Saturday, July 9, 2011

சினிமாவால் சீரழிந்த இளம்பெண்ணின் கண்ணீர் கதை!

சினிமா ஆசையில் சென்னைக்கு வருவதும், சினிமா ஆசை காட்டி மோசடி செய்பவர்களிடம் ஏமாந்து கற்பை தொலைப்பதும் , பணத்தை இழப்பதும் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லோரும் போலீசுக்கு போவதில்லை.
 

ஒரு சிலர்தான் நீதி கேட்டு காவல்துறையை நாடுவது உண்டு .தன்னை ஏமாற்றியவனுக்கு தண்டனை வாங்கித்தர துடிப்பது என இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்க வைத்த சினிமா மோசடிக்காரர்களை கண்டித்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவங்களும் அவ்வப்போது நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வந்தாலும் ஆசை யாரை விட்டது. இதோ இங்கே ஒரு பெண் சினிமாவால் என் வாழ்க்கையே சீரழிந்து விட்டது என்று காதலித்து, திருமண நாடகம் நடத்தி ஏமாற்றியவன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அந்த பெண்ணின் பெயர் சத்யப்ரியா (20). கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர். பிளஸ்2 படித்து விட்டு அந்த பகுதியில, உள்ள ஒரு ஜீன்ஸ் பேண்ட் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு போனில் பேசிய ஒருவர், சென்னையில் சூப்பர்வைசர் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அவரை நம்பி சென்னை சென்ற சத்ய ப்ரியா, அங்கு தன்னை சினிமா டைரக்டரின் உறவினர் என அறிமுகப்படுத்திக் கொண்ட கோவிந்தன் என்பவருடன் பழக ஆரம்பித்தார். நீ அழகா இருக்கிறாய்.... சினிமாவில் உன்னை சேர்ந்து விடுகிறேன், கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பிய சத்யப்ரியா, கோவிந்தன் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் கோவிந்தனையே திருமணமும் செய்து கொண்டார். திருமணமான ஒரே மாதத்தில், நேரம் சரியில்லை எனக்கூறி சத்ய ப்ரியாவை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த கோவிந்தன் இன்று வரை திரும்பியே வரவில்லை.

இதற்கிடையில் வேறு திருமணம் செய்ய கோவிந்தன் முயற்சிப்பது பற்றி கேள்விப்பட்ட சத்யப்ரியா, விழுப்புரத்தில் உள்ள கோவிந்தன் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி விட்டார். உண்ணாவிரதம் இருக்கும் சத்யப்ரியா அளித்துள்ள கண்ணீர் பேட்டியில், என்னுடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பில்தான் வாழ்ந்து வந்தேன். நான் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலையில் சேரத்தான் சென்னை வந்தேன். வந்த இடத்தில் எனக்கும் கோவிந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

என்னிடம் கோவிந்தன், தனது மைத்துனர் சினிமா டைரக்டர் என்றும் அவர் மூலம் உன்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன், கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய என்னை, கோவிந்தன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

பலருடன் அப்படி இப்படி இருக்கச் சொன்னார். அப்போதுதான் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் சிலவற்றை சகித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அப்படி இருக்க எனக்கு பிடிக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல நினைத்தேன். என்னை தடுத்த கோவிந்தன், திருமணம் செய்து கொள்வதாக கூறி தாலி கட்டி விட்டார்.

திருமணத்துக்கு பிறகு விழுப்புரம் வந்து விட்டோம். சில நாட்களில் என்னை அடித்து, உதைத்து 15 பவுன் நகையை வாங்கி விட்டார். அதன் பின்னர் விரட்டி விட்டு விட்டார். கோவிந்தனையும், சினிமாவையும் நம்பி இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன், என்று கூறினார்.

சினிமா ஆசையில் தினம் தினம் சென்னைக்கு படையெடுக்கும் இளம்பெண்களில் பலர், சத்யப்ரியா போன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சினிமா என்ற பணம் காய்க்கும் மரத்தை நம்பி, இலவு காத்த கிளியாக ஏமாறும் பெண்களை என்னவென்று சொல்வது? அதுபற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே ...!

No comments:

Post a Comment