Friday, December 31, 2010

சுவர்க்கத்துக்கு வழி

h2g2

ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். The Hitch Hiker's Guide To The Galaxy (H2G2) எனப்படும் "அண்டத்தைச் சுற்ற ஊர்சுற்றிக்கு வழிகாட்டி" என்ற புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு, அதைப் படித்த பின்பு என்று.

1.
நிகழ்ச்சி:
சென்னையில் 42 டிகிரி வெயில். இரு சக்கர வண்டியில் சாலை நிறுத்தத்தில் காத்திருந்து அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறோம். முன்னால் போகும் வண்டியின் சொதப்பலால் சிவப்பு வரும் முன்னால் கடக்க முடியாமல் இன்னும் 120 விநாடிகள் வெயிலில் நிற்க வேண்டியதாகி விட்டது.

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
செம கடுப்பாகி முன்னே நிற்கும் வண்டி ஓட்டியை சபித்தபடி, முடிந்தால் இறங்கி நாக்கைப் புடுங்கிக்கிறது போல நான்கு கேள்வி கேட்டு, கொதித்துப் போக வேண்டும்.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

2.
நிகழ்ச்சி:
இந்துத்துவா இயக்கங்களின் அடாவடி என்று பதிவு எழுதி, அதற்கு வரும் பின்னூட்டங்களில் தாக்குதல்கள், பதில் எழுதி எழுதி கை வலி, ஒத்த கருத்து சொன்னவர்கள் மீது பாசம், எதிர்க் கருத்து சொன்னவர்கள் மீது இன்னொரு வகையான பாசம் என்று ஓடும் நாட்கள்

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
ஒரே பரபரப்பு. எப்படியாவது சண்டை ஓய்ந்து விட வேண்டும் என்று தவிப்பு. அடுத்த பகுதியில் என்ன எழுத வேண்டும் என்று குறுகுறுப்பு. தூங்கப் போகும் போதும், எழுந்திருக்கும் போதும் ஒரு முறையாவது இதைப் பற்றி நொந்து கொள்வது.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

3.
நிகழ்ச்சி:
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் வன்முறை. ஸ்டாலின் வாரிசாவாரா! கலைஞரின் வயதான பிறகும் குறைந்து விடாத குறும்பு(!) பேச்சுக்கள்

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
என்ன அரசியல், என்ன நாடு, என்ன கட்சிகள் என்று சலித்துப் போய் மனமே தளர்ந்து போகிறது.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

4.
நிகழ்ச்சி:
அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தீரம். ஈரானிலிருந்து இயற்கை வாயு குழாய் அமைப்பதில் அமெரிக்கா மூக்கை நுழைக்க அனுமதிக்க மாட்டோம் என்று முரளி தியோரா முழக்கம்.

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
ஆகா, என்ன வீரம். கொஞ்சம் முதுகெலும்பும் மிச்சமிருக்கிறதோ என்று நிறைவு.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

டக்ளஸ் ஆடம்ஸ் என்ற பிரித்தானியர் எழுதிய அறிவியல் புனைகதை இருபத்தைந்து ஆண்டுகளாக, 'ஏன் என்று கேள்வி கேட்கும் மக்களை' எல்லாம் மயக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது. வானொலி தொடர், கதைப் புத்தகம், திரைப்படம் என்று பல வடிவங்கள் எடுத்த இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, வானமே இடிந்து விழுந்தாலும் புறங்கையால் ஒதுக்கிப் போட்டு விட்டுப் போய்க் கொண்டிருக்கும் புரிதல் கிடைத்து விடும்.
  1. பூமி எப்படி உருவானது?
  2. பூமியில் மனித இனம் மூன்றாவது புத்திசாலி இனம். முதலிரண்டு இடம் யார் யாருக்கு?
  3. இந்த உலகம், வாழ்க்கை, நடப்புகளுக்கு என்னதான் பொருள்?
  4. உலகத்தின் இறுதியில் என்ன இருக்கிறது?
இப்படி பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் விடை அள்ளிக் கொடுக்கும் புத்தகத்தைப் படித்து, வாழ்க்கையின் மறுபக்கத்தையும் ஒரு தடவை எட்டிப் பார்த்து விடுங்கள்.

விடை:
மனதுக்குள் சின்ன சிரிப்பு சிரித்து விட்டு, அடுத்தது என்ன என்று வேலையைப் பார்க்கப் போய் விடுவோம்

No comments:

Post a Comment