறுப்பின் தோல் மடிப்புகளில் இது மறைந்திருக்கக் கூடும் என்பதால் நோயிருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாது. சில பெண்களுக்கு சற்றுக் கசிவும் அரிப்பும் இருக்கக் கூடும். 

அரிப்பு, கசிவு, சல எரிவு போன்ற எந்ந அறிகுறி இருந்தாலும் வைத்திய ஆலோசனை பெறுங்கள். வைத்தியரிடம் சொல்ல வெட்கப்பட்டு காரமான சோப்புகளால் கழுவவோ, கண்ட மருந்துகளைப் பூசவோ வேண்டாம். 

பாலுறுப்பின் சருமம் மிக மிருதுவானது என்பதால் புண்படக் கூடும். வைத்தியரின் ஆலோசனைபடியே சிகிச்சை செய்ய வேண்டும். 

பாலுறுப்பில் ஏற்படும் அரிப்பு, கசிவு, புண் யாவும் பாலியல் நோயால்தான் ஏற்படும் என்றில்லை, நீரிழிவு, அலர்ஜி, தோல் நோய்கள் போன்றவற்றாலும் ஏற்படலாம். எனவே தயக்கத்தை விட்டு வைத்திய ஆலோசனை பெறுவதுதான் உசிதமானது. 

மோகத்தால் வந்தாலும் சரி, காலில் வந்தாலும் சரி, கையில் வந்தாலும் சரி இத்தகைய வோரட்ஸ் எல்லாமே மனித பப்பிலோமா வைரசால் தான் ஏற்படுகின்றன. வாய்க்குள்ளும், மலவாயிலிலும் கூட வருவதுண்டு. 

ஆயினும் அவை எல்லமே ஒரே வகை வைரஸ் அல்ல. ஐம்பதுக்கு மேற்பட்ட உப இனங்கள் மனித பப்பிலோமா வைரசில் இனங்காணப்பட்டுள்ளன. 

இவற்றில் சில உடலின் வெவ்வேறு பாகங்களில் மாறுபாடான விதத்தில் நோய்களை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணுக்கும் தவறான மோகத்தால் வரும் பாலியல் நோய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றேன். 

வெள்ளைச் சோறா? சிவத்தச் சோறா?- மரணத்தைத் தள்ளிப் போடும் தவிட்டுப் பொருள்

'நான் வெள்ளை அரிசிச் சோறுதான் சாப்பிடறனான். தவிட்டரிசிச் சோறு பிடிக்காது. செமிக்காது. வயிறு பொருமிக் கொண்டிருக்கும்.' என ஒதுக்கி வைத்த பலரும் இன்று அது பற்றி மீள யோசிக்க வேண்டியிருக்கிறது.

தீட்டிய அரிசியில் தவிட்டுப் பொருள் இருக்காது
ஏனெனில் நீரிழிவு, கொலஸ்டரோல், கொழுத்த உடம்பு என நோய்களின் எண்ணிக்கையை அவர்களில் பலர் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கிய உணவைக் கைவிட்டதின் பலன் அது.

பெரும்பாலான இள வயதினர் சோறே வேண்டாம் எனச் சொல்லி நூடில்ஸ், பிட்ஷா, மக்ரோனி, கொத்து எனச் சொகுசு உணவுகளுக்கு மாறிக் கொண்டிருப்பது மேலும் கவலைக்குரியது.


அதனால்தான் பெற்றோர்களை முந்திக்கொண்டு பிள்ளைகள் இயற்கைக் காரணங்களால் மரணமடையும் காலம் முதல் தடவையாக உலகில் வந்திருக்கிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அண்மையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அது நீரிழிவு உள்ள பெண்களைப் பற்றியது.
7822 பெண்களின் மருத்துவக் கோவைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன.
210,000 பெண் தாதியர்கள் பற்றி
1976 ல் ஆரம்பிக்கப்பட்ட ((Nurses Health Study)
பாரிய ஆய்வின் ஒரு அங்கம்தான் இது.

அதன் பிரகாரம் தமது உணவில் அதிகளவு தவிடு (Bran) சேர்த்துக் கொண்ட நீரிழிவு நோயாளர்கள்
  • இருதய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்பு ஏனையவர்களைவிட 35 சதவிகிதத்தால் குறைகிறதாம். 
  • அத்துடன் வேறு எந்த மருத்துவக் காரணங்களால் மரணமடையும் சாத்தியமும் 28 சதவிகிதத்தால் குறைகிறது என்கிறார்கள். 
மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏனையவர்களை விட மும்மடங்கு அதிகம் என்பதால் இது முக்கியமான செய்தியாகும்.

மாப்பொருள் உணவு எமது உணவில் முக்கிய பகுதியாகிறது. அதில்தான் இந்தத் தவிட்டுப் பொருள் இருக்கிறது. இது பற்றி மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள் மாப்பொருள், Carbohydrates

தவிடு சார்ந்த உணவு எமது பாரம்பரிய முறையாகும். தவிடு அரிசியில் இருப்பதை நாம் அறிவோம். அது அரிசியில் மாத்திரமல்ல கோதுமை, குரக்கன், சாமை போன்ற அனைத்துத் தானியங்களிலும் தவிடு உள்ளது.


தவிட்டில் விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை அதிகளவில் செறிந்துள்ளன. இவை எமது உடலாரோக்கியத்திற்கு மிகுந்த பலன் அளிப்பவை.

தீட்டாத தானியங்களில்தான் (Whole Grains) இவை அதிகம் உண்டு. அரிசியைப் பொறுத்தவரையிலும் அவ்வாறுதான். அதிலும் தீட்டாத நாட்டரிசி(புளுங்கல் அரிசி) யில் அதன் செறிவு அதிகம்.

ஆனால் இன்று அரிசி மில்காரர்கள் அரிசியை நன்கு தீட்டி வெள்ளை அரிசி போலவே எமக்குத் தருகின்றனர்.

தவிட்டை மாட்டுத் தீவனமாகி இரட்டை வருமானம் பெறுகின்றனர்.
மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம்தான்.
ஆனால் மனிதர்களின் நலக்கேட்டின் வழியல்ல.


இந்தத் தவிட்டுப் பொருளானது எமது இரத்தக் குழாய்களின் உட்புறத்தில் உள்ள கலங்களில் அழற்சி ஏற்படுவதைத் தடுத்து செயற்திறனை இழக்காது பாதுகாக்கிறது என முன்னொரு ஆய்வு கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் அறிய கீழுள்ள வழியை கிளிக் பண்ணுங்கள்.
Dietary prevention of atherosclerosis: go with whole grains

அதாவது அவை எமது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதில் இரத்தம் உறைந்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்த ஆய்வு பெண்கள் பற்றியதுதான். ஆயினும் அது தானியங்களைத் தீட்டாமல் முழுமையான நிலையில் தவிட்டுடன் உண்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்கிறது.

முக்கியமாக நீரிழிவாளரின் வாழ்நாளின் நீடிப்பைப் பேசுகிறது. ஆனால் அது எவருக்குமே பொருந்தக் கூடியதுதான். அதை நாங்களும் பின்பற்றினால் எமது வாழ்வும் நோயின்றி பல்லாண்டு காலம் வாழ வகிக்கும்.

எமது மூதாதையர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் தெரியாது. ஆனால் இயற்கையின் ஓட்டத்தில் அதற்கு முரண்படாது வாழ்ந்தார்கள்.

  • ஆரோக்கியமான உணவுகளை உண்டார்கள். 
  • அளவோடு உண்டார்கள்.
அதனால்தான் அவர்களை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை நெருங்கியது குறைவு.

அஞ்சா நெஞ்சன் இஞ்சி

சமிபாடின்மை என்றால் "இஞ்சிச் சோடா கொண்டுவா" என்பார்கள். எமது நாளாந்த பாவனைகள் இவ்வாறிருக்க, சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளில் இஞ்சியின் பயன்பாடு அதிகம். தடிமன், காய்ச்சல், பசியின்மை, சமிபாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இஞ்சி தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சிச் சம்பல், இஞ்சி தேநீர் போன்றவை நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிடுபவர்கள் பலரின் தேர்வாக இருக்கிறது. பிட்ஸா ஹட்டின் ஹார்லிக் பிரட்டின் (GARLIC BREAD) சுவை பிரசித்தம் அல்லவா? இஞ்சி போடாத இறைச்சிக் கறி சுவைக்கு உதவாது என்பார்கள் பலர்.

உண்மையில் இஞ்சிக்கு மருத்துவக் குணங்கள் உள்ளனவா? இருப்பின் அவை விஞ்ஞான பூர்வமாக ஏற்கப்பட்ட கருத்துகளா? அமெரிக்கன் AMERICAN FAMILY PHYSICIAN 2007; 75: 1689-91 இதழில் இஞ்சியின் மருத்துவப் பயன்பாடு பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்ப கால மசக்கையின் போது சத்தி, ஓங்காளம் போன்றவை பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. இந் நேரத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு மருந்துகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மருந்துகள் கொடுப்பதற்கு மருத்துவர்கள் தயங்குவதுண்டு. இத்தகையவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் இருப்பதை விட இஞ்சி கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என 675 பேரைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில் நான்கு ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்களுக்கு விற்றமின் ஆ6 கொடுக்கும் அதே அளவு பலனை இஞ்சியும் கொடுக்கும் என வேறு ஓர் ஆய்வு கூறுகின்றது.

சத்திர சிகிச்சைகளுக்குப் பின்னர் பலருக்கும் ஓங்காளமும் வாந்தியும் ஏற்படுவதுண்டு. மருந்தற்ற மாத்திரைகளை ( placbo)விட இஞ்சியானது அவர்களது அறிகுறிகளைக் குறைக்கும் என மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.

யாழ்.- திருமலை கப்பல் பிரயாணிகள் பலர் கப்பலில் வாந்தி வருவதை நினைத்துப் பயந்தே பிரயாணம் வேண்டாம் என அலறி ஓடுகிறார்கள். பிரயாணங்களின் போது கப்பல் அடங்கலாக வாந்தி வருவதை ஆங்கிலத்தில் motion sickness என்பார்கள். அத்தகைய வாந்திக்கு dimenhydrinate என்ற மருந்தும் பாவனையில் உள்ளது. இஞ்சியானது அந்த மருந்தை விட மேலான ஆற்றல் உள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

ரூமற்வொயிட் மூட்டு வாதம் (Rheumatoid arthiritis) மற்றும் முழங்கால் எலும்புத் தேய்வு வாதம் (Osteoarthiritis of knee) ஆகியவற்றுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும் எனத் தெரிகிறது.

சரி எவ்வளவு இஞ்சி சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் 250 மி.கி. முதல் 1 கிராம் அளவிலான காய வைத்து தூள் செய்யப்பட்ட இஞ்சியை கூட்டுக் குளிசையையாக தினமும் ஒன்று முதல் நான்கு தடவைகள் கொடுத்தே செய்யப்பட்டன. ஆழ் கடலில் கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு வாந்தியைத் தடுக்க 1 கிராம் தினமும் நான்கு தடவைகள் கொடுக்கப்பட்டன.

பக்கவிளைவுகள் கிடையாதா என்பது சிலரது சந்தேகமாக இருக்கும். நெஞ்செரிவு, வாய் எரிவு, வயிற்றோட்டம் போன்ற பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். ஆயினும் குருதி உறைதல் தொடர்பான பக்க விளைவு வோபெரின் ( Warfarin) உபயோகிக்கும் நோயாளர்களுக்கு பிரச்சினை ஆகலாம். அத்தகையவர்கள் அதிகமாக இஞ்சி உட்கொண்டால் INR இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது உசிதமானது.

ஒரு பிற்குறிப்பு; இஞ்சிக் கிழங்கு என்று சொல்கிறோம் . உண்மையில் இது சரிந்த பாட்டில் கிடக்கும் தண்டாகும். இதிலிருந்து வேர் கீழ் நோக்கி வளர்கிறது. இது ஆசியா போன்ற உலர் வலய நாடுகளில் வளரும் தாவரமாகும். மருத்துவக் குணங்கள் உள்ள போதும் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான திணைக்களம் இஞ்சியை உணவுத் தயாரிப்பில் உபயோகப்படுத்தும் பொருளாகவே வகைப்படுத்துகிறதே அன்றி மருந்தாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மணமுறிவிற்கான மகத்தான காரணங்கள்

"அவர்கள் இருவரும் திருமணம் முடித்து அதன் பின் என்றென்றும் மகிழ்ச்சியோடு நீடுழி வாழ்ந்தார்கள்."


இவ்வாறு நிறைவாக முடிவடையும் சிறுவர் கதைகளை வாசிக்காதவர் எவரும் இருக்க முடியாது.


கதைகளில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்,
காதல் அதன் பின் திருமணம்.
அதைத் தொடரும் மகிழ்ச்சியான வாழ்க்கை.
எத்துணை நிறைவான வாழ்வு!

ஆனால் இவை எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா?. பலரின் வாழ்க்கை திருமணத்தின் பின் கருகிவிடுகிறது.


சட்டரீதியான விவாகரத்து என்பது எமது சமூகத்தில் இன்னும் பரவலாகாத போதும் மணமுறிவுகளுக்குக் குறைவில்லை என்பதும் உண்மையே.


திருமணத்தின் பின்னான வாழ்வு நீடித்து நிலைக்குமா அல்லது முறிந்து போகுமா என்பதற்குக் காரணங்கள் என்ன?

திருமண வாழ்வை நீடிக்க அன்பும் காதலும் மட்டும் போதுமா? இவை பற்றி அறிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 முதல் 2007 வரை 2500 தம்பதிகளைக் கொண்டு செய்த இந்த ஆய்வானது பல காரணங்களை வெளிப்படுத்துகிறது.


ஆண்களின் வயதும் வயது வித்தியாசமும்

ஆண்களின் வயதும், தம்பதிகளுக்கு இடையேயான வயது வித்தியாசமும் ஒரு முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.

25 வயதிற்கு முன்னர் திருமணம் செய்த ஆணின் குடும்ப வாழ்வு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடுகிறதாம்.

மனைவியை விட கணவனுக்கு 9 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இடைவெளியும் திருமண முறிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

குழந்தைகள்

திருமணத்திற்கு முன்பே இதே துணை அல்லது வேறு துணை மூலம் குழந்தைகள் இருந்தால் மணமுறிவிற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.


கணவனை விட அதிகமாகக் குழந்தை வேண்டும் என மனைவி ஆசைப்பட்டாலும் பிரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என இவ் ஆய்வு கூறுகிறது.

தம்பதிகளின் பெற்றோர்

தம்பதிகளின் பெற்றோரின் வாழ்க்கை முறையும் திருமண வாழ்வைப் பாதிக்கிறது.
தம்பதிகளில் எவர் ஒருவரின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப் பெற்றிருந்தாலும் மணமுறிவிற்கு வாய்ப்பு அதிகமாகிறதாம்.

ஏற்கனவே வேறு திருமணம்

முதல் திருமணத்தை விட இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்தவர்களின் மணவாழ்க்கை முறிவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகம் எனச் சொல்கிறது ஆய்வு.

குடும்ப வருமானமும் வசதியும்

பணத்திற்கும் திருமண உறவு நீடிப்பதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. வறுமையில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியாக பலமான நிலையில் இருப்பவர்களை விட அதிகமாகப் பிரிய நேர்கிறதாம்.

அதே போல கணவன் வேலைவாய்ப்பு இன்றி இருந்தாலும் மணமுறிவு அதிகம். ஆனால் மனைவி வேலைவாய்ப்பு இன்றி இருந்தால் அவ்வாறு பிரிவு ஏற்படுவதில்லை என்பது கவனிப்புக்கு உரியதாகும்.

புகைத்தல்

தம்பதிகளில் ஒருவர் புகைப்பராக இருந்தாலும் குடும்பம் பிரிவதற்கான சாத்தியம் அதிகமாம். ஆனால் இருவருமே புகைப்பவராக இருந்தால் அவ்வாறு இல்லை என்கிறது இவ் ஆய்வு.

நீங்கள் புகைப்பவராக இருந்து அதனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறதா?
அவ்வாறாயின் மணமுறிவைத் தடுக்க என்ன செய்யலாம்.

சுகமான வழி மனைவிக்கும் புகைக்கப் பழக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணுகிறீர்களா?

உண்மைதான்!

இருவருமே புகைப்பதனால் பிரிவதற்கான வாய்ப்புக் குறைந்துவிடும்.
அத்துடன் 'இருவருக்குமே இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் விரைவிலேயே தீர்ந்து இறைவனடி சேர்ந்துவிடலாம்!'.

மதுப் பாவனை

அதீத மதுப் பாவனையும் அத்தகைய நிலையை ஏற்படுத்துமா என்பதையிட்டு ஆய்வு எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவும் மணமுறிவிற்கு காரணமாவதை எமது சூழலில் காணக் கூடியதாக இருக்கிறது.

எமது சூழலுக்கு ஏற்ற ஆய்வு தேவை

இந்த ஆய்வின் முடிவுகள் அவுஸ்திரேலிய சூழலைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளன. எமது சூழலுக்கு இவற்றில் சில பொருத்தம் அற்றவையாகும்.

  1. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை,
  2. மாமியார் மருமகள் பிணக்குகள்,
  3. புலம் பெயர்ந்த வாழ்வு,
  4. கணவன் அல்லது சில வேளைகளில் மனைவி வெளிநாடு சென்றுவிட மற்றவரின் தனிமை வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்,
  5. திருமணத்திற்கு அப்பாலான தகாத உறவுகள்

போன்றவை எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன
என்பதை இங்கு ஆய்வு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.

வறுமையும், பொருளாதாரத்தில் குறைந்த நிலையும் மணமுறிவுகளுக்குக் காரணம் என மேற்கத்தைய ஆய்வு சொல்கிறது.

ஆனால் எமது சூழலில், மிகவும் வறிய சூழலிலும் மிகவும் இனிமையான, அன்னியோன்யமான கணவன் மனைவி உறவைக் காண்பது சகசம். ஆயினும் இங்கு பணம் நிறைந்த, செல்வச் செருக்கு மிக்கவர் மத்தியில் அதிக மணமுறிவுகள் ஏற்படுவதாக எனக்குப் படுகிறது.

பதினாறு பெற்ற குசேலர் வறுமையின் எல்லையிலும் மகிழ்வாக வாழ்ந்ததாகவே கதைகள் கூறுகின்றன.

ஜாதகப் பொருத்தம்

இவை எதுவும் காரணங்கள் அல்ல.

சரியான ஜாதகப் பொருத்தம் பார்க்காததே காரணம் என்று சொல்லும் அதி மேதாவிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

வெட்கப்பட்டால் வேலைக்காகாது. - வெள்ளைபடுதல் (மகளிர் மட்டும்)

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்

மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

"இந்தப் பிள்ளை மெலிஞ்சு கொண்டு போறாள்....
சோம்பிக் கொண்டு கிடக்கிறாள்...பசியும் குறைவு...."
நேரடியாக விடயத்திற்கு வராது சுற்றி வளைத்துக் கொண்டிருந்தாள் அம்மா.

சற்று மெல்லிய தோற்றம் கொண்டவளாயினும், மகளின் முகத்தில் நோயின் வாட்டம் தென்படவில்லை. அழகாக, திரட்சியாக பதின்ம வயதுகளின் கவர்ச்சியுடன் தோன்றினாள்.

மகளிலிருந்து கண்ணை விலக்கி அம்மாவில் பார்வையைப் பதித்தேன். சற்று முன் நகர்ந்த அம்மா தனது குரலைத் தாழ்த்தி.....

"இவளுக்கு சரியா வெள்ளை படுகுது. உருகிக் கொண்டு போறாள்."

வெளிப்படையாகப் பேசுங்கள்.

இவர்கள் சற்று வெட்கப்பட்டவர்கள். காலம் மாறிவிட்டது.
இன்றைய இளம் பெண்கள் பலர் தாயின் துணையின்றித் தனியாகவே வந்து தங்கள் பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு முன்னேறிவிட்டார்கள்.

தன்னம்பிக்கை வளர்ந்து விட்டது.
திருப்தியடையக் கூடிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலியல் உறுப்புகளில் அரிப்பு, வேறுநோய்கள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், பாலுறவின் போது ஏற்படக் கூடிய உடல் உளப் பிரச்சனைகள் என எதுவானாலும் மருத்துவருடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இது பொருந்தும்.

வெள்ளைபடுதல்

இந்த வெள்ளைபடுதல் என்பது பெரும்பாலும் நோயே அல்ல.
Vaginal Discharge என ஆங்கிலத்தில் சொல்வதை
நல்ல தமிழில் யோனிக் கசிவு எனலாம்.


பெண் பாலுறுப்பிலிருந்து சற்றுத் திரவம் கசிவது இயற்கையானது. வாயிலிருந்து எச்சில் ஊறுவது போன்றது.
வாய் எந்த நேரமும் ஈரலிப்பாக இருப்பதற்குக் காரணம் எச்சில்.

அதேபோல பெண்ணுறுப்பு அதன் சுரப்புகள் காரணமாக எப்பொழுதும் ஈரலிப்பாக இருக்கும்.

  • கிருமிகள் தொற்றாதிருக்கவும்,
  • உடலுறவின் போது இன்பம் அளிக்கவும்,
  • மகப்பேற்றின் போது துணையாக இருப்பதற்கும் இது அவசியம்.
எனவே குழந்தை பெற்றெடுக்கக் கூடிய வயதுகளில் மிகவும் அவசியமானது. விசனிக்க ஏதும் இல்லை.

உணவில் ஆசை ஏற்பட்டால் எச்சில் அதிகம் ஊறும்.
அதேபோல பாலுணர்வு மேலெழும்போது யோனியிலிருந்து சுரப்பது அதிகமாகும்.

பதின்ம வயதுகளில் பாலியல் உணர்வுகள் மெருகேறும்போது பையன்கள் தங்கள் ஆண்குறிகள் திடீர் திடீரென விறைப்படைவது கண்டு வியப்பிற்கும் குற்ற உணர்விற்கும் ஆளாவது போலவே பெண்பிள்ளைகளும் இந்த வெள்ளை படுதலைக் கண்டு அசூசை அடைகிறார்கள்.


தாய்மார் தங்கள் இளமை நினைவுகளை மீளநினைத்து தங்கள் பெண்பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பது முக்கியமாகும்.
ஆயினும் பல நோய்களாலும் யோனியிலிருந்து திரவம் கசியக் கூடும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சாதாரண வெள்ளைபடுதல்


சாதாரண வெள்ளை படுதல் என்பது சற்று வழவழப்பான எச்சில் போன்ற தெளிவான திரவமாகும்.
பிறப்பு உறுப்பில் உள்ள கருப்பைக் கழுத்திலிருந்து பெருமளவு சுரக்கும். அதேபோல யோனியின் சுவர்களிலிருந்தும் கசியும்.

சுரக்கும் போது இது வெண்மையாக இருந்தாலும் காற்றுப்பட்டதும் சற்று மஞ்சள் நிறமாகலாம்.
அதேபோல உள்ளாடைகளில் பட்ட பின்ரும் நிறம் மாறலாம்.
உடலிலுள்ள பெண்ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜின் இதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

வழமையாக ஓரளவு இருக்கும் இந்த வெள்ளைபடுதல் மனஅழுத்தங்களின் போது சற்று அதிகரிக்கலாம். ஏனைய மன அழுத்தங்கள் போலவே வெள்ளை படுதல் பற்றிய பய உணர்வும், அசூசை ஆகியவை உள்ளதை மேலும் மோசாமாக்கிவிடும்.

பல இளம் பெண்கள் மாதவிடாய்க்கு இடைப்பட்ட சில தினங்களில் இது அதிகமாவதை அவதானித்திருப்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நேரத்தில் இவ்வாறு கூடியளவு வெள்ளைபடலாம்.

கருவுற்று இருக்கும் காலங்களிலும் வெள்ளைபடுவது அதிகரிக்கும்.
முன்னரே குறிப்பிட்டது போல பாலியல் ரிதியான உணர்வுகள் கிளறும்போதும் வெள்ளை படுதல் அதிகரிக்கும்.

வேறு நோய்கள் காரணமாக

தொற்று நோய், புற்றுநோய், ஒவ்வாமை போன்ற பல காரணங்களலும் வெள்ளை படுதல் ஏற்படலாம்.
நீரிழிவு இருந்தால் பங்கஸ் தொற்று நோயாலும் தோன்றலாம்.

ஆனால் இவற்றின்போது பெரும்பாலும் அரிப்பு, எரிவு, கெட்ட மணம், போன்றவை சேர்ந்திருக்கும்.

நோய்கள் காரணமா?

வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதற்கு உரிய அறிகுறிகள் என்ன?

  • இதுகாலம் வரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைபடுதல்
  • அதன் நிறத்தில் மாற்றம்
  • அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
  • பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, சினப்பு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.
  • மாதவிடாய் இல்லாத தருணங்களில் வெள்ளையில் இரத்தக் கறையும் தென்படல்.
வெள்ளையுடன் இரத்தக் கசிவும் சேர்ந்திருந்தால் புற்றுநோயாகவும் இருக்கலாம். ஆனால் இது பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களிலேயே அதிகம் ஏற்படும்.

நீங்கள் செய்யக் கூடியவை என்ன?

உங்கள் பாலுறுப்பை சுத்தமாகவும் ஈரலிப்பு இன்றியும் வைத்திருங்கள்.

பல பெண்கள் உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் தமது உறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள்.

இது தவறான முறை. அவ்வாறு செய்யும்போது பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடும்.

மாதவிடாய் நேரங்களில் பாட்ஸ் (Pads) மட்டுமே உபயோகியுங்கள்.

உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (Tampons) கூடவே கூடாது



உள்ளாடைகள் எப்பொழுதும் பருத்தித் துணியால் ஆனதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
சில்க், நைலோன் போன்றவை ஈரத்தை உறிஞ்ச மாட்டாது.
அத்துடன் வியர்வையையும் உறிஞ்சமாட்டாது.
காற்றோட்டத்தையும் தடுக்கும். இவை காரணமாக அரிப்பும் தொடர்ந்து கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளும் கூடாது.

பாலுறுப்பை அண்டியுள்ள பகுதிகளில் வாசனை ஸ்ப்ரே, பவுடர் போன்ற பொருட்களையும் உபயோகிக்க வேண்டாம்.

ஈஸ்ட் கிருமித் தொற்று இருந்தால் லட்டோ பசிலஸ் உள்ள யோகட், தயிர் போன்றவற்றை உண்பது நல்லது. கடுமையான அன்ரிபயரிக் உபயோகிக்கும் போதும் ஈஸ்ட் தொற்றுதைத் தடுக்க உண்ணலாம்.

பாலுறவின்போது ஆணுறை உபயோகிப்பதன் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு இருந்தால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் கட்டுப்படுத்தி வையுங்கள். இல்லையேல் பங்கஸ் கிருமித்தொற்றும் ஏற்படும்.

எப்பொழுது டொக்டரிடம்

வெள்ளை படுதலுடன் காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை இருந்தால் கட்டாயம் மருத்துவரைக் காண வேண்டும்.

நீங்கள் உடலுறவு கொண்டவருக்கு சிபிலிஸ், கொனரியா, கிளமிடியா, எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் இருந்திருக்கலாம் என சற்று சற்தேகம் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

வெள்ளை படுதலுக்கு மேலாக பாலுறுப்புப் பகுதியில் அரிப்பு, சிறிய கொப்பளங்கள், புண் போன்றவை இருந்தால் நிச்சயம் மருத்துவ உதவி அவசியம்.

எனவே வெட்கத்தை விட்டொழியுங்கள். உங்கள் உடல் நலத்தைப் பேண உங்கள் மருத்துவருடன் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.

ஆணினம் மட்டும் அழியும் காலம் நெருங்கிவிட்டதா?

உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.
சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்.
ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.

முடியாதபோது இவன் ஆண்மையற்றவன் எனத் துணையும் தூற்றுகிறாள்.   
ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் தரமும்தான்.


விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவைகளுடன் நீச்சல் போட்டியிட்டு முந்திச் சென்று பெண்ணின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்.


விந்தணுக்கள் தரமானதாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தால்தான் அவனால் தகப்பன் ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மலடன் ஆகாது தப்பி ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க முடியும்.

'மலடி மலடி என வையகத்தார் ஏசாமல்..' என்றொரு திரைப் பாடல் முன்பு பிரபலமாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் 'மலடன் மலடன் என வையகத்தார் ஏசாமல்..' என தங்களது ஆரோக்கியத்தையும் ஆண்மையையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆண்கள் இருக்கிறார்கள். 

விந்தணுக்களின் வீழ்ச்சி

ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லிலீட்டர் விந்தில் 40 மில்லியன் இருக்க வேண்டும். பொதுவாக ஆண் உறவின்போது வெளிப்படுத்தும் விந்து 2-6 மில்லிலீட்டர் அளவாக இருக்கும். 1940 களில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல் இருந்தது. ஆயினும் இன்று சராசரியாக 60 மில்லியனாகக் குறைந்து விட்டது. 

ஆனால் மிகவும் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இன்றைய இளம் வயது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து வருவதுதான்.

இன்றுள்ள வாலிபர்களில் 15 முதல் 20 சதவிகிதமானவர்களின்  விந்தணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவாக இருப்பது நல்ல செய்தியல்ல.

அத்துடன் அவர்கள் உற்பத்தி செய்யும் விந்தணுக்களில் தரமும் தாழ்ந்துவிட்டது.

5 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே சாதாரண (Normal) நிலையில் இருக்க மிகுதி யாவும் அசாதாரண (Abnormal) விந்தணுக்களாக இருக்கின்றன.

இது இனவிருத்திக்குப் போதாது.

ஏனைய பாலூட்டிகள்

ஏனைய பாலூட்டி மிருங்கங்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாகவே மனிதனின் விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக எருதுகளின் விந்தணுக்களின் எண்ணிக்கை மில்லியன்களாக அன்றி பில்லியன் கணக்கில் இருக்கின்றன.

அத்துடன் மனிதரில் சாதாரண விந்தணு எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக இருக்க எருதுகளிலோ அது 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது.

மலட்டுத்தன்மையை நோக்கி

இத்தகைய காரணங்களால் மனிதர்களில் இனவிருத்தி குறைந்து கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.

இதில் பெரும்பாலான தம்பதியினரக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது. போதியதும் தரமானதுமான விந்தணுக்குள் இல்லாமைக்கு பல காரணங்கள் சொல்லலாம். 
  • விதைப்பையிலுள்ள நாளங்கள் புடைத்திருப்பது (Varococele) முக்கிய காரணமாகும். இது கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) நோயை ஒத்தது.
  • பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
  • பாலியல் நோய்த் தொற்றுகள். குpளாமிடியா, கொனரியா, சிபிலிஸ் போன்றவற்றால் விந்தணு பயணம் பண்ணும் குழாயில் தடிப்புகள் ஏற்பட்டு பாதை தடைப்படலாம்.
  • கூகைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி), புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்று, சலக்குழாயில் தொற்று போன்றவையும் காரணமாகலாம்.
  • ஆண்மைக் குறைபாடு மற்றொரு காரணமாகும். ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் குறைபாடு (testosterone Deficiency) முக்கியமானது.
  • வாழ்க்கை முறைகள் காரணமாகின்றன. உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையக் காரணங்கள்


  1. இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து அணிதல், நீண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்திருத்தல் போன்றவற்றால் விதைப்பையின் வெப்பம் அதிகமாகி விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. விதைகள் விதைப்பையுக்குள் இறங்காமை.
  2. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்நன.
  3. வேலை நெருக்கடி, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வாரத்திற்கு 2 -3 தடவைகளாவது உடலறவு வைக்க முடியாது போவது கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக மற்றொரு காரணம் இப்பொழுது முன்வைக்கப்படுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக
  • அவனது தாயின் அல்லது 
  • பெற்றோரின் தவறான வாழ்க்கைமுறைதான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுணர்கள்.
கருவில் வளரும்போதே மலடாவதற்கான விதை விதைக்கப்படுகிறது என்பதுதான். 

விந்தணு உற்பத்தி

விந்தணுக்ளின் உற்பத்தி Spermatogenesis பதின்ம வயதில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கான அத்திவாரம் அவன் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது.

அதாவது விதைகளின் விருத்தியானது கருவாக இருக்கும்போதே ஆரம்பித்து 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே முற்றுப் பெறுகிறது.

எனவே இந்தக் காலகட்டத்தில் அதன் விருத்திக்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால் பின்பு வாழ்நாள் முழுவதும்  அவனது குழந்தை பெறும் ஆற்றல் பாதிப்படையும்.

புகைத்தல்

விந்தணுக்கள் குறைவதற்கு வேறு காரணங்களும் உண்டா? புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண்மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது விந்தணு எண்ணிக்கை 15 சதவிகிதத்தால் குறைவடையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும் புகைத்தலை நிறுத்தினால் அது மீண்டும் வழமை நிலையை அடையும். ஆயினும் அவனது தாயானவள் கருவுற்றிருக்கம் நேரத்தில் புகைத்திருந்தால் அது 40 சதவிகிதம் குறையும்.

இது முக்கிய கண்டுபிடிப்பு. ஆயினும் விந்தணு குறைந்த எல்லோரது தாய்மார்களும் புகைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தந்தை புகைப்பதால் அதன் பாதிப்பு தாயின் ஊடாக கருவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது பற்றி அந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆயினும் அதற்கான சாத்தியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

வேறு காரணங்கள் இருக்கலாமா?

  • உணவு முறை மாற்றங்கள், 
  • உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை,
  • இயற்கையோடு இசையாத வாழ்வு,
  • சூழல் மாசடைதல்,
  • காலநிலை மாற்றங்கள்
என எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்கள் இன்று மனித குலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றின் தாக்கங்கள் யாவை? இவை போன்றவற்றாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாமா என்பதையிட்டும் ஆய்வுகள் அவசியம். 

பெண்களில்

அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்தங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுயிலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காலாக உள்ளன. இவற்றில் பலவும் தவறான வாழ்க்கை முறைகளின் பயனே.

எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப்பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அதற்கு வழிபோலத் தெரிகிறது.