Wednesday, November 23, 2011

பெண்களின் தந்திரங்களும் குழந்தையும்

பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா? அலுவலகத்தில் சண்டையாகி விட்டது.பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார். வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார். நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள். சங்கடமான சூழ்நிலை. மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய்விட்டார்.வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார். அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை.ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் நுழைந்தார்கள்.சங்கடங்கள் கரைய ஆரம்பிக்க இணக்கமான சூழ்நிலை மறுபடியும் வந்து விட்டது.தான் சொன்னால் கணவரோ, மாமியாரோ,மற்றவர்களோ கேட்க மாட்டார்கள் என்று அப்பெண் நினைக்கிறார். குழந்தையிடம் சொல்லி குழந்தையின் விருப்பமாக சொல்ல வைக்கிறார்.எளிதாக வெற்றி கிட்டி விடுகிறது.
காதல் திருமணத்தால் முறைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் உறவுகளும் குழந்தை பிறந்தது தெரிந்தவுடன் பரவசமாகி ஓடுகிறார்கள்.சில குடும்பங்கள் குழந்தைகளுக்காக பிரியாமல் இருக்கின்றன. குழந்தை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கிறது.ஏனெனில் குழந்தைகள் உலகம் மகத்தானது.நண்பர் ஒருவரின் பையன் ஏதோ பேச்சுக்கு கோபமாக பேச ஆரம்பித்தான்.பேசிய அனைத்து வார்த்தைகளும் தொலைக்காட்சி தொடரில் ஒருவர் பேசியது.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் அதே போல பேசுவதையும் ,நடிப்பதையும் கவனித்துப் பாருங்கள்.இவை நல்லவற்றை கற்றுத்தரும் என்று நான் நம்பவில்லை.தொடர்களில் வரும் பாத்திரங்கள் அமைதியற்ற குணங்களை கொண்டிருக்கின்றன.குழந்தைகளிடம் இத்தகைய குணங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன.இருவரும் சம்பாதிக்க ஓட வேண்டிய நெருக்கடியான சூழலில் குழந்தைகள் நலமே பலியாகிறது.பாட்டியிடம் அல்லது வேலைக்காரர்களிடம் விட்டுவிட்டு போகிறார்கள்.குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான நெருக்கம் குறைகிறது.

அன்பு என்பது தாயிடம் மட்டுமே குழந்தைகள் அதிகளவு உணர்கின்றன.ஒரு தாய் குழந்தையின் முதுகில் அடித்துவிட்டு நகர்ந்தால் தாயை பின்தொடர்கிறது.அழுதுகொண்டு அம்மாவிடமே ஓடும்.அப்பா அடித்தாலும் அம்மாவிடம் ஓடுகிறது.வயது அதிகரித்தால் அப்பாவிடமும் மற்றவர்களிடமும் போய் நிற்கும்.காலையில் அவசரமாக எழுந்து பரபரப்பாக தயாராகி ,அரைகுறையாக விழுங்கி விட்டு புத்தகப் பையுடன் நடக்கும் குழந்தையின் முகத்தில் குழந்தையை பார்க்க முடியவில்லை.
என்னுடைய பாகவதமும் பைபிளும் இடுகையில் இருந்து சில வரிகள்.சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.

சக பெண் ஊழியர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது சொன்னது," பெரியவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.குறும்பை தாங்க முடியவில்லை.சின்னப் பையன் அப்படியில்லை,அமைதி!" அவருக்கு நான் சொன்னது,"சின்னப் பையனை விடுதியில் சேர்த்து விடுங்கள்,பெரியவன் வேண்டாம்.குழந்தை அமைதியாக இருந்தால் அது பொம்மை.குறும்பு செய்தால் அது குழந்தை.

No comments:

Post a Comment