Friday, November 25, 2011

சந்தேகத்தால் சிதறும் தாம்பத்யம்.


சம அந்தஸ்து, படிப்பு, சொந்தவீடு, அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பையனின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷம்.குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.

ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார். ”எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார். வெளியே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்க்கிறார், வாழ்க்கையை நினைத்தால் பயமாயிருக்கிறது’’

மேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம்தான்.தன்னை விட அழகான மனைவி அமைந்த்தால் சந்தேகம் ஏற்பட்டு மனநோயாளியானதை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.நிஜத்திலும் உண்மையில் மனநோய் ஏற்படும் அளவுக்கு பிரச்சினையை தரும் ஒன்றுதான் இந்த சந்தேகம்.தீவிரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.

ஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.


தனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள்,உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக்குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.

பாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும் அவர்களது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.சந்தேகமும்,பொறாமையும்,கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அளவில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான்.அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப்பெற்ற பெண் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.

கொலை செய்யும் அளவுக்கு,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.

No comments:

Post a Comment