Friday, December 31, 2010

ஜெனிஃபர்

Rage of Angels

ஷிட்னி ஷெல்டன் எழுதிய "Rage of Angels"ன் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் ரா.கி. ரங்கராஜன். முன்பு குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. எங்கள் வீட்டில் பைண்ட் பண்ணி வைத்திருக்கிறார்கள். எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தபொழுது, இதை முதல் முறை படித்தேன். என் அண்ணன் இப்பவே ஜெனிஃபர் படிக்க ஆரம்பித்துவிட்டான் என்று கிண்டல் செய்தது ஞாபகம் இருக்கிறது.

ஜெனிஃபர் பார்க்கர், ஒரு இளமையான, புத்திசாலியான சட்டப் பட்டதாரி. படிப்பை முடித்த கையோடு நியூ யார்க்கின் தலைமை அரசாங்க வக்கீலான டிஸில்வாவிடம் உதவியாளராக சேர்கிறாள். முதல் நாளே அவள் செய்யும் ஒரு சிறிய தவறினால், கோர்ட்டில் டிஸில்வாவினால் தண்டனை வாங்கித் தரப்பட வேண்டிய, அமெரிக்காவின் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைமை வாரிசாக உருவெடுத்து கொண்டிருக்கும் மைக்கேல் மாரெட்டி தப்பி விடுகிறான். அதனால் ஏற்பட்ட கடுங்கோபத்தில், டிஸில்வா ஜெனிஃபர் மீது குற்றஞ்சாட்டி, அவள் வக்கீல் தொழிலையே மேற்கொள்ள முடியாத நிலைக்கு, அவளை தள்ள நினைக்கிறார்.

மனம் வெறுத்து போயிருக்கும் நிலையில், அவளை விசாரிக்க வரும் ஆடம் வார்னர், அவள் ஒரு அப்பாவியென்று முடிவு செய்து, கருணை கொண்டு வழக்கிலிருந்து அவளை விடுவிக்கிறான். வழக்கிலிருந்து விடுபட்டாலும், வாழ்க்கையை ஓட்ட போதுமான வருமானமில்லாமல் கஷ்டப்படுகிறாள். யாரும் உதவியாளராக சேர்த்துக் கொள்ளாததால், அவளே ஒரு அலுவலகத்தை அமைத்து வக்கீல் போர்டை மாட்டிக் கொள்கிறாள்.

இதற்கிடையில் வார்னர் வந்து அவளை அடிக்கடி சந்திக்க, இருவருக்குமிடையில் காதல் மலரத் துடிக்கிறது. ஆனால் வார்னர் ஏற்கனவே திருமணமானவன். விருப்பமின்றி செய்து கொண்ட திருமணம். அதனால், அவனால் ஜெனிஃபர் மீதான காதலை தவிர்க்க முடியவில்லை.

ஒரு நாள் ஜெனிஃபருக்கு ஒரு கேஸ் கிடைக்கிறது. கொஞ்சம் கூட வலுவில்லாத கேஸ். ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை என்ற நிலையிலும் ஒத்துக் கொள்கிறாள். இவள் ஒரு கேஸில் அஜராகிறாள் என்று தெரிந்த டிஸில்வா, கோபத்துடன் வேண்டுமென்றே எதிர்தரப்பில் ஆஜராகிறார். ஆனால் கடைசி நிமிட புத்திசாலித்தனங்களால் அந்த கேஸில் ஜெனிஃபர் ஜெயித்து விடுகிறாள். அரசாங்க வக்கீலான டிஸில்வாவையே தோற்கடித்ததால் கொஞ்சம் பெயர் கிடைத்து, கொஞ்சம் கேஸ்கள் வர ஆரம்பிக்கிறது.

வார்னருக்கும், ஜெனிஃபருக்குமான காதல் முற்றி கொண்டிருக்கும் வேளையில், ஜெனிஃபரும் ஒரு வெற்றிகரமான வக்கீலாக உருவெடுத்து கொண்டிருக்கிறாள். வார்னருக்கு ஸெனட் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. வார்னரின் மனைவி, தான் விட்டுக்கொடுத்து விவாகரத்து கொடுத்து விடுவதாக கூறி, ஜெனிஃபரை நம்பச் செய்து, தேர்தல் முடியும் வரை பொறுக்குமாறு கூறுகிறாள். ஆனால் இடையிலேயே, வார்னரின் ஒரு வீக் மொமன்ட்டில், அவனை மயக்கி, கர்ப்பம் தரித்து விடுகிறாள். அதனால் வார்னர் ஸெனட்டர் பதவியை தக்க வைத்து கொள்ள, ஜெனிஃபரை துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஜெனிஃபரும் அந்த நேரத்தில் கர்ப்பம் தரிக்கிறாள்.

யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்று, தனது வளர்ப்பு பையன் என்ற போர்வையில் வளர்க்கிறாள். இதற்கிடையில், மைக்கேல் மாரெட்டியும், ஜெனிஃபரின் வெற்றிகளை கவனிக்கிறான். அவளை தனது மாஃபியா கும்பலின் வக்கீலாக்குவதற்கு முயன்று தோல்வியடைகிறான்.

ஜெனிஃபரால் கைவிடப்பட்ட ஒரு குற்றவாளி, அவள் பையனை கடத்திவிட, அந்த நேரத்தில், வார்னரை உதவிக்கு அழைக்க முயன்று முடியாமல் கலங்கும்பொழுது, மாரெட்டியின் நினைவு வருகிறது. அவனும் எளிதாக குழந்தையை காப்பாற்றி கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனது மாஃபியா வலைக்குள் தெரிந்தே மாட்டிக்கொள்கிறாள். மாரெட்டியும் அவளை விரும்புகிறான். ஒரு நேரத்தில் அவள் குழந்தையும் ஒரு விபத்தில் இறந்து போகிறது.

இதற்குள், வார்னர் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து விடுகிறான். அதற்குள் மாரெட்டியின் மாஃபியா கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்க வார்னர் முயல, மாரெட்டி வார்னரை கொல்ல திட்டமிடுகிறான். அது தெரிந்த ஜெனிஃபர் வார்னரை காப்பாற்ற கடைசி நொடியில், தன்னுடலில் தோட்டாவை வாங்கி சாய்கிறாள்.

அவள் பிழைத்து எழும்பொழுது வார்னர் ஜனாதிபதியாகிவிட, தனது வக்கீல் வாழ்க்கையை தொடர வெறுமையுடன் கிளம்புகிறாள்.






கேஸ்களில் ஜெயிப்பதற்கு ஜெனிஃபர் கையாளும் தந்திரங்கள், மிகவும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, ஒரு கேஸை குறிப்பிட்ட காலத்துக்குள்தான் அப்பீல் செய்ய முடியும் என்பதை பயன்படுத்த எதிர்தரப்பு வக்கீல், அவளை சந்திப்பதை இழுத்தடித்து கொண்டே போக, கடைசி நாளில் ஜெனிஃபர் நேர வித்தியாசத்தை பயன்படுத்தி கேஸை அப்பீல் செய்வது, மிகவும் சுவாரஸ்யமான திருப்பம்.

ஷிட்னி ஷெல்டனின் கதைகளில் நான் படித்தவற்றுள், இது ஒரு வித்தியாசமான கதை!

No comments:

Post a Comment