Tuesday, December 21, 2010

சர்க்கரை நோய் (Diabetes )

நீரிழிவு நோய்

எமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (யவாநசழளஉடநசழளளை) இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய்  மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவில் மூன்று வகைகள்

முதலாவதுவகை

முதலாவதுவகை (Type I Diabetes) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 10% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை 1 இனால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாவது வகை

இரண்டாவது வகை நீரிழிவு (Type II) இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை (Resistance) ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைவதாலும் சாப்பாட்டுக கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகை

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

குருதியில் உள்ள வெல்லம் கலன்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

பல காரணங்களால் இது நிகழலாம்.
  • தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
  • இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
  • அடிக்கடி தாகம்
  • அதிக பசி
  • மிக வேகமாக எடை குறைதல்
  • அதிகமாக சோர்வடைவது
  • கண்பார்வை மங்குதல்
  • வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
  • திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.
  • பார்வை இழப்பு
  • மாரடைப்பு
  • சிறுநீரகக் கோளாறு
  • பக்கவாதம்
  • கால்களை இழத்தல்
  • கோமா மற்றும் இறப்பு.
நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்

சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
 
உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் ”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
 
    கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான பசி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி மயக்கம் வருதல்.

சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
 
சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை. சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண் ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது, களைப்பு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
 
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும் தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்) சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல் கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து கொள்ளுதல் போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட தேவையில்லை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற உணவுகளை உண்ணலாம்.

1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர், சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய், வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை, அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.


2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி, டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.
 
3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது) அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா (சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம், பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2, அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25, தக்காளி - 6.

4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும், மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 வாழைக்காய், அனைத்து கிழங்கு வகைகள், இனிப்பு பதார்த்தம், சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, தேன், குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு நிறைந்த பிஸ்கெட், பால்கோவா,  ஜெல்லி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா, பாட்டில்களில் வைத்து விற்கப்படும் அனைத்து பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள், வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில், எண்ணெய் அதிகளவில் சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ, உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.
 
* உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

* வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.

* HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாதத்திற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சராசரியைக் காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது, 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள், 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு, 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை, 10% க்கு மேல் கட்டுப்பாடு மிக மோசம்.
 
 
* உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.

* உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

* உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பு காலை நெருக்காத அளவுக்கு தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.

* கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

* இரத்த அழுத்தத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.

* வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள். எல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்!

No comments:

Post a Comment