Friday, December 31, 2010

கரித்துண்டு

மு வரதராசனார்

நான் முதல் முதலில் படித்த முழு நீள புத்தகம் மு.வ. வின் கரித்துண்டு. அதுவரை ஆனந்த விகடன் துணுக்குகள், சிறுகதைகள், குமுதம் ஆறு வித்தியாசம், ராணியில் சிறுவர் தொடர்கதை என்று போய்க் கொண்டிருந்த வாசிப்பு அனுபவத்துக்கு, கரித்துண்டு புதுக் கதவைத் திறந்து விட்டது. மதிய வேளையில் கண்ணயர விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்த என்னை வாய் மூட வைக்க அம்மா கையில் கொடுத்தது இந்தப் புத்தகம்.

அதில் கையாளப் பட்டிருந்த உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அப்போது முழுவதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தூய தமிழ்நடை, சேர்ந்தே ஒலித்த முற்போக்குப் பொதுவுடமைக் கருத்துக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. தமிழில் எந்தக் கருத்தையும் பிறமொழிக் கலப்பின்றி இயல்பான சொற்களுடன் சொல்ல முடியும் என்று அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயதிலேயே பதித்து விட்டதற்கு முவவுக்கும் கரித்துண்டுக்கும் நன்றி.

ஏதோ, தெருவில் கரித்துண்டால் ஓவியம் வரைந்து காசு திரட்டும் ஓவியர், அவரைப் பார்த்துக்கொள்ளும் பொன்னி, அவளது குழந்தைகள், மழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் அவர்களது குடிசைப் பகுதி, இதையெல்லாம் கதை சொல்லும் திருவேங்கடம், அலுத்துக் கொள்ளும் அவர் வீட்டு அம்மா, திருவேங்கடம் சந்திக்கச் செல்லும் பேராசிரியர், திருவேங்கடத்தின் நண்பன் கம்யூனிச இயக்கத்தில் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவது, பேராசிரியரின் சீர்திருத்தக் கருத்துக்கள, முடிச்சுகளுக்கெல்லாம் முடிச்சாக பேராசிரியரின் துணைவிக்கும் கால் இல்லாத ஓவியருக்கும் இருக்கும் முன்கதைத் தொடர்பு என்று விரியும் கதையில் சின்ன வயதில் படிக்கப் பொறுமையில்லாத நீளமான பத்திகள்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்துக் கதையைப் புரிந்து கொள்ள முயல்வேன். படித்த புத்தகத்தைப் புரியா விட்டால் திரும்பத் திரும்பப் படிக்கும் வழக்கமும் உண்டு. படிக்க வேறு ஒன்றும் கிடைக்காமல் மறு சுழற்சியில் படித்த புத்தகத்தின் முறை வருவதாலும் இருக்கலாம்.

எங்க அம்மாவைத் தவிர கரித்துண்டை முழுவதாகப் படித்த ஒரே உயிர் எங்கள் வீட்டில் நானாகத்தான் இருக்கும். ஏதாவது வரியை விட்டு விட்டால் ஏதாவது தவறி விடுமோ என்று மாய்ந்து மாய்ந்து படித்தது.

இந்த நூல் ஊட்டிய தமிழ்ப்பாலும், சமவுடைமை கொள்கைகளும் ஆழமாகப் பதிந்து விட்டன என்று தோன்றுகிறது. மோகன் என்ற ஓவியரின் முன்கதைப் பெயரிலான வாழ்க்கையில் கல்கத்தாவில் நடந்ததாக கடைசியில் வரும் நீளமான மடலில் விவரிக்கப்படும் உறவுகள் கதைக்கு வெறும் பின்னணி மட்டுமே, ஆசிரியரின் சமூக அக்கறையும், தமிழ்ச் சமூகத்தின் பிணிகளைத் தீர்த்து விட வேண்டும் என்ற ஆர்வமுமே நூலில் விஞ்சி நின்றதாக நினைவு

No comments:

Post a Comment