Wednesday, November 23, 2011

காதல் மனைவி புத்தி சொன்னால் கேட்பதில்லையே ஏன்?

அவர் வருத்த்த்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். எத்தனையோ முறை அறிவுரை சொல்லி பார்த்தாகிவிட்ட்து சார்! கொஞ்சம் கூட மண்டையில் ஏறுவதேயில்லை! திரும்பத் திரும்ப அதையேதான் செய்து கொண்டிருக்கிறாள்!’’ மனைவியால் மனசுக்கு கஷ்டம்தான் பாவம்.வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்.பின்னர் அவரது பெற்றோர் ஆனது ஆகிவிட்ட்து என்று வரவேற்பு வைத்தார்கள்.

இன்றைய மனைவி காதலியாக இருந்தபோது அவரது உதட்டசைவுக்காக தெருமுனையில் படபடப்பாக நின்றவர் அவர்.அப்போது காதலியைத் தவிர யாரும் முக்கியமில்லை.இப்போது மற்றவர்களும் முக்கியமாக தெரிகிறார்கள்.அதனால் புத்தி மேல் புத்தியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.பலன் மட்டும் இல்லை.

உலகத்தில் மிக எளிதாக கிடைக்கும் பொருள் அறிவுரை.யாரோ சலிப்புடன் கூறியது நினைவுக்கு வருகிறது” மூணு வயசு புள்ள கூட புத்தி சொல்லும்,அப்படி நடப்பதுதான் கஷ்டம்”உண்மையான விஷயம்.யார் வேண்டுமானாலும் புத்தி சொல்லிவிடலாம்தான்.ஆனால் உலகத்தில் யாரும் விரும்பாத ஒன்றும் அறிவுரைதான்.எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப் பட்டுவிடும்.
அறிவுரை என்பது சொல்பவரை உயர்ந்தவராகவும்,கேட்பவரை தாழ்ந்தவராகவும் இருக்கச் செய்கிறது.இது மனித மனத்தின் அடிப்படைக்கே எதிரானது.உற்வினர்,அப்பா,அம்மா என்று தவிர்க்க முடியாதவர்கள் ஆனாலும் எரிச்சலுடன் வாதிடுவார்கள்.இல்லாவிட்டால் அமைதியாக கேட்டுக்கொள்வார்கள்.சொல்வதைக் கேட்டு நடப்பது கஷ்டம்தான்.

அறிவுரை சொல்லும்போதே உனக்கு மூளை இல்லை என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.அடுத்த்து இது பெரும்பாலும் உத்தரவாக இருக்கும்.”அதைசெய்! இதைச்செய்!!” இன்னொரு விஷயம் உத்தரவுகளும் யாருக்கும் பிடிக்காது.பலர் புத்தி சொல்லும்போது எரிச்சலான குரலிலும்,முகத்தை சுளித்துக்கொண்டே பேசுவார்கள்.இதெல்லாம் ஒருவர் மீதான அன்பைக்காட்டுவதில்லை.வேறுபடுத்தியே உணரத் தோன்றும்.

எதிரில் இருப்பவர் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவே மாட்டார்கள்.ஒருவரை புரிந்து கொள்ளூம் நோக்கம் அறிவுரை சொல்வதில் இருப்பதில்லை.தன்னைப் பற்றி விளக்கி பேச ஆரம்பித்தாலும் அதற்கு வாய்ப்பு கிடைக்காது.” நீ வாயை மூடு,உனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக இருக்கும்.ஒருவரே காட்சியை நட்த்திக் கொண்டிருப்பார்.


அறிவுரை கேட்பவரின் கருத்துஎன்னை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதாக இருக்கும்.உண்மையான பிரச்சினையும் இதுதான்.ஒவ்வொருவரும் வேண்டுவது என்ன?நமக்கு ஏற்றவாறு நாம் விரும்பியவாறு நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.ஆனால் இன்னொரு மனிதன் எந்திரம் அல்ல!கணவன்,மனைவி,பிள்ளைகள் யாரும் வெறும் உடல் அல்ல!

மனைவியின் செயல் அல்லது கணவனின் செயல் பற்றி அதன் நன்மை,தீமைகளை பொறுமையாக விளக்குவது ஒரு வழிமுறை.அன்பான வார்த்தைகளில் கூறப்படும் எதுவும் புரிதலை உருவாக்கும் வாய்ப்புண்டு.முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.பல நேரங்களில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியாமல் போய் விடுகிறது.
பேசும் ஆட்களைப் பொருத்தும்,தொனியிலும் கூட நல்ல ஆலோசனை அறிவுரையாக மாறும் ஆபத்து இருக்கிறது.மிக எளிமையான விஷயம்.அதிகம் பேசுபவர்கள் அவர்களாக இருக்க வேண்டும்.பொறுமையாக கேட்டு பிரச்சினையை அலச முடிந்தால் விளைவு நன்றாகவே இருக்கும்.

No comments:

Post a Comment