Friday, December 31, 2010

போரும் அமைதியும்

லியோ டால்ஸ்டாய்

'இது நாவலா, தத்துவ நூலா, வரலாற்று நூலா, ஆராய்ச்சிக் குறிப்பா?' என்ற கேள்விக்கு, எதிலுமே சேராத ஒரு புது இனம் என்று அதன் ஆசிரியராலேயே சொல்லப்பட்ட படைப்பு போரும் அமைதியும் என்ற வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டிய வாழ்க்கைக் கதை. உண்மைச் சம்பவங்கள் எங்கு முடிந்து கதை எங்கு ஆரம்பிக்கின்றது என்று சொல்ல முடியாத இயல்பான நூல் இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த லியோ டால்ஸ்டாய்அதே நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் நடந்த நிகழ்ச்சிகளை அந்த ஆண்டுகளில் வாழ்ந்த உயர்தட்டு குடும்பங்களையும் பின்பற்றி எழுதிய இந்த நூலில் பண்ணையார் டால்ஸ்டாய் என்று ஆசிரியரின் தாத்தா ஒருத்தரும் ஓரிரு கட்டங்களில் தலை காட்டுகிறார்.

  • போர் நடத்தப்படும் முறைகள், போர் முனையில் நிலவும் குழப்பங்கள், ஏதோ நடந்தது என்று குழம்பி அறிக்கை தயாரிக்கும் போது எப்படி நடந்திருக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறதோ அதை அறிக்கையாக அளித்து விடுவது, அதை அடிப்படையாகக் கொண்டு திட்டம் தீட்டும் வாய்ச்சொல் வீரர்கள் என்று போர்க்கலையை வெளுத்து வாங்குவது ஒரு பக்கம்.
  • இளம்பெண்களுக்கு திருமணம் நடக்கும் வழிமுறைகள், இள வயது ஆண்களின் வாழ்க்கை முறை, அடிமைகள் (வேலைக்காரர்கள்) என்பவர்கள் ஏதோ விலங்குகள் போல ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத கதை ஓட்டம், திருமண உறவுகள், அரண்மனை அரசியல்கள் என்று சமூகத்தின் இரண்டாம் பக்க விவகாரங்கள் இன்னொரு பக்கம்.
  • பண்ணையார் மகள் நடாஷாவின் குடும்பத்தின் மூலம், குந்தித் தின்னும் தந்தை, யாரை நோவது என்று தெரியாத தாய், படையில் உயர் அதிகாரியாகச் சேர்ந்து போர்முனையில் பணிபுரியும் மூத்த மகன், பதினைந்து வயதிலேயே சண்டைக்குப் போய் உயிரை தேவையில்லாமல் விடும் கடைக்குட்டிச் செல்ல மகன், வீட்டிலேயே வளரும் ஏழை உறவுப் பெண் இவர்களின் நண்பர்கள் மூலம் பல்வேறு முனைகளையும் இயல்பாக படம் பிடித்துக் காட்டுவது பிறிதொரு கோணம்.
  • குண்டாக கண்ணாடி போட்டுக் கொண்டு அசடாக ஆனால் அதிகமாக யோசிக்கும் பீட்டர். வட்டார ஆட்சிப் பதவிக் குடும்பத்தின் ஆண்ட்ரூ போல்கோன்ஸ்கி, அவனது தந்தை வயதாகி அரைக்கிறுக்காகி விட்ட செல்வாக்கு நிறைந்த முன்னாள் படைத்தலைவர், ஆண்ட்ரூவின் தங்கை அழகற்ற மேரி என்று இன்னொரு குடும்பத்தையும் இணைத்து நான்காவது கோணத்தில் கதையை நகர்த்துகிறார்.
  • இதற்கிடையில் ஜார் மன்னர் அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற வரலாற்றுப் பாத்திரங்களையும் மனிதப் பிறவிகளாக கதைக்குள் கொண்டு வந்து ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிய முத்துக்களாக அள்ளிக் கொடுக்கும் அற்புதமான படைப்பை விட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய்.
அன்னா கரெனினா, புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்டு எழுதப்பட்ட நாவல். போரும் அமைதியும் ஆசிரியரின் மூலம் தானே எழுதிக் கொண்டது போல் இயல்பாகப் பாய்ந்து ஓடும் நூல்.

தமிழில் கல்கி அலைஓசை எழுதியது போல வரலாற்று நிகழ்ச்சிகளுடன் கதையின் பாத்திரங்களையும் கலந்து எழுதிய நூல் இது. சீதாவும், சூர்யாவும், தாரிணியும் கற்பனையிலா வாழ்ந்தார்கள்! அதே போல், நடாஷாவும் மேரியும், பீட்டரும், சோனியாவும் வாழ்ந்த கதை, படிக்கப் படிக்க அலுக்காத ஒன்று.

  • ஆண்ட்ரூவுடன் நிச்சயம் ஏற்றுக் கொண்டு, அரைக்கிறுக்கு கிழவரால் வற்புறுத்தப்பட்ட ஓராண்டு பிரிவில் மனம் குழம்பி, அனடோல் என்ற போக்கிரியின் வலையில் விழவிருந்து, ஆண்ட்ரூவின் மரணப் படுக்கையில் மீண்டும் மனமிணைந்து, அவன் மரணத்துக்குப் பிறகு பீட்டரைக் கடைசியாக வாழ்க்கைத் துணையாகக் கைப்பிடிக்கிறாள் நடாஷா.
  • முதல் முறை படிக்கும் போது, அவளது பிள்ளைப் பருவத்துக் காதலன் போரிஸ்தான் கதையின் நாயகனோ என்று விறுவிறுப்பாகப் படித்தால் குடும்பப் பெருமை போதுமான அளவு இல்லாத அவனுக்கு அந்த நாள் உயர் சமூகத்தில் இடமே இல்லை. அதே போல் நடாஷா வீட்டில் வளரும் ஏழை உறவு சோனியா நடாஷாவுக்கு இளைத்தவளாகவே எப்போதும் இருக்கிறாள்.
  • நடாஷாவின் அக்கா வேரா, பெர்க் என்ற ரஷ்யப் பணியில் இருக்கும் ஜெர்மன் படைஅலுவலரை மணக்கிறாள். அவர்களது வீட்டில் ஏற்பாடு செய்யும் மாலை விருந்தைப் பற்றி டால்ஸ்டாய் எழுதியிருப்பது இன்றைக்கும் நடக்கும் எலிப் போட்டிகளுடன் சரியாக ஒத்துப் போகிறது.
கடைசியில் பிற்சேர்க்கை என்ற பெயரில் சுபம் போட்டு முடித்து விட வேண்டிய கட்டத்தையும் தாண்டி நடாஷா-பீட்டர், நிக்கோலஸ்-மேரி தம்பதிகளின் மகிழ்ச்சியான குடும்பச் சூழலையும், அதை ஒட்டி அன்றைய அரசியல் நிலவரங்களையும் சொல்ல கதையை ஒரு சுகமான ஆச்சரியமாக வளர்த்துப் போவார். கடைசியில் மனித வரலாற்றின் ஓட்டத்தை அலசிப் பிழிந்து காயப் போடும் தத்துவ விசாரணையோடு நூல் நிறைவு பெறும்.

இது போன்ற நூல்களின் சரியான மொழிபெயர்ப்பைப் படிப்பது என்று கவனமாக இருக்க வேண்டும். ஒரே மூல கதையை அதன் உயிரெல்லாம் விட்டு விட்டு சக்கையாக மொழிபெயர்த்தவர்களுக்கிடையே, மொழிபெயர்ப்பும் காலம் கடந்து நிற்பதாக இருக்க வேண்டும்.

எக்காலத்துக்கும் பொருந்தும், மனித இனம் தோன்றிய நாளிலிருந்து கூத்தாடும் வன்முறை, காதல், மகிழ்ச்சி, உழைப்பு, பாசம், வலி, கண்ணீர், பயம் என்ற உணர்ச்சிகளை அடையாளம் காட்டும் இந்த நூல் காலத்தால் அழியா வரம் பெற்ற படைப்புகளின் வரிசையில் இடம் பெறுகிறது.

No comments:

Post a Comment