Wednesday, November 23, 2011

என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்

அவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள்.

உங்கள் நண்பர்களைப் பற்றி கூறுங்கள்.அவர்களும் பதிவர்களா?

அவர்களும் பதிவர்களே!ஒரு முறை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் எழுதிக் கொண்டிருக்கும்போது “நண்பேண்டா” என்று குரல் கேட்ட்து.திரும்பினால் இரண்டு பேர் சிரித்துக்கொண்டு என்னைத் தழுவிக் கொண்டார்கள்.அப்போது முதல் மூவரும் ஒருவரானோம்.அவர்களும் எழுத்தாளர்கள்தான்.அவர்களை நான் அதிகம் சிந்திக்கவிடுவதில்லை.என்னுடைய பதிவை காபி,பேஸ்ட் செய்து கொள்வார்கள்.நான் லிங்கும் கொடுத்திருக்கிறேன்.எனக்கு ஓட்டும்,ஆளுக்கு பத்து கமெண்டும் போடுவார்கள்.இப்போது என்னால் தியேட்டர்,பஸ் ஸ்டாண்ட் என்று கழிப்பிடம் பக்கம் போக முடிவதில்லை.அவர்களை அனுப்புகிறேன்.

வலைப்பதிவுதான் இருக்கிறதே,ஏன் கழிப்பிடத்தில் எழுதவேண்டும்?

உங்கள் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.நான்கு நாட்கள் ஆகிவிட்டாலே பதிவை யாரும் தேடி படிக்க மாட்டார்கள்.பொதுக்கழிப்பிடம் அப்படி அல்ல! கட்டிட தரம் பொறுத்து 100 ஆண்டுகள் கூட வாழும்.தானாக இடிந்து போகும்வரை நம்முடைய எழுத்துக்கள் இருக்கும்,அதுவரை சுத்தமும் செய்யமாட்டார்கள்.நாங்கள் ஒருவித அழியாத மையை கண்டுபிடித்திருக்கிறோம்.


ஆனால் உங்களுடைய பெயர் முன்னணி பதிவர்கள் பட்டியலில் வருவதில்லையே?

அது தொழில் நுட்ப கோளாறு.எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால் சாதிக்க முடியாது.முதுகிலும்,தொடையிலும் அரித்துக்கொண்டே இருக்கிறது.சொரிவதற்கு உங்கள் தொழில்நுட்பம் ஒரு கருவியை கண்டுபிடித்த்தா?

உங்கள் மனைவியை அழைத்துவர முடியாதா? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள்.

நான் உங்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன்.என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை.தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.ஒன்பது நாட்கள் பாக்கி இருக்கிறது.அவருக்கு கோபம் அவ்வளவுதான்.நாட்டின் எதிர்காலத்திற்காக சிலதை விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும்.தவிர பதிவு போட ஒருமணி நேரம் தாமதமானால்கூட இருநூறு மெயில் வருகிறது.


ஒரு வேளை எழுதாததற்கு நன்றி தெரிவித்து இருக்குமோ?

அந்த மெயிலை படிக்க எனக்கு நேரமில்லை.கிண்டலுக்காக பேட்டி எடுப்பதாக இருந்தால் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.இதில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருக்கிறது.கேலி,கிண்டல் செய்தே நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கிறோம்.கொஞ்சம் கூட சீரியஸாக சிந்திக்கத் தெரியவில்லை.

No comments:

Post a Comment