Sunday, January 9, 2011

மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை;

ஈரானில் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை; உடலில் பச்சை குத்தக் கூடாது

ஈரானில்   மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை;    உடலில் பச்சை குத்தக் கூடாது

ஈரானில் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.   முஸ்லிம் நாடான ஈரானில் கல்லூரி மாணவிகள் உடை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி ஆடைகள் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக் கூடாது.
நீளமான நகம் வளர்த்து அவற்றில் சாயம் பூசக் கூடாது. மிகவும் பிரகாசமான வண்ண ஆடைகளை அணியவோ, உடலில் பச்சை குத்தவோ கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவிகளுக்கு மட்டு மின்றி மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் தங்கள் தலை முடிகளில் சாயம் பூசக் கூடாது. கண் இமைகளை சரி செய்யக் கூடாது. மாணவிகளை கவரும் வகையில் இறுக்கமான ஆடைகள், சட்டைகள் மற்றும் கையில்லா சட்டைகள், நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தலையில் துணியின்றி தொப்பி அணிய கூடாது. மேலும் உடல் தெரியும்படி இறுக்கமான மற்றும் குட்டையான ஜீன்ஸ் அணிய கூடாது. நீளமான நகம் வளர்க்கவோ, இறுக்கான ஓவர் கோட் அணியவோ, கண்ணை  பறிக்கும் உடைகளை அணியவோ கூடாது. காதுகளில் வளையங்கள் மட்டும் அணியலாம். அவை தவிர டம்பர நகைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் பரவுதலை தடுக்க ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இது குறித்து பிரசாரம் செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

எத்தனை வீடியோ பார்மட்கள்



செஞ்சியிலிருந்து ஒரு வாசகர், வீடியோ பார்மட்கள் குறித்து அவருக்குள்ள சந்தேகத்தினை எழுதி உள்ளார். ஏன் சில பார்மட்கள், குறிப்பிட்ட பிளேயரில் பிளே ஆகவில்லை என்று கேட்டு எழுதிவிட்டு, கோடெக்  இல்லை என்று மெசேஜ் காட்டப்படுவது எதனால்? என்று கேட்டுள்ளார். இந்த கோடக் சமாச்சாரம் எல்லாம் இல்லாமல், ஒரு வீடியோ பைலைக் கிளிக் செய்தால், எந்த பிளேயரும் அதனை இயக்கும் வகையில் ஏதேனும் வழி உள்ளதா? 

அவரின் ஆதங்கம் அவருக்கு மட்டுமல்ல, பல வாசகர்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளனர். தொலைபேசியிலும் கோடெக் குறித்த சந்தேகங்களைக் கேட்டுள்ளனர். இவற்றுக்கான தீர்வு ஒன்றை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதனையும் இணைத்து விளக்கம் தர எண்ணி இதனைத் தருகிறேன். 

உங்களிடன் ஒரு எம்பி3 ஆடியோ பைல் இருந்தால், அநேகமாக அனைத்து ஆடியோ  பிளேயரும் அதனை இயக்கும். அதே போல ஜேபெக் வடிவில் உள்ள பட பைலை எந்த பிக்சர் வியூவர் பைலும் இயக்கிக் காட்டும். 

ஆனால் . avi, .mpeg, , போன்ற வீடியோ பைல் இருந்தால், அனைத்து வீடியோ பிளேயரும் அவற்றை இயக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. இன்னும் சொல்லப் போனால், இவை எல்லாம் வீடியோ பார்மட் இல்லை. டேட்டாவினை மற்ற பார்மட்களில் கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்த பைல் வகைகள் எல்லாம், ஆடியோவினை ஒரு பார்மட்டிலும், வீடியோவினை இன்னொரு பார்மட்டிலும் (கோடெக்) கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, ஒரு ஏ.வி.ஐ.பைல்  (.avi),), மோஷன் ஜேபெக் வீடியோ  மற்றும் பி.சி.எம்.  டியோ பார்மட்களைக் கொண்டிருக்கலாம். இன்னொரு பைலில் எக்ஸ்விட் எம்பெக் 4 வீடியோ பார்மட்டும்  IMAADPCM பார்மட்டில் ஆடியோவும் இருக்கலாம். வேடிக்கையாக ருக்கிறதா? மேலும் படியுங்கள்.

இதனால் தான் ஒரு .ச்திடி பைல், விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கப்படலாம். இன்னொரு பிளேயர், பைலில் உள்ள ஆடியோவினை மட்டும் இயக்கும்; வீடியோ கிடைக்காது; அல்லது மாற்றாகவும் இருக்கலாம். சில பிளேயர்  ஒரு பைலில் உள்ள எதனையும் இயக்காமல் இருக்கலாம். 

ஒரு வீடியோ பைல் எந்த வகை கோடெக் பார்மட்டினைக் கொண்டுள்ளது என்பதனை எப்படி அறிவது? வெளிப்படையான ஒரு வழி உள்ளது. பைலின் மேலாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் டீடெய்ல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது. இங்கே, வீடியோவின் நீளம், ரெசல்யூசன், வீடியோ மற்றும் ஆடியோ பிட் ரேட் ஆகிய தகவல் கிடைக்கும். ஆனால் மிக முக்கியமான கோடெக் குறித்த தகவல் இருக்காது அல்லது கிடைக்காது. இந்த தகவல் தானே, ஒரு வீடியோ பிளேயரை இயக்க தேவையானது. பின் ஏன் மைக்ரோசாப்ட் சிஸ்டம் அதனைக் காட்ட மறுக்கிறது? கண்ணா மூச்சி விளையாட்டு ஏன்?
எப்படியோ? விண்டோஸ் வீடியோ பைலுக்கான கோடெக் குறித்து வாய் திறக்க மறுக்கிறது என்பதால், நமக்கு இதனை அறிய ஒரு தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவையாய் உள்ளது.  நான் அறிந்த வகையில் ஒரு சிறந்த புரோகிராம் AVI Codec என்பதாகும். இது மிக எளிமையானது மட்டுமின்றி இலவசமானதும் கூட. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலிலும், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று,   அதன் மீது ரைட் கிளிக் செய்து AVIcodec: detailed informationஎன்பதனைத் தேர்ந்தெடுத்து, அதனை புரோகி ராமிற்குள் லோட் செய்திடும்படி செய்திடலாம். ஏற்கனவே ஏதேனும் கோடெக் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், இது பலனளிக்காது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட பைலை, புரோகிராமிற்குள் ட்ராப் செய்து கொண்டு வரலாம். 

இவற்றையும் மீறி கூடுதல் கோடெக் பைல் தேவை எனில்,  WindowS Essentials Codec Pack தொகுப்பினை டவுண்லோட் செய்திட வேண்டும்

டிஜிட்டல் புரட்சியில் இந்தியா

சென்ற பத்தாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் உலகம் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை,குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு வளர்ந்தது. பிராட்பேண்ட் வழி இணையத் தொடர்பு என்ற ஒரு பிரிவில் மட்டுமே, இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக உள்ளது. 
தொலைதொடர்பு: டெலிகாம் எனப்படும் தொலை தொடர்பு பிரிவில் அசாத்தியமான வளர்ச்சியை இந்தியா சென்ற பத்தாண்டுகளில் கண்டது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல 110 மடங்கு அதிகரித்துள்ளது. தரை வழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. 
இணையம்: இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பன்னாட்டளவில் தங்கள் முத்திரையைப் பதித்தாலும், இந்த பிரிவு பயனாளர் எண்ணிக்கை குறைவான வளர்ச்சியையே கண்டது. மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60.99% ஆக இருக்கையில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 0.8% (செப்டம்பர் 2010)மட்டுமே. 2001ல் 90 லட்சம் பேர் இணைய சந்தாதாரர்களாய் இருந்தனர். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அறிந்தவர் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சம். 

2010ல் எதிர்பார்ப்பு: 2010 செப்டம்பரில் 8.8 கோடி பேர் இணைய சந்தாதாரர்கள். மார்ச் 2011ல் இது 10 கோடியாக உயரும். 2020ல் இது 50 கோடியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு, வடிவமைப்பு, நிறுவனங்கள் செயல்பாடு சென்ற பத்தாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பல துறைகளில் முன்னேறியது. அந்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
2001-2004: கூகுள் நிறுவனம் தன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவினை பெங்களூருவில் நிறுவியது. பாஸி.காம்(Baazee.com) என்ற நிறுவனத்தை இ-பே நிறுவனம் ரூ. 250 கோடிக்கு வாங்கியது. இணைய வழி திருமணத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தளங்களில் பதிந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தினை எட்டியது. 
2005-2007: இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.85 கோடியிலிருந்து 54% கூடுதலானது. 
இணைய வழி வர்த்தக விற்பனை ரூ. 7,080 கோடியை 2007 ஆம் ஆண்டில் எட்டியது. 
இந்தியாவில் 3.2 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்தன. 
இணையவழி வங்கிப் பரிவர்த்தனைகளை, 46 லட்சம் இந்தியர்கள் மேற்கொண்டனர். 
2008-2010: கூகுள் தன் பல இணைய தளப் பிரிவுகள் மூலம் விசுவரூபமாக இணையத்தில் இடம் பிடித்தது.
2008ல் இந்திய இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 4.5 கோடியானது. 
2009ல் இந்தியாவில் பேஸ்புக் நுழைந்தது.
மைக்ரோசாப்ட் பிங் மற்றும் கூகுள் குரோம் அறிமுகமாயின.
யு-ட்யூப் மூலம் ஐ.பி.எல். விளையாட்டுகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. 
இந்திய நிறுவனங்களின் வருமானத்தில், 4.4% இணைய விளம்பரங்கள் மூலம் வரத் தொடங்கியது. 
2011ல் இணையமும் மொபைல் பிரிவும்: மிக நம்பிக்கையுடன் நல்ல வளர்ச்சியை இந்த இரு பிரிவுகளும் எதிர்நோக்குகின்றன. நல்ல முறையில் மேற்கொள்ளப்படும் இணைய வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு மற்றும் பிராட்பேண்ட் பயனாளர் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக கிராமப் புறங்களில் இவற்றைக் கொண்டு செல்வதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 3ஜி சேவை சிறப்பான பயன்பாடு பயனாளர்களுக்குக் கிடைக்கும். குறைவான கட்டணத்தில் வரையறை இல்லாத இணைப்பு தருவதில் நிறுவனங்களிடையே போட்டி ஏற்படும்.
டிஜிட்டல் பொழுது போக்கு: பொழுதுபோக்குவதில் நிகழ்ச்சிகளைத் தருவதில், தொலைக்காட்சி தொடர்ந்து முன்னிலையைப் பெற்றிருந்தாலும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் மற்றும் ஐ-பாட் போன்ற சாதனங்களும் இப்பிரிவில் கணிசமான செயல்பாட்டினை வருங்காலத்தில் மேற்கொள்ளும். இதன் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.
2002-2003: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களை சாட்டிலைட் மூலம் தரும் டி.டி.எச். சேவை, 2000 த்தில் தொடங்கப்பட்டது. தூரதர்ஷன் முதல் முதலாக 46 லட்சம் பயனாளர்களைப் பெற்றது.
2001: எச்.பி.ஓ., ஹிஸ்டரி சேனல், கார்ட்டூன் நெட்வொர்க், வி.எச்.1 மற்றும் டிஸ்னி சேனல்கள் இந்தியாவில் நுழைந்தன.
2003: டிஷ் டிவி தன் சேவையைத் தொடங்கியது. 
2004: திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் ரூ. 30,800 கோடியை எட்டியது. 
2005: வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக ரேடியோ ஒலிபரப்பு பிரிவில் முதலீடு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. ரிலையன்ஸ் ரேடியோ மற்றும் பொழுது போக்குப் பிரிவில் நுழைந்தது. 
2006-07: அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்., ஐ.பி.டி.வி. சேவையைத் தொடங்கின.
2007-09: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களைப் பெறுபவர் எண்ணிக்கை 3% ஆக 2007ல் இருந்த பயனாளர் எண்ணிக்கை,2009ல் 2 கோடியாக உயர்ந்தது.
2008ல் ஹோ ம் வீடியோ, கேபிள் மற்றும் சாட்டலைட் உரிமை பிரிவுகளில் வர்த்தகம் ரூ.714 கோடியைப் பெற்றுத் தந்தது. விளையாட்டு தொகுப்புகள் விற்பனை மூலம் ரூ.650 கோடி கிடைத்தது. 
2010ல் பொழுது போக்கு பிரிவு வருமானம் ரூ.22,200 கோடியாக உயர்ந்தது. ஆனால் மியூசிக் பிரிவு வருமானம் ரூ.1,350 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைந்தது. 


ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும்

"எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து தாராதையுங்கோ.' என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி.
அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள்.
அது உண்மைதானா?
இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன்.
ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு.
ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Alle rgy).
எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும்.
அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும்.
அல்லது மாறி மாறி வரவும் கூடும்.
உதாரணமாக ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும் எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும் கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான கருத்தாகும்.
அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட் களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergans) என்பார்கள்.
அது உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அவ்விடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் அங்கு நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்ததே நோய்.
உதாரணமாக ஒருவருக்கு பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
அதே நேரம் சுவாசத் தொகுதியின் உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பபூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும்.
இறப்பர் செருப்பு, ஒட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
அவ்வாறெனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா?


அலர்ஜிக்கான சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள் (immunotherapy)அத்தகையன. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல முடியாது.
ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும்.
ஆஸ்மா, எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன் றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும்.
உதாரணமாக கோர்ட்டிகோ ஸ்ட்ரொயிட் (corticosteroids) வகை மருந்துகளைக் குறிப்பிடலாம்.
ஆயினும் அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை Nasal spray ஆகப் பயன்படுத்தப்படும்.
ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் (Inhaler) ஆகவும்,
எக்ஸிமாவிற்கு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும்.
மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator)ஆஸ்மாவிற்கு மட்டுமே பயன்படும்.
யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்? பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள்கள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும்.
ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல.
உடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா(exercise - induced asthma),
தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா,
இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது,
தானாகவே ஏற்படும் (intrinsic)வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

70 வயதில் 50கிலோ எனில் 35 ல் எவ்வளவு எடை ?



குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அம்மம்மா, அம்மா, அப்பா, பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகள். 

அனைவருக்கும் வருத்தம் என்றில்லை. அம்மம்மாவிற்குத்தான் வருத்தம். 

வீட்டில் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு வர முடியாது. 

ஓன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும். 
காயங்கள் தேடும். 
பொருட்களை உடைக்கும். 

எனவே அனைத்துப் பிரளிகளும் செய்வதற்காக இங்கு கூட்டி வந்திருந்தார்கள். 

பிரஷர் மீட்டரின் பல்பை பிடித்து காற்று அடித்துக் கொண்டிருந்தது ஒன்று. 
பரிசோதனைக் கட்டிலை நாட்டிய மேடையாக்கி அக்கறையுடன் பயிற்சி எடுத்தது மற்றொன்று. 
வாயிற் கதவுப் பிடியை முறுக்கி ரிப்பயர் செய்து கொண்டிருந்து கடைசி. 

நீரிழிவு, பிரஷர், கொலஸ்டரோல் என அனைத்தும் அம்மம்மாவிடம் தஞ்சம் புகுந்திருந்தன. 

சுகர், பிரஸர்,இருதயம் எனப் பலவும் சோதிக்க வேண்டியிருந்தன. 

அவவைப் பரிசோதிப்பதற்கு மேலாக 
எனக்கு 
மூன்று சோடிக் கண்கள் தா இறைவா 
என வேண்டிக் கொண்டேன். 

ஏதாவது உடைகிறதா, முறிகிறதா என ஒரே நேரத்தில் அவதானிக்க! 

மருந்தறையில் குழந்தைகளின் கூப்பாட்டு சத்தத்தில் எனது வேண்டுதல் இறைவன் காதில் விழவே இல்லை. 

நான் சற்றுத் திரும்பி எடை பார்க்கும் கருவியை எடுத்து அதில் அம்மம்மாவை ஏற்றி எடை பார்க்க முயன்றேன். 

திடீரென சைலன்ஸ் பீரியட் பெல் அடித்தது போல சத்தங்கள் அடங்கி அமைதி குடிகொண்டது. 

எல்லோர் கண்களும் திரும்பி அம்மம்மாவற்கு நடப்பதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன. 

எடை பார்த்து முடிய அம்மம்மா Weighing Scale லிருந்து இறங்கினா? 


பாடசாலை விடும் கடைசி பெல் அடித்தது போன்று பல்வேறு ஸ்தாதியில் குரல்கள் ஒரே நேரத்தில் விண்ணை அடக்க எழுந்தன. 

'நானும் பார்க்கப் போறன்.' 

'என்னை முதலில் விடு.' 

' இறங்கு கெதியா இல்லாட்டல் பல்லை உடைப்பன்' 

ஓசைகளின் அமர்க்களத்தில் ஒரு சிலதான் காதில் விழுந்தன. 

எல்லோரது எடைகளும் பார்த்து முடிய Weighing scaleஅனுங்கியது 

அம்மமாவின் எடை 50 கிலோ. அதனை பதிந்த கொண்டே 'உங்கடை நிறை சரியாக இருக்கு என்ற போது, 
'அப்ப என்ரை வயசுக்கு நிறை எவ்வளவு இருக்க வேண்டும்' 
என்று கேட்டாள் மகள். 

'அம்மம்மாவிற்கு வயது 70. நிறை 50 கிலோ. 
உங்கடை வயது 35 இருக்கும். 
அப்ப நிறை அரைவாசிதானே. 25' என்றேன் 
கிண்டல் வெளிவராத தொனியில். 

'சும்மா பகடி விடாதயுங்கோ டொக்டர். 10 வயது மகளுக்கே 25க்கு மேலை' 

புரிய வைப்பதற்காக சொன்ன பகடிதானே. 

'15 16வயது வரைதான் வயசுக்கு ஏற்ற எடை பார்க்கிறது. 
அப்பவும் அவர்களுடைய உயரத்தையும் கவனத்தில் எடுப்போம். வளர்ந்தவர்களுக்கு அவர்களது உயரத்திக்கு ஏற்பவே எடை பார்க்க வேண்டும்' 
உண்மையில் உடையை விட உடற்திணிவையே இப்பொழுது(Body mass index) முக்கியமாகக் கவனத்தில் எடுக்கிறார்கள். 

உங்கள் உடற் திணிவு எவ்வளவு, 
அது சரியானதா, கூடியதா, குறைவா 
என அறிய இங்கே 
கிளிக் பண்ணுங்கள் 

எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன

தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான். ஆயினும் ஒரு காலமும் ஆஸ்த்மா நோய் வராத சிலருக்கு ஆஸ்த்மா இருப்பதாகக் கூறியவுடன், நான் சொல்வது சரிதானா என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்ததை உணர முடிந்தது.


ஒவ்வாமை நோய்கள்

ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.

அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் 'கிரந்தி உடம்பு' என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

சுகாதாரமான சூழல் கோட்பாடு

அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?


(விளக்கப் படத்தை தெளிவாகப் பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணுங்கள்)

கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.

முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.

அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை!

கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.

ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.

நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)

தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.

தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.

அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.

ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.

இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.

மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.

ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.

இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.

ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்.

தேனும் ஒரு மருந்துதான்

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?.

மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும்.


இயற்கை மருத்துவம்


அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு உண்டாக்கும் விடயம் இது.


விடயம் இனிப்பானது, மிக இனிப்பான தேன் பற்றியது. தேன் போசாக்குள்ள பதார்த்தம். அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என நம்புகிறோம்.


ஆனால் இவை எல்லாம் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. அதற்கு மேலாக ஏதாவது ஆராய்சிகளால் நிறுவப்பட்ட, விஞ்ஞானபூர்வமான மருத்துவ குணங்கள் தேனுக்கு உள்ளதா?

விஞ்ஞான பூர்வ தகவல்கள்


காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் ஏற்ற சிறப்பான மருந்து இதுவென ஆய்வுகள் கூறுகின்றன.

தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது.

ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.

புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைந்து புதிய ஆராக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.

புண் குணமாகியதும் விரைவில் ஆராக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன. இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும்.

புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?


தேன் எவ்வாறு குணமாக்குகிறது


புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


1. தேனில் உள்ள கூடியளவு சீனியின் அதிக செறிவும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.


2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid) உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.


3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.

புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை


சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.
எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் மேல் இடும் தேனின் அளவு உலர்ந்து போகாத அளவிற்கு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.


தேனினால் சுத்தமும் செய்யலாம்


பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் சுத்தம் செய்த பின்பு தேனை இட்டுக் கட்டுவார்கள். மாறாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.


நெருப்புச் சுட்ட புண்கள்


நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்டும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.


வாய்ப் புண்கள்


வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant) என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.


20ம் நூற்றாண்டின ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக வளர்ந்திருக்கும் என்பது திண்ணம்.



பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.


தேனின் சிறப்பு அம்சங்கள் என்ன?


சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.


தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால்; நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.


தேனின் போஷனை

ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது.


மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.

கொழுப்புச்சத்து, கொலஸடரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் ((fructose 38.5%). குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.



பக்கவிளைவுகள்



தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.


ஆதாரமற்ற நம்பிக்கை


“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே” என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைளை ஆதாரமாகக் கொண்டு மருத்தவ விடயங்களில் தீர்மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.


சுத்தமான தேன் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையில்  கிடைக்கிறது

கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்


'இவள் எந்த நேரமும் ரீவீக்கு முன்னாலைதான். கண்கெடப் போகுது எண்டு சொன்னாலும் கேக்கிறாளில்லை.'


'மம்மல் இருட்டுக்கை கிடந்து கொண்டு படிக்கிறான். லைட்டையும் போடுறானில்லை. கண் பூந்தப் போகுது.'

இவை நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான். இவற்றில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு?

கண்கள் எமது புலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும். கட்புலன் எமக்கு பிறக்கும் போதே இயல்பாகக் கிடைத்து விடுகிறது. நாளாந்தம் அதனுடனேயே வாழ்வதால் அது இல்லாத வாழ்வு பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. ஆயினும் ஏற்கனவே இருந்த பார்வையை இழந்த பின்னான வாழ்வின் துயரம் அளவிட முடியாததாகும்.

வயதாகும் போது பார்வையின் கூர்மை குறைவதற்கும், கண்நோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

ஆயினும் பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது கவலையீனமும், அக்கறையின்மையுமே முக்கிய காரணங்களாகின்றன. கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.

எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.

உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் மட்டும் கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். ஏனெனில் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்றைய கண் அதனை ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.

முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். எம் பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மையே.

வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால்(Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே(Table Lamp) நல்லதெனலாம்.

பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே.

வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உதா- ரீவீ பார்ப்பது, பஸ் போர்ட் பார்ப்பது) உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.

தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.

கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும். இது ஓரளவு மட்டுமே உண்மையாகும்.

கரட்டில் விட்டமின் A இருக்கிறது. இது விட்டமின் A குறைபாட்டினால் வரக் கூடிய கண் நோயைத் தடுக்கும் என்பது உண்மையே. கண்ணுக்கு வேறு பல விற்றமின்களும் தேவைப்படுகின்றன. கரும் பச்சை நிறமுடைய கீரை வகைகள், மற்றும் பழவகைகளில் விட்டமின் A யுடன்; ஒட்சினெதிரிகள் (Antioxidents)என்று சொல்லப்படுகின்ற விட்டமின் C, E யும் இருப்பதால் மேலும் நல்லதெனலாம். இவை கட்டரக்ட், வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் பாதிப்பு(cataract and age-related macular degeneration) ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆனால் பெரும்பாலும் கண்ணாடி தேவைப்படும் நோய்களான தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை வராமல் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ எந்த விட்டமினும் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினி முன் இருப்பது கண்களுக்கு நல்லதல்ல என்பது முழுமையாக உண்மையல்ல.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைச் சோர்வடையச் செய்யும். சில பாதுகாப்புகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரம் கொப்பியூட்டர் பாவிப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக மேசையில் அல்லது அறையில் இருக்கும் ஒளிவிளக்கின் ஒளி கணனித் திரையில் பட்டுத் தெறித்து கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் நீண்ட நேரம் கணினி முன் இருக்க நேர்கையில், மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது திரையை உற்றுப் பார்பதைத் தவிர்த்து, பார்வையை சற்று நேரம் தூரப் பொருளுக்கு நகர்த்துவதன் மூலம் கண்ணுக்கான வேலைப்பளுவைத் தவிர்க்க முடியும்.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண் இமைப்பது எம்மை அறியாது குறைகிறது. இதனால் கண்கள் வரட்சியடைந்து உறுத்தல் ஏற்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நாமாக நினைவு கூர்ந்து அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். இதனால் கண்கள் ஈரலிப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல கண்களுக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதைத் தடுக்க முடியும் எனப் பலர் எண்ணுகிறார்கள். யோகா போன்றவற்றில் கண் பயிற்சியும் அடங்குகிறது. ஆனால் பயிற்சிகள் மூலம் கண் பார்வை குறைவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான பூர்வ ஆதாரங்களும் கிடையாது.

இதன் அர்த்தம் பயிற்சிகளால் உடலுக்கு நன்மை இல்லை என்பதல்ல. யோகா முதலான உடற் பயிற்சிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன, தசைகளைப் பலப்படுத்துகின்றன, மூட்டு நோய்களைத் தடுக்கின்றன என்பது உண்மையே.

ஆனால் பெரும்பாலான கண் நோய்கள் கண்ணின் வடிவமைப்பு, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளின் நலத்திலேயே தங்கியிருக்கின்றன. எனவேதான் கண் நோய்களைத் தடுக்கவோ குணமாக்கவோ பயிற்சிகளை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை.

ஆனால் நீங்கள் புகைப்பவராயின் அதனை நிறுத்துவதன் மூலம் கண்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பலவற்றையும் தடுக்க முடியும். முக்கியமாக வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் சிதைவு நோயைத் தடுக்க முடியும்.

சன் கிளாசஸ் அணிவதும், தொப்பி அணிவதும் உதவும். பழவகைகள், மரக்கறிகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், கொழுப்பு உணவுகளை முக்கியமாக ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் கண்களைக் காப்பாற்ற நிச்சயம் உதவும்.