Friday, December 31, 2010

ஒரு உண்மை மனிதனின் கதை

பரீஸ் பலவோய்

சின்ன வயதில் படித்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கதை. நாயகனின் பெயர் கூட அரைகுறையாகத்தான் நினைவிலிருக்கிறது. அலெக்ஸெய் என்ற பெயர்.

எங்கள் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளியிருந்து கல்லூரி பேராசிரியரின் குட்டி நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிப்பேன். அதில் இது கிட்டத்தட்ட என் புத்தகமாக மாறி விட்டது போல எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே இல்லை. கடைசியில் ஒரு முறை மூச்சைப் பிடித்துக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்து விட்டேன்.

சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்கள் சேர்ப்பு இளகி தாளாக வந்து விடுவது சீக்கிரம் நடக்கும். கடைசியாக நான் படித்தது தாள் தாளாகத்தான். வளர்ந்து புத்தகம் வாங்கும் வசதி வந்த பிறகு நியூ செஞ்சுரி புத்தகக் கடையில், இணையத்தில் எங்கும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நூலின் ஆசிரியரின் ஆங்கிலப் பெயர் தெரியாததும் ஒரு பிரச்சனை. இதை எழுதவதற்காகத் தேடியபோது அமேசானில் கிடைத்தே விட்டது :-)

அலெக்ஸெய் இரண்டாவது உலகப்போரின் போது சோவியத் விமானப் படையில் விமான ஓட்டியாக இருக்கிறான். கதையின் ஆரம்பமே அவனது விமானம் அடிபட்டு காட்டில் விழுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. மனித நடமாட்டமே இல்லாத பனிக்காட்டில் குளிர் காலத்தில் இவன் உயிர் மட்டும் பிழைத்து காலில் பலத்த அடிபட்டு மாட்டிக் கொள்கிறான்.

அடுத்த பதினைந்து நாட்களுக்கு (என்று பின்னால் கணக்கு தெரிகிறது) ஊர்ந்து ஊர்ந்து கடுங்குளிரில் உணவு இல்லாமல், எதிரிப் படைகளைத் தவிர்த்து நகர்ந்து கொண்டே இருக்கிறான். வழியில் சாப்பிட எறும்புகள், கொட்டைகள் என்று கையில் கிடைத்ததை சாப்பிடுகிறான். குடிக்கத் தண்ணீர் சூடு பண்ண முடியாமல் பனி நீரைக் குடிக்கிறான்.

கால்கள் மட்டும் கவலை தருகின்றன. நம்பிக்கை எல்லாம் இழந்த நிலையில் சிறிய கிராமத்து சிறுவர்கள் அவனைப் பார்த்து அந்த கிராமத்து மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறான். கொடிய வறுமைக்கிடையேயும், நாட்டுப்பற்றுடன் கிராமத்தார் அவனுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். விமானப்படை விமானம் வந்து அவனை மாஸ்கோ அழைத்துச் செல்கிறது.

மாஸ்கோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை நடக்கிறது. கால்கள்தான் கவலை தருகின்றன. கடைசியில் வேறு வழியில்லாமல் இரண்டு கால்களையும் துண்டித்து விட மருத்துவர் முடிவு செய்கிறார். விமானம் ஓட்டுவதே ஒரே கனவாக இருக்கும் அலெக்ஸெய்க்கு வாழ்வே இருண்டு விடுகிறது.

இதற்கிடையில் சோவியத் மக்களின் தீரம், வீரம் பற்றிய கிளைக் கதைகள் ஓடுகின்றன. கால்கள் போய் விட்டன. அவனை ஆறுதல் படுத்த, சக நோயாளி ஒருவர், முதலாம் உலகப் போரில் ஐரோப்பாவில் செயற்கை பாதத்துடன் விமானம் ஓட்டிய விமானியைக் குறித்த செய்தியை எடுத்துச் சொல்லி, நீயும் மீண்டும் விமானி ஆகலாம் என்று நம்பிக்கை தரப் பார்க்கிறார். (சுதா சந்திரன் நடித்த மயூரி படம் போல்)

'அவருக்கு ஒரு பாதம் மட்டும்தான் இல்லை, ஓட்டியதோ டப்பா வகை விமானம், இரண்டு காலும் இல்லாத நான் இன்றைய நவீன விமானங்களை ஓட்டுவது நடக்கிற ஒன்றா?'

'நீ சோவியத் வீரனாச்சே, அவர் பாதம் இல்லாமல் சின்ன விமானம் ஓட்டினால், ஒரு சோவியத் வீரன் கால்கள் இல்லாமல் சண்டை விமானம் இயக்க நிச்சயம் முடியும்'

நம்பிக்கை பிறந்து மரக்கால்களுடன் விமானம் ஓட்டலாம் என்று முடிவு செய்கிறான். மரக்கால்களைப் பொருத்திக் கொண்டு அடி மேல் அடியாக, வலி பொங்க பழகுவது, மருத்துவமனையில் எல்லோரும் அவனை ஊக்குவிப்பது, அவனைப்பற்றி உயர்வான பரிந்துரை கடிதம் கொடுப்பது, படைவீரர் உடல் தேர்ச்சி பெறும் மையத்துக்குப் போவது, அங்கு ஒவ்வொன்றாக நண்பர்களைப் பெற்று அவன் உறுதியை எல்லோரும் உணர்வது, நடனம் ஆடுவது முதல் படி என்று நடன வகுப்பில் சேர்வது, நடன ஆசிரியை இவனுக்காக சிறப்பு உதவிகள் செய்வது என்று ஒவ்வொரு கட்டத்திலும் நினைத்த குறிக்கோளை, மலை போன்ற இடையூறுகளை தாண்டி அடைந்து விடுவது என்ற அலெக்ஸெயின் உறுதி வெளிப்படுகிறது.

கால்கள் போய் விட்டதை கிராமத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கும் காதலிக்கும் எழுதாமலேயே இருந்து விடுகிறான். மீண்டும் சண்டை விமானம் ஓட்ட முடிந்து பிறகு அவர்களுக்கு தெரிந்தால் பழுதில்லை என்று சமாதானப் படுத்திக் கொள்கிறான்.

இவனது உறுதி தெரிந்தாலும், ஒரு விரல் மட்டும் இல்லாமலிருந்தாலே சேர்த்துக் கொள்ளாத படை வீரர் தேர்வில் இவனுக்கு என்ன வாய்ப்பு என்று எல்லோரும் அவநம்பிக்கைப் படுகிறார்கள்.

அலுவலகம், அலுவலகமாக ஏறி இறங்கி பல அதிகாரிகளைச் சந்திக்கிறான். யாருக்கும் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் அடுத்த நிலைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் தனது உறுதியையும் மரக்காலால் நடனம் ஆட முடிவதையும் கூட காட்டுகிறான். கடைசியில் முடிவு எடுக்கக் கூடிய ஒரு அதிகாரி இவன் நச்சரிப்பு தாங்காமல் விமானப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவில் கையெழுத்திடுகிறார்.

அங்கும் தடைகளை மீறி பயிற்சி விமானத்தில் ஏறி விடுகிறான். ஓட்டும் போதுதான், என்னதான் இருந்தாலும் மரக்கால் மூலம், மனிதனும் இயந்திரமும் ஒன்றாக உணரும் வசதி கிடைக்கவில்லை என்று உணர்கிறான். ஓட்டி இறங்கும் போது மற்றவர்கள் இவனை ஊக்குவிக்க பாராட்டினாலும், எல்லோருக்கும் குறை தெரிந்தே இருக்கிறது.

எரிபொருள் பற்றாக்குறையான அந்தப் போர்க் காலத்திலும் இவனுக்காக கூடுதல் பயிற்சி வழங்க உத்தரவிடுகிறார் (சோவியத் பெரிய மனம்). தினமும் ஓட்டி ஓட்டி, ஒரு நாள் பறக்கும் போது, மரக்காலின் ஊடே பறவையுடன் இணைப்பை உணர்ந்து விடுகிறான். அன்றைக்கு வாழ்க்கையின் கொண்டாட்ட நாள் அவனுக்கு.

சண்டைப் படைக்கு அனுப்பப்பட்டு தீவிர விமானச் சண்டையில் ஈடுபட்டு எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தி, வீரதீரம் காட்டி தான் முழுமையான விமானி என்று நிலைநாட்டி விடுகிறான்.

நினைத்ததை அடைவதற்கு எந்தத் தடையும் இடையூறாக இருக்க முடியாது. மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்து விட்டால் கனவுகள் நனவாவது நடந்தே தீரும்.

உரை வடிவம் இணையத்தில்

No comments:

Post a Comment