Friday, December 31, 2010

மந்திரக் கம்பளம்

வாண்டு மாமா

நான் படித்த குழந்தைகளுக்கான கதைகளில் மிகச் சிறந்த கதை வாண்டு மாமா எழுதிய மந்திரக் கம்பளம் என்ற கதை. எங்கள் அப்பா கிராமம், மருங்கூரில் இருக்கும் சண்முகானந்தா நூலகத்தை முற்றுகை இட்டு ஒரு கோடை விடுமுறையில் அங்கு இருந்த, அந்த உயரப் பையன் படிக்கக் கூடியது, என்ற புத்தகங்கள் தீர்த்து விட்ட போது மாட்டாமல் பிறிதொரு காலத்தில் கிடைத்தது, கெட்டியாக அட்டை போடப்பட்ட இந்தப் புத்தகம்.

யாரோ செய்து குளறுபடியால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டிருந்தது. இந்தக் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் எனறு கணக்கே கிடையாது. சிறுவர்களுக்காக எழுதுகிறேன் என்று மழலை மொழியில், உயரத்திலிருந்து கொண்டு கதை சொல்லும் பாணி என்றுமே பிடித்ததில்லை. இந்தக் கதையில் முழு சிந்திக்கும் மனிதர்களாக குழந்தைகளை மதித்து எழுதியிருப்பார் வாண்டு மாமா.

நாட்டு நடப்புகளையும், மாயமந்திரக் காரர்களையும் கலந்து செய்து கதை. மந்தஹாச மஹாராஜா கோழை, சாப்பாட்டுப் பிரியர், சோம்பேறி. அவரது இளவயதில் எப்படி ஒரு இளவரசியை மந்திரவாதியின் பிடியிலிருந்து விடுவித்து கைப்பிடித்தார் என்பதிலிருந்து பிடிக்கும் விறுவிறுப்பு, கீர்த்தி வர்மன் தனது புத்திசாலித்தனத்தை மறைத்து வாழ வரம் கேட்கும் கடைசிப் பக்கம் வரை தளராமல் போகும்.

எல்லாப் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, அவர்களது இயல்புகளுக்கு காரண காரியங்களைக் கற்பித்திருப்பார். வேட்டை என்ற பெயரில் போய் பயந்து கொண்டு குகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த மந்தஹாசரை, உள்ளே புகுந்த கொடுவிலங்கு தொந்தரவு செய்து முத்தம் கேட்க, தூங்க விட்டால் போதும் என்று கண்ணைத் திறக்காமலேயே முத்தம் கொடுத்து சாபத்தால் விலங்காகத் திரிந்து கொண்டிருந்த இளவரசியை மணம் பிடிக்கிறார். அதற்கு முந்தையவர்கள் உருவத்தைப் பார்த்துப் பயந்து உயிரிழக்கிறார்கள்.

ராணிக்கு இளம் பருவ அனுபவத்தால் மாயமந்திரங்கள் பிடிப்பதில்லை. பல நாளுக்குப் பிறகு கீர்த்திவர்மன் என்ற குழந்தை பிறக்கிறது. அழையாமலேயே சுற்றியுள்ள மந்திரவாதிகள், முனிவர்கள் வந்து ஆசீரவதித்துப் பரிசுகள் வழங்கிச் செல்ல, எல்லாவற்றையும் மூட்டை கட்டி அறையில் அடைத்து விடுகிறாள் ராணி. இளவரசன் கீர்த்திவர்மன் ஆசிகள் பெற்ற புத்திசாலியாக மிகத் திறமைசாலியாக வளர்ந்து மந்தஹாசருக்குக் கடுப்பேற்றுகிறான்.

அடுத்து இரண்டு தம்பிகள் வழக்கமான இளவரசர்களாக வளருகிறார்கள். தேவதைக் கதைகளில் அரக்கனைக் கொல்லச் சென்ற மூத்த மகன்கள் உயிரிழந்து இளைய மகன் வெற்றி வாகை சூடுவதை அறிந்த மன்னர் கீர்த்திவர்மனுக்காக அழிக்க ஒரு அரக்கனைச் சுட்டுகிறார். அதே காரணத்தைச் சுட்டிக் காட்டி தான் போக மறுத்து இளைய தம்பியை அனுப்பி விடுகிறான்.

ஒவ்வொரு கட்டத்திலும் கதையை வளர்த்திக் கொண்டு போகும் நேர்த்தி உயர் தர இலக்கியப் படைப்புகளுக்கு நிகரானது. இரண்டு தம்பிகளும் போய்த் திரும்பாமலிருக்க அப்போதும் கீர்த்திவர்மன் நகர மாட்டேன் என்கிறான். மன்னர் கோபம் கொண்டு வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு முடிவு எடுத்து நகரையே காலி செய்து கொண்டு கீர்த்திவர்மனை தனியே விட்டுக் கொண்டு போய் விடுகிறார்கள். வேறு யாருக்குமே அவனைப் பிடிப்பதில்லையாதலால் எதிர்ப்பு அதிகம் இல்லை. எல்லோரையும் தன் அறிவுக் கூர்மையால் வாட்டி எடுக்கும் பழக்கம்.

தனியே அரண்மனையில் ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்து மந்திரப் பொருட்கள் அடைபட்டிருந்த அறையிலும் புகுந்து பொருட்களை அணிந்து கொண்டு குளறுபடிகள் நடந்து, பக்கத்து நகரில் பெண் சிநேகிதியைச் சந்தித்து, கடைசியாக தீரப் பயணம் மேற்கொண்டு குளிர் / தழல் அரக்கர்களை மோத விட்டுக் கொன்று வாகை சூடி வந்த பிறகு குட்டித் திருப்பத்துக்குப் பிறகு, தம்பிகளும் உயிர் பெற்று கதை சுபமாக முடிகிறது.

ஒரு நாள் குழந்தைகள் தூங்குவதற்காக இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்து, அவர்கள் தூங்கி விடக் கதையை நிறுத்தினால் பெரிய குழந்தையிடமிருந்த ஊம் சத்தம் வந்தது, கதையை முடித்து விடும்படி. பெரியவர்களுக்கும் கருத்தைக் கவரும் வண்ணம் எழுதப்பட்ட சிறுவர் கதைகள்தாம் உலக இலக்கிய வரலாற்றில் அழியா இடம் பெற்றுள்ளன. தமிழிலிருந்து வாண்டுமாமாவின் இந்தக் கதைக்கு அந்த மதிப்பு கிடைக்கும். ஆங்கிலத்தில் சரிவர மொழிபெயர்த்து வெளியிட்டால் ஒரு அலைஸ் இன் வொண்டர்லேன்டு போலவோ, டாம் சாயரின் குறும்புகள் போலவோ தனக்குரிய இடத்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இந்தக் கதைக்கு உண்டு

No comments:

Post a Comment