Tuesday, December 21, 2010

மொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் வசதி துவக்கம்


மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி வைத்தார்.

மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு தக்க வகையில், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும் அவ்வப்போது, புதுப்புது சேவைகளை, சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக சேவை மற்றும் சலுகை வழங்கும் நிறுவனத்திற்கு தாவி விடுகின்றனர். அப்படி தாவும் போது, மொபைல் போன் நம்பரை அடிக்கடி மாற்றும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இரண்டு ஆண்டு இழுபறிக்கு பின், இந்த புதிய வசதியை அரியானாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment