Wednesday, December 21, 2011

தங்கை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தேன் ?


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் கணேசன். நகை பட்டறை தொழிலாளி. இவருக்கும், மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த நடராஜன் மகள் தனலட்சுமிக்கும்(30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தனலட்சுமி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவரது அண்ணன் ராஜ்குமார்(33) இருந்தார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மருத்துவமனையின் வார்டு பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. பணியிலிருந்த ஊழியர்கள் சென்று தனலட்சுமியின் அறையில் பார்த்தபோது, அவர் படுக்கையில் தீப்பற்றி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். உதவிக்கு இருந்த தனலட்சுமியின் அண்ணன் ராஜ்குமாரை கூச்சலிட்டு அழைத்தனர். அப்போது அந்த வார்டின் பாத்ரூமில் இருந்த ராஜ்குமார், “எனது தங்கை இறந்து விட்டாளா?“ எனக்கேட்டுக் கொண்டே கையில் பெட்ரோல் கேனுடன் வெளியே வந்தார். ராஜ்குமாருக்கும் உடல் முழுவதும் தீக்காயம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மதிச்சியம் போலீசார் விரைந்து வந்து ராஜ்குமாரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போலீசாரிடம் ராஜ்குமார் அளித்த வாக்குமூலத்தில், “எனது தங்கை தனலட்சுமி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால், எங்களது குடும்பமும், தங்கையின் கணவர் குடும்பமும் நிம்மதி இழந்தன. எனவே தங்கையை கொல்ல முடிவு செய்தேன். நேற்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்கை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தேன். போலீசார் என்னை துன்புறுத்துவார்கள் என்பதால், என் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டேன்Õ என கூறினார். வாக்குமூலம் கொடுத்து முடித்த சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

No comments:

Post a Comment