Wednesday, November 23, 2011

மனைவிக்கு கணவன் மீது வரும் சந்தேகம்.

நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப நாள் ஆகிவிட்டது போலவும் தோன்றுகிறது.மகாராணி என்று சொல்லவேண்டும்.இன்னும் மேலாக ஏதாவது சொல்லலாம்.எப்படித்திரும்பினாலும் ஆனந்தம்.அந்த நாட்களிலேயே ஒருவரால் வாழ முடிந்தால் எப்படி இருக்கும்?

சின்னப் பையன் முதல் கிழங்கள் வரை அவளை பார்த்தால் அப்படி ஒரு இதம்.வீதியில் நடந்து போகும்போது பசங்கள் எதையாவது உளறுவார்கள்.சந்தோசமாக இருக்கும்.சில நேரங்களில் உடல் உதறும்.ஓடிப்போய் வீட்டில் அடைந்து கொள்ளத் தோன்றும்.


காதல் அது இது என்று என்னென்னவோ சொல்கிறார்கள்.அப்படித்தானா என்று நிச்சயமாக தெரியவில்லை.பிடித்திருந்தது.வீட்டைக் கடக்கும்போது சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்.மனம் இருப்புக் கொள்ளாமல் துள்ளும்.ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
ஒருநாள் வெளியே வந்து பக்கத்து வீட்டு அண்ணியை அழைத்தாள்.அவரது குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.அண்ணி முகத்தை சுளித்து சொன்னது ஒரே வார்த்தைதான்.அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! அதே நொடியில் மனம் விழுந்து விட்டது.அதற்குப்பிறகு சைக்கிள் மணியைக் கேட்டால் குறுகுறுவென்று இருக்கும்.சில சமயம் வெறுப்பாக இருக்கும்.

ஒருவேளை அவனை காதலித்திருந்தால் நாம் சந்தோசமாக இருந்திருப்பேனோ! என்று தோன்றுகிறது.எதிர் வீட்டில் ஒரு கிழவி இருப்பாள்.பெரிய மகராசன்தான் உனக்கு மாப்பிள்ளையாக வருவான் என்பாள்.புள்ளைக்கு சுத்திப்போடு என்று அம்மாவிடம் சொல்வாள்.அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

பல பேர் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் சுமார்தான்.ஒரு வழியாக கல்யாணம் ஆகிவிட்டது.மகிழ்ச்சியான நாட்கள் முடிந்து போய்விட்டது போல தோன்றுகிறது.இப்போதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது.

நீ தனியாக எங்கும் போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.காலையில் கடைக்கு போகவேண்டும் என்றால் "ஏன் உன்னால் தனியாக போக முடியாதா? என்று கேட்கிறார்.அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.திரும்ப திரும்ப குழந்தை பற்றியே கேட்கிறாள்.எரிச்சல்தான் மிச்சம்.

திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது.ஒருவேளை அப்படி இருக்குமோ? தொலைக்காட்சி தொடர்களும்,கேள்விப்பட்ட கதைகளும் நினைவுக்கு வந்தன.வேறு யாராவது?! உடல் வியர்த்துவிட்டது.இருதயத்துடிப்பு காதில் கேட்டது.அவனுடைய மேசையை திறந்து சோதிக்கத் தோன்றியது.உடலெங்கும் பரபரப்பு! சிறுநீர் கழிக்கவேண்டும் என்று தோன்றியது.

அப்படியே படுக்கையில் சாய்ந்தபோது " போன் செய்தால் என்ன என்று தோன்றியது! அலுவலக நேரங்களில் போன் செய்து பழக்கமில்லை.உடனே எடுத்துவிட்டான்.என்ன? " சாப்பிட்டீங்களா? நேத்து தலை வலின்னு சொன்னீங்க! குட்டிப்பாப்பா உங்க போட்டோவ காட்டி வேணும்னு கேட்கறா!" மூச்சு விடாமல் பேசி விட்டாள்.

No comments:

Post a Comment