Saturday, November 26, 2011

கார்டு கிரிமினல்களின் புதிய அவதாரங்கள்! - உஷார் ரிப்போர்ட்

ஏ.டி.எம். மையங்களைக் குறிவைத்து நடக்கும் மோசடிகளால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஏற்கெனவே கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி. போன்ற வங்கி களின் கார்டுகளை வைத்து இருந்தவர்களிடம் நூதன மோசடி செய்த, ஷார்ட்டி என்கிற உமேஷ் என்பவன் தலைமையில் செயல்பட்ட கும்பலை போலீஸ் பிடித்துவிட்டது.

http://www.enayamthahir.com/
ஆனாலும், அவர்கள் திருடிய கார்டுகளின் ரகசியத் தகவல்களை வெளி நாடுகளில் உள்ள கிரிமினல்களிடம் விற்பனை செய்துவிட்டனர். அதனால் இங்கு இருப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை ஆன்-லைன் டிரான்ஸ்ஃபர் மூலம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடக்கிறது. அதனால் யாரும் பணத்தை இழந்துவிடாமல் இருக்க, 'உடனே பின் நம்பரை மாற்றுங்கள்' என்ற அவசர வேண்டுகோளை சென்னை போலீஸார் விடுத்தனர். கார்டு மோசடி எப்படி எல்லாம் நடந்துள்ளது என்பதை அறிந்து பதறிப் போயிருக்கிறார்கள் போலீஸார்! 
சென்னையைச் சேர்ந்த ஒரு பிரமுகர், 'நான் புதிய கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். கார்டு எனக்கு வந்து சேரவில்லை. ஆனால், எனது கணக்கில் இருந்து 2.5 லட்சம் எடுக்கப்பட்டு இருக்கிறது!’ என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

உடனே அந்த வங்கியை போலீஸ் அணுகியபோது, 'புதிய கார்டை நாங்கள் அந்த வாடிக்கையாளருக்கு கூரியர் தபாலில் அனுப்பிவைத்தோம்' என்றனர். கூரியர் நிறுவன ஊழியர்களிடம், 'ஸ்பெஷல்’ விசாரணை நடத்தவே, உண்மையைக் கக்கிவிட்டனர் அவர்கள். ''கிரெடிட் கார்டை இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்பது அப்போதுதான் எங்களுக்கு முழுமையாகத் தெரிய வந்தது...'' என்கிறார்கள் போலீஸில்.

''கூரியரில் அனுப்ப கிரெடிட் கார்டு வந்தால், உடனே பாலாஜி என்பவருக்குத் தகவல் சொல் வோம். அவர் நேரில் வந்து, 'ஹாட் ஏர் கன்' எனப் படும் சாதனம் மூலம் தபாலின் கீழ் பாகத்தைப் பிரிப்பார். உள்ளே இருக்கும் கார்டை எடுத்து இன்னொரு மிஷினில் 'ஸ்வைப்' செய்வார். எங்க ளுக்கு ஒரு கார்டுக்கு 1,000 தருவார். மற்றபடி வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது!'' என்று உண்மையைக் கக்கி இருக்கிறார் கூரியரைக் கொண்டுபோய் கொடுக்கும் ஊழியர் ஒருவர். அதையடுத்து கூரியர் ஊழியர்களான ஸ்ரீதர், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். தபால்களைப் பிரித்துக் கொடுக்கும் பாலாஜி, வினோத் ஆகியோர் பிடிபட்டு இருக்கிறார்கள். இவர் களுக்குத் தலைவனாக செயல்பட்ட மனோஜ்குமார் ராஜசேகர் தப்பிவிட்டான். இவனைத் தேடும் பணி நடக்கிறது.

இது தவிர, வேறு ஒரு திருட்டுக் கும்பல் முக்கிய மான இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளையும் இதற்குப் பயன்படுத்தி இருக்கிறது. 'ஸ்கிம்மர்' மிஷினை இந்த திருட்டுக் கும்பல் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சில ஊழியர்களிடம் ரகசியமாக கொடுத்து இருக்கிறார்கள். வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை பங்க் ஊழியர் பயன்படுத்தும்போது, திருட்டுத்தனமாக ஸ்கிம்மர் கருவியிலும் 'ஸ்வைப்' பண்ணிவிடுவார். இந்த வகையில் மோசடி செய்த கும்பலும் இப்போது பிடிபட்டு இருக்கிறது.
கார்டு மோசடி குறித்துப் பேசும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, ''சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் சில வங்கிகளின் உயர் அதிகாரி களை அழைத்து கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் முன்னிலையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் ரகசிய கேமரா, உரிய பயிற்சி முடித்த இளம் வயது செக்யூரிட்டிகள் நியமனம், சர்ப்ரைஸ் விசிட் போன்றவற்றை அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும், பணத்தை வாடிக்கையாளர் எடுத்ததும் எஸ்.எம்.எஸ். முறையில் தெரிவிப்பது, போட்டோ ஒட்டிய கார்டுகள் மற்றும் 'சிப்' கார்டுகளைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கி இருக்கிறோம். புதிதாக அனுப்பப்படும் கார்டு, சரியானவாடிக்கையாளரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் அந்த கார்டை ஆக்டிவேட் செய்யவேண்டும். மேலும் ஒரு திருட்டு நடந்துவிட்டால் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விளக்க வேண்டும். இதை வங்கி தரப்பினரிடம் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அதே போல், வாடிக்கை யாளர்களும் உஷாராக இருக்க வேண்டும். அடிக்கடி பின் நம்பரை மாற்ற வேண்டும். கார்டு சம்பந்தப்பட்ட தகவலை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது ஏதாவது சிக்கல் என்றால், சம்பந்தம் இல்லாத நபர்களிடம் உதவி கேட்கக் கூடாது. கார்டு நுழைக்கும் இடத்தில் ஏதாவது ஸ்டிக்கர் போன்ற ஏதாவது புதிய பொருள் தென்பட்டால், அந்த மிஷினைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளிலும் கார்டைப் பயன்படுத்தும் வசதியைத் தேவை இல்லாமல் வைத்திருக்க வேண்டாம். ஆன்-லைன் பண பரிமாற்றத்தை உங்களுக்கான வங்கியின் அதிகாரபூர்வ வெப்-சைட்டில் மட்டுமே செய்ய வேண்டும். யாராவது போனிலோ, இ-மெயில் மூலமாகவோ உங்கள் கார்டின் விவரங்களைக் கேட்டால், தரவே கூடாது!'' என்றார்.

வங்கிக் கொள்ளைத் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், ''பணம் அச்சடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதில், மூன்று பாதுகாப்பு அம்சங்களே இருந்தன. இப்போது 13 அம்சங்கள் இருக்கின்றன. ஏனென்றால், கிரிமினல்கள் புத்திசாலித்தனமாக ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் பிரேக் செய்கிறார்கள். அதனால், புதுவிதப் பாதுகாப்பு அம்சங்களை அரசாங்கம் அடிக்கடி அமல்படுத்துகிறது. இப்போது இந்த கிரடிட் கார்டு மோசடியிலும் அதே பாணியில்தான் கிரிமினல்களுக்கும் போலீஸுக்கும் போட்டி நடக்கிறது. வங்கிகளும், வாடிக்கையாளர்களும் எங்களுடன் ஒத்துழைத்தால் எப்படிப்பட்ட கிரிமினலையும் பிடித்து உள்ளே தள்ளிவிட முடியும்...'' என்கிறார்.

வங்கி மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டால்தான், வாடிக்கையாளர்களது பணம் தப்பும்!

2 comments:

  1. திருடு போறது ஒரு பக்கம் இருந்தாலும் வங்கிகள் சரியான உடனடி நடவடிக்கை எடுப்பது இல்லை,சில நேரங்களில் atm உள்ளே பணம் வராமல் எடுத்து விட்டதாக கணக்கு காட்டுகிறது என்ன செய்ய !

    ReplyDelete
  2. பேசாம காச என்கிட்டே கொடுத்துடுங்களேன். பத்திரமா வெச்சுக்குறேன்.

    ReplyDelete