Tuesday, December 21, 2010

உங்கள் எடை குறைய வேண்டுமா?


 எடை குறைய எளிய வழிகள்

              அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.


தண்ணீர் வைத்தியம்:

              தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.
  
 தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.

1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் சூட்டில் அருந்துகிறீர்களோ அந்த அளவு சூடு) ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.
 

2. காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.

3. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் மீண்டும் (குறைந்தது) ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே குறைந்தது அரை லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளுதல் வேண்டும்

4. மறுபடியும் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும் நீரருந்த வேண்டும்.
முடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு,கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

உணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள்:

           காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். முடிந்தால், காபி/டீ குடிப்பதற்குப் பதில் ஒரு தம்ளர் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி(spoon) தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப் பானம் கரைக்கிறது.
 

அதெல்லாம் முடியாது. எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள்? அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? சரி, சர்க்கரையைத் தவிருங்கள். 

மிகக் கடினமாகத் தோன்றுகிறதா? அழகான, 'சிக்'கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள். 

 
அடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள். 

கூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).
 

பொரித்த உணவுவகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது, உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். 

சிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது,அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை,  போன்றவற்றைச் சாப்பிடவும். 


இனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப்புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.
 
 காலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியோர் வாக்கைப் பின்பற்றுங்கள். காலை உணவில் பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய்கறிகளையும் (காரட், வெள்ளரி, முட்டைக்கோசு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி) அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும் பாலும் மட்டும் சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளுங்கள். 

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட (aerated) குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சைச் சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.
 

எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.
 

இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக (அதாவது எட்டு - எட்டரை மணியளவில்) முடித்துக்கொள்ளுதல் நலம்.
 

தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு/அல்லது கணிணியில் பணி புரிந்து கொண்டு (வேறு எங்கோ கவனமாக) சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.
 

உணவை சிறு சிறு அளவுகளாகப் பரிமாறிக்கொண்டு, நிதானமாக மென்று, சுவைத்துச் சாப்பிடவும். அவசர அவசரமாகச் சாப்பிடும்பொழுது, நாம் உணவருந்திவிட்ட செய்தி உடனே மூளைக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. அதனால், பசி அடங்காதது போலத் தோன்றுகிறது. இதன் காரணத்தால் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. உணவின் அளவு அதிகரிப்பதால், உடலில் தங்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும்.

இன்றைய வாழ்வில் சத்து இல்லாத சுவையான உணவுகள் ரொம்பவே அதிகம். உதாரணமா மைதா. மைதா உணவுகளான கேக்,பீட்சா,ப்ரெட், பஃப்ஸ் ,அப்புறம் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப் பட்ட உணவுகள்.. குறிப்பா ஹோட்டல் உணவு எல்லாமே அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட தாகத்தான் இருக்கும். 

அதிலும் இந்த வட இந்திய உணவு புல்கா,ரொட்டி,(மைதா உணவு).. அப்புறம் அதற்கான சைட் டிஷ் அப்பப்பா எண்ணெய் மிதக்கும். இதை ஹோட்டலில் சாப்பிடும் போது தெரியாது.. பார்சலாக வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டால் நன்றாக உணரமுடியும்.. இரண்டு டீ ஸ்பூன் அளவு எண்ணெய் தனியாக பிரிந்து நிற்கும். பின் இனிப்பு வகைகள்,எண்ணெஇயில் பொறிக்கப்பட்ட உணவுகள்.. 

இந்த உணவுகளை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மேலும் வயதிற்கு ஏற்ப சாப்பிடவும் பழக வேண்டும்.

No comments:

Post a Comment