Friday, December 31, 2010

கண் சிமிட்டும் விண்மீன்கள்

எண்டமூரி வீரேந்திரநாத்

எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய அறிவியல் புனைவுகள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்தது பிரளயமும், இந்தக் கதையும் மட்டும்தான். வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் சொல்லலாம்.

கதையின் ஒன்லைன் என்று பார்த்தால், உலகை காப்பாற்ற விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஷிப்பில் இன்னொரு கிரகத்துக்கு போகும், சாதாரண அறிவியல் புனைவு என்றுதான் சொல்ல முடிகிறது. ஆனாலும் அதை எண்டமூரி அவருடைய ஸ்டைலில், காதல், நட்பு, பாசம், மனித நேயம், ஏமாற்றம், கொஞ்சம் சஸ்பென்ஸ், நிறைய அறிவியல் விளக்கங்கள் என்று கலந்து கொடுக்கும் பொழுது, நிச்சயமாக சொல்வேன்; பொன்னியின் செல்வனை வாசிக்க ஆரம்பித்தால், எப்படி புத்ககத்தை கீழே வைக்காமல் படித்து முடிப்பீர்களோ, அதே போல், இந்த கதையையும் இரண்டு பக்கங்கள் படித்தாலும், அப்புறம் முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டீர்கள்.

கதையின் பெயர் சொல்வது போல், விண்மீன்கள் கண் சிமிட்டும்; சூரியனும் ஒரு விண்மீன் தானே! அதுவும் கண் சிமிட்ட ஆரம்பித்தால் என்னாகும்? சூரியன் திடீரென்று கண் சிமிட்டுகிறது! அதற்கான காரணத்தை ஆராயும் விஞ்ஞானிகள் குழுவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அது வேற்று கிரக வாசிகளின் வேலை என்று தெரிகிறது. அதைத் தடுத்து நிறுத்த ஐந்து பேர் கொண்ட ஒரு விண்வெளி வீரர்கள் குழு, முகமும், இடமும் தெரியாத அந்த வேற்று கிரக வாசிகளைத் தேடி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள். இதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாவது பாகத்தில், இந்த ஐவர் குழு பல சிரமங்களுக்குப்பின், ஒரு உயிரிழப்புக்குப் பின், கடைசியில் அந்த வேற்று உலக வாசிகளோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பூமியை காப்பாற்றுகிறார்கள். கடைசியில், மனிதநேய சிந்தனை என்பதையும் மீறி, எல்லா உயிர்க்கும் அன்பு என்ற ஓர் உணர்வை நமக்கு அளிப்பதோடு கதை முடிகிறது.

இதில் ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களும் வெவ்வேறானவை. வாயுபுத்திரன் திறமையான, குறும்பான, புத்திசாலித்தனமும், வேகமும் உள்ளவன். யஷ்வந்த அறிவான(அறிவும், புத்திசாலித்தனமும் வெவ்வேறானவை), நிதானமான, ஏமாற்றங்கள் நிறைந்த, தலைமைக்கு தகுதியானவன். நிகில், சராசரி புத்திசாலித்தனமும், திறமையும், சபலங்களும் உள்ளவன். அனூஹுயா கதையில் பெரும்பாலான நேரங்களில் வரும் ஒரே பெண்(கதாநாயகி). ஒரே நேரத்தில் கணவன், காதலன் என்ற இருவரையும் வெறுத்தொதுக்க முடியாத குழப்பம் மிகுந்தவள். அப்புறம் அந்த "பிரம்மவித்யா"!! கணினி என்ற ஜடப்பொருளாக இல்லாமல், அதுவும் அருமையான கேரக்டராக மாறுவதுதான் சிறப்பு(Cast Away இதற்கு பிறகுதான் வந்தது). ஆனாலும் கணினிக்கு மனது என்றெல்லாம் யோசித்திருப்பது நிறையவே நெருடுகிறது. அப்புறம் கதையில் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். சம்பவங்கள் மட்டுமே வில்லன்கள்.

சஸ்பென்ஸுக்கும் குறைவில்லை. விண்வெளியிலிருந்து சந்திரனில் விழுந்து கொண்டிருக்கும் யஷ்வந்த் பிழைப்பது, வாயுபுத்திரன் டீகோட் செய்வது, கடைசி நிமிட சாகஸம், இவைகளையெல்லாம் ஆங்கில படங்களில் கூட கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே.

நிறையவே லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கதையின் போக்கு நம்மைக் கட்டிப் போட்டு விடுவதால், அந்த நேரத்தில் அதைப் பற்றி பெரிதாக யோசிக்க மாட்டீர்கள்.

எனக்கு, இந்த அனூஹுயா அடிக்கடி உணர்ச்சிகளால் குழம்பி நிற்கும் கட்டங்கள் மட்டும் கொஞ்சம் எரிச்சல் வந்தது. வாயுபுத்திரன் கிட்டத்தட்ட வந்தியத்தேவன் மாதிரி. ஆனால் யஷ்வந்தின் கேரக்டர்தான் இந்தக் கதையில், எனக்கு பிடித்த கேரக்டர். தனது மரணத்தைக் கூட தைரியமாக எதிர் கொள்பவன். அதேபோல் மரணத்திலிருந்து மீண்ட உடனேயே, மிகச் சரியாக சிந்திக்கக் கூடியவன். எல்லோராலும் இப்படி இருக்க முடியாது.

மூல நூலின் பெயர் தெரியவில்லை. வலையில் தேடிப் பார்த்தபொழுதும் இதைப் பற்றி ஒன்றும் தகவலில்லை. புத்தகக் கடைகளில் கூட இப்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறதா என்று தெரியவில்லை(என் கண்ணில் படவில்லை). என்னிடம் இப்பொழுது முன் எப்பொழுதோ ஊட்டி ஹிக்கின் பாதம்ஸில் வாங்கிய பிரதி, தாள் தாளாக இருக்கிறது

No comments:

Post a Comment