Friday, December 31, 2010

தரையில் இறங்கும் விமானங்கள்

இந்துமதி.

தொலைக் காட்சியில் தொடராக வந்தது பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அப்போது சென்னையில் படித்துக் கொண்டிருந்த அக்கா அந்தக் கதையையும் ரகுவரனின் நடிப்பையும் வெகுவாகப் புகழ்ந்து சொல்லியிருந்தாள். அப்போது எங்க ஊரில் சென்னைத் தொலைக்காட்சி வருவதில்லை. இப்படி ஒரு கதை இருக்கிறது, அது நன்றாக இருக்கும் என்று மட்டும் பதிந்திருந்தது.

சென்னைக்குப் படிக்க வந்து நூலகத்தில் அதன் பிரதி கிடைத்தது. தாம்பரம் காமராசர் நூலகம்தான் என்று நினைவு. நூறு பக்கங்களுக்குள் அடங்கி விடும் குறுநாவல் அளவுதான். மென்மையான மனதை வருடும் நடையில் படித்து முடித்து வேலை தேடும் இளைஞனின் தேடல்கள் அவன் வேலையில் அமர்வதோடு முடியும்.

விஸ்வம், அண்ணா, தம்பி ராம்ஜி, தங்கை அகிலா. அண்ணன் பள்ளிப் படிப்பை முடித்ததும் மேலே படிக்க வைக்க வசதி இல்லாமல் அவனது கனவுகளைக் குலைத்து தட்டச்சுப் பயில வைத்து கீழ்நிலை வேலையில் அமர்த்தி விடுகிறார் அப்பா. அவன் அத்தோடு முடங்கி விடுகிறான். தம்பிகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும் என்று தன்னைத் தேய்த்துக் கொண்டு படிக்க வைக்க அப்பாவுக்கு ஆதரவு தருகிறான்.

அவனைப் பார்த்து விஸ்வத்துக்கு ஒரு பரிதாபம். இப்படி ஒரு மனிதன் செக்குமாடாக, அன்றாட கட்டாயங்களுக்குப் பணிந்து இருக்க முடியுமா? அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போய் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தில் அண்ணியாக வரப்போகிறவளைப் பார்த்ததும் விஸ்வத்தின் மனதில் இடி. இவ்வளவு அழகான ஒரு பெண்ணை இந்த முசுடுக்கு கட்டி வைத்தால் அந்த பெண் எப்படி வாழும். என்று கோபம் கோபமாக வருகிறது.

அண்ணி இலக்கியம் படிப்பவளாக எல்லோரையும் அன்பால் கட்டிப் போடுபவளாக வந்து விட, அம்மா மாரடைப்பில் போய் விடுகிறாள். அண்ணனின் ஆதரவில் விஸ்வம் நண்பர்களுடன் சுற்றுதல், குட்டைச் சுவரில் உலக இலக்கியங்களை துவைத்துக் காயப் போடுதல் என்று தவறாமல் செய்கிறான். அண்ணியுடன் நட்பு மலர்கிறது. இப்படி எல்லாம் பேசத் தெரிந்த இந்த அண்ணியை அண்ணன் வேலை வேலை என்று கண்டு கொள்வதே இல்லையே என்று மீண்டும் மனக்குமுறல்.

நண்பர்கள் சேர்ந்து இலக்கிய இதழ் கொண்டு வருகிறார்கள். அண்ணனுக்கு பூனாவுக்கு மாற்றல் வந்து விடுகிறது. 'விஸ்வம்தான் இனி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். 'ஒம் மீது பாரத்தை இறக்கி விடக்கூடாது' என்று நினைத்தேன் என்று அண்ணன் உருகுகிறான். 'நான் பார்த்துக்கிறேன். அப்பா பார்த்து வைத்த வேலையில் சேர்ந்து கொள்கிறேன். நீ பூனாவிலாவது அண்ணியைக் கொஞ்சம் கவனி' என்கிறான் விஸ்வம்.

அண்ணன் முதலில் கிளம்பிப் போன பிறகு அண்ணி தன் குறையைச் சொல்கிறாள். 'உங்க அண்ணாவுக்கு நான் ஏதோ வானத்தில் இருந்து இறங்கி விட்டதாக நினைப்பு. உருவம் மட்டும்தான் அழகா. உங்க அண்ணனைப் போல அழகான மனம் எத்தனை பேருக்கு இருக்கும்' என்று சொல்லி விட்டு பூனே ரயிலேறிப் போகிறாள்.

இடையில் விஸ்வத்தின் ஆதரிசக் கொள்கைகளுக்கு முரண்படும் காதலி ஜமுனா.

நடுத்தர வர்க்க இளைஞனின் மனதுக்குள் புகுந்து எழுதியது போல இந்துமதி செய்து மாயாஜாலம் இது. அவரது பிற கதைகளைப் படித்தால் இவரா அவற்றை எழுதினார் என்று தோன்றும் அளவுக்கு பல படிகள் உயர்ந்து நிற்கும் கவிதை தரையில் இறங்கும் விமானங்கள்.

No comments:

Post a Comment