Friday, December 31, 2010

அருந்ததி ராய்

The God of Small things என்று தலைப்புக் கொடுக்க மனம் வராமல் அதை எழுதியவரின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஒரு புத்தகம் ஏதாவது விருது பெற்றதும் அதற்கு ஒரு தனிப் புகழ் கிடைத்து விடுகிறது. புக்கர் பரிசு கிடைக்கா விட்டால், புத்தகக் கடையில் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒருவர் எழுதிய புத்தகத்தைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். அதே போலத்தான் ஆஸ்கர் விருது பெற்று விட்ட திரைப்படங்கள்.

1990களின் இறுதிகளில் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு, இருபுறமும் இறக்கைகள் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நாட்களில் ஏதோ ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் இதுக்கு என்ன விருது என்றுதான் தோன்றியது. விடாப்பிடியாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாதி புத்தகத்துக்கு மேல் போக முடியவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'தலைசிறந்த கதைகளில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அத்தகைய கதைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்க விரும்புவீர்கள். கதையின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து ஒட்டிக் கொள்ளலாம். கதகளி கலைஞர்கள் அதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.'

அதை அருந்ததி ராயும் புரிந்து கொண்டு தனது கதைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதையின் முதல் அத்தியாயத்திலேயே என்னென்ன நடந்தது, எதைப் பற்றிப் படிக்கப் போகிறோம் என்று அறிவுப்புகள், எச்சரிக்கைகள் கிடைத்து விடுகின்றன. அம்மு விவாகரத்து ஆகி அம்மா வீடு வருவது, சோஃபி மோள் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவது, எஸ்தா அபிலாஷ் தியேட்டரில் ஆரஞ்சு லெமன் டிரிங்க் ஆளிடம் படுவது, எஸ்தா, rahel இருவரின் வாழ்க்கையும் இலக்கில்லாமல் போவது என்று எல்லாமே முதலிலேயே தெரிந்து விடுகிறது.

அதன் பிறகு விபரங்கள்தான். இந்த நாவலுக்கு விமரிசனம் எழுதிய எல்லோருமே குறிப்பிடுவது details. கேரளாவின், சிரியன் கிருத்தவ, மேல்தட்டு குடும்பம் ஒன்றின் பார்வையில் உலகின் இண்டு இடுக்குகள் எல்லாம் உயிர் பெறுகின்றன. கதா பாத்திரங்கள் எதுவும் எதற்குள்ளும் ஒளிந்து கொள்ள முடிவதில்லை.

கதை சொல்வது ஆசிரியரா அல்லது ரஹேலா என்று குழப்பம் வருவது குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரஹேலின் சின்ன வயது உலகப்பார்வைவை, வளர்ந்து 31 வயதில் அனுபவப் பார்வையுடன் கலந்து கதை சொல்லப்படுகிறது. குடும்பம் கோட்டயத்துக்குக் காரில் போகும் போது வியட்நாமில் நடக்கும் சண்டையைப் பற்றியும் நாட்டின் பெயர் குறிப்பிடாமல் தொட்டுச் செல்கிறார் கதை சொல்லி. 31 வயது ரஹேல் 7 வயதில் நடந்த சம்பவங்கள் எப்படி அன்றைய கதாபாத்திரங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று உருவகித்து சொல்வது போலக் கதை.

என்ன பெரிய கதை! குழந்தைகள் வயிற்றுக்கு இல்லாமல் வாடுகிறார்களா! படிப்பதற்கு வசதியில்லையா? சமூகத்தால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? அப்படி எதுவும் இல்லை. மிகவும் நுண்ணிய ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் நடந்திருக்கக் கூடிய சம்பவங்களின் தொகுப்பு. கேரள சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டை இந்தக் கதைக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டுகிறார் அருந்ததி ராய். செம்மீன் திரைப்படத் தாக்கம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் தாக்கம், தொழிற்சங்க இயக்கம், நம்பூதிரி பாடின் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு ஏற்பட்டது, மத அரசியல்கள், வேதிப் பொருட்களால் ஆறுகள் மாசு படுவது, தீண்டாமை.

எஸ்தா நடந்து போகும் போது முதலில் 'அவர்களது தாத்தா தீண்டத்தகாதவர்களுக்காக கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடம்' என்று சொல்லி விட்டு அடுத்தடுத்து மற்ற காட்சிகளை விவரித்து விட்டு, இன்னொரு பள்ளியைக் குறிப்பிட்டு 'அது தீண்டத்தகுந்தவர்களுக்கு' என்று சொல்லும் சொற்கூர்மை நாவல் எங்கும் விரவிக் கிடக்கிறது. தீண்டத் தகுந்த காவல் அதிகாரிகள், தீண்டத்தகாத பறவனை மிதித்தே உடைக்கும் போது சாட்சிகளாக எஸ்தாவும், ரஹேலும் மட்டும் இருக்கிறார்கள். அவன் செய்த தவறு, தீண்டத் தகுந்த அம்முவுடன் உறவு வைத்துக் கொள்வது.

அந்த ரகசிய உறவு வெளிப்பட்ட பிற்பகலில் அம்மு குழந்தைகளை வார்த்தைகளால் நோகடித்து துரத்தி விடகுழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போகத் தீர்மானிக்கிறார்கள். இலண்டனில் வந்திருக்கும் அவர்கள் மாமா சாக்கோவின் இங்கிலாந்து (முன்னாள்) மனைவி மூலமான குழந்தை சோஃபி மோளும் சேர்ந்து கொள்கிறாள். முன்னிருட்டே நேரத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த படகில் ஏறி ஆற்றைக் கடக்க முயற்சிக்கும் போது படகு கவிழ்ந்து விடுகிறது. எஸ்தாவும், ரஹேலும் வழக்கம் போல நீந்தி அக்கரை சேர்ந்து விடுகிறார்கள். சோஃபி மோளுக்கு நீந்தத் தெரியாது.

டட்டடாய்ங் என்று இசை எழுப்பாமல், பெரிய பதற்றம் இல்லாமல் சோஃபி மோள் ஆற்றோடு போய் விடுகிறாள். மற்ற இரண்டு குழந்தைகளும் அக்கரையில் ஒரு கைவிடப்பட்ட வீட்டு திண்ணையில் படுத்துத் தூங்குகிறார்கள். அதுதான் அவர்கள் ஓடிப் போக வைத்திருந்த இடம்.

அம்மாச்சி வெளுத்தாவை திட்டி காரித்துப்பி அனுப்ப, அவனும் ஆற்றை நீந்திக் கடந்து அதே வீட்டுக்கு வருகிறான். அம்முவை அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

பேபி அத்தை கொடுத்த புகாரின் பேரில் தீண்டக் கூடிய காவலர்கள் படகேறி அடுத்த நாள் காலையில் அக்கரை வந்து வெளுத்தாவை மிதித்து துவைத்து குற்றுயிராக்கி விடுகிறார்கள். சோஃபி மோளின் பிணம் ஆற்றில் கிடைக்கிறது. வெளுத்தா குழந்தைகளைக் கடத்தியதாக எழுதி கேசை முடிக்கிறார்கள்.

இந்தக் குழந்தைகள் சரியில்லை என்று எஸ்தாவை கொல்கத்தாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். ரஹேலின் படிப்பை மட்டும் அம்மாச்சி பார்த்துக் கொள்வாள். அம்மு வேலை தேடி போகிறாள். 'நல்ல வேலை கிடைத்து நாம மூணு பேரும் சேர்ந்து இருக்க அளவுக்கு வருமானம் ஏற்பட்டதும் உங்களை அழைத்துக் கொள்கிறேன்' என்கிறாள். அது நடக்காமலே போய் அம்மு 31 வயதில் ஒரு லாட்ஜில் செத்துப் போகிறாள். எஸ்தா பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டு பேசாமல் அமைதியாகி விடுகிறான். ரஹேல் தில்லியில் வரைகலைப் பட்டம் படிக்கப் போய், ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து அமெரிக்கா போய் விடுகிறாள்.

எஸ்தாவின் தந்தை ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரப் போவதால் எஸ்தாவைத் திருப்பி அனுப்புகிறார். எஸ்தா திரும்பி வந்து விட்டதை பேபி அத்தை ரஹேலுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்க ரஹேல் ஊருக்கு வந்து சேருகிறாள். ஊரில் வந்த பிறகு அவள் திரும்பிப் பார்ப்பதாக கதை வளர்கிறது.

No comments:

Post a Comment