Thursday, March 24, 2011

நான் உனக்கு அம்மா மாதிரி; நீ எனக்கு மகள் மாதிரி.



 என் சொந்த ஊர் மதுரை; வயது 82. தலையெல்லாம் முழுதாய் நரைத்து, காரைக்கால் அம்மையார் போலிருப்பேன். கடந்த, 60 வருடங்களாக, மக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து வருகிறேன். ஆறு மகள்களையும் கட்டிக் கொடுத்து, பேரன் - பேத்திகளை பார்த்து விட்டேன். கடந்த, 10 வருடங்களாக, மூத்த மகள் வீட்டிலேயே தங்கி, பகுதி நேர, சித்த மருத்துவம் பார்க்கிறேன். மருமகன் ஒரு குணக்கேடன்; அவனுக்கும், எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை. தினமும் யோகா, தியானம் செய்வேன். காலையில் துணிப்பையுடன் கிளம்பி, மூலிகை சேகரித்து வருவேன்; மாலையில், விரும்பி வருபவர்களுக்கு, வைத்தியம் பார்ப்பேன்.
மகள் குடியிருக்கும் தொழிற்சாலையின், "ஏ பிளாக்' குடியிருப்பில், மொத்தம், 60 வீடுகள். எதிர் எதிராய் பார்த்தபடி, 30, 30 வீடுகள். இடது சாரியின் நான்காவது வீட்டில், ஒரு கணவன் - மனைவி குடியிருக்கின்றனர். இருவரும், பெரும் பணம் கொடுத்து, தொழிற்சாலையில் உயர்பதவிகள் பெற்றவர்கள். கணவனுக்கு, 38 வயது இருக்கும்; உயரமாக இருப்பான். குடிகாரத் தொப்பை துருத்திக் கொண்டிருக்கும். "டீசென்ட்' ஆக காட்சியளிக்கும் அவன், வாய் திறந்தால், கலீஜாய் பேசுவான். அவன் மனைவிக்கு, 33 வயதிருக்கும். அவர்களுக்கு, ஒரே ஒரு ஆண் குழந்தை; வயது நான்கிருக்கும்.
அங்கு குடியிருப்போர் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருவருமே தொழிற்சாலை தங்களுக்குரியது எனவும், தாம் இல்லாவிட்டால் தொழிற்சாலை இல்லை என்ற மமதையுடனும் நடந்து கொள்வர். ஆனால், மேற்சொன்ன புருஷன், பொண்டாட்டி உல்ட்டாவாக நடந்து கொள்வர். புருஷன்காரன், குடியிருப்பில் எந்தெந்த வீட்டில் கன்னிப் பெண்கள் இருக்கின்றனரோ, அந்த வீடுகளுக்கு சென்று அளவளாவுவான். அதுவும் லுங்கி, பனியனுடன் அவர்கள் வீட்டு வாசலில் நின்று, பெரும் குரலில் பேசி, சிரிப்பான். பெரிய அதிகாரியாய் இருந்தும், பெண்களிருக்கும் வீடுகளுக்கு, விழுந்து விழுந்து எடுபிடி வேலை செய்வான். சமுதாயத்தில் இருக்கும் கண்ணியமானவர்களை மதிக்க மாட்டான். 


சமூக விரோதிகளை, பைசா பெறாதவர்களை வலியப் போய், "தலைவா' என அழைப்பான். அவனுடைய மனைவி, குடியிருப்பில் எந்ததெந்த வீட்டில் விடலை பையன்கள், 40 வயது ஜொள்ளர்கள் இருக்கின்றனரோ, அங்கு போய் கதைப்பாள் அல்லது அவர்களை வீட்டுக்கு வரவழைத்து கும்மியடிப்பாள்.
என்னைப் பார்த்ததும் புருஷன்காரன், "மூலிகைக் கிழவி' என சபிப்பான். புருஷன் நடவடிக்கை பொண்டாட்டிக்கு தெரியுமா? பொண்டாட்டி நடவடிக்கை புருஷனுக்கும் தெரியுமா அல்லது இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தான் ஆண், பெண்களை வீழ்த்துகின்றனரா? இவர்களின் உள்நோக்கம் குடியிருப்பு மக்களுக்கு தெரியவில்லையா? <உள்நோக்கம் தெரிந்திருந்தும், பெரிய பதவியில் இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக மவுனம் சாதிக்கின்றனரா? நானும், குடியிருப்புக் காரர்களிடம் கரடியாய் கத்தி விட்டேன்; யாரும் முழித்துக் கொள்வதாய் இல்லை.
என் மகளோ, "உன் மருமகனையே உன்னால் கண்டிக்க முடியவில்லை. ஊர் ஆண்பிள்ளைகளை, ஜனங்களை திருத்த கிளம்பிட்டியோ. இது, உன் கிராமம் அல்ல. பணத்தை மட்டும் பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நகரம். இவர்களுக்கு உன் சித்த மருத்துவமும், ஒழுக்கப் போதனையும் அறவே தேவையில்லை. ரொம்ப மூக்கை நுழைச்ச, அடிச்சு, செத்த எலியை தூக்கிப் போடுற மாதிரி, குப்பைத் தொட்டில போட்டுடுவாங்க...' என்கிறாள்.
ஒழுக்கக்கேடான புருஷன், பைக்கில் செல்லும் போது, நடக்கும் என் மீது பைக்கை ஏற்றி விடுவது போல் வண்டியை நொடிக்கிறான். என்னுடைய தலையீட்டுக்கு பிறகு, அந்த விவகாரமான புருஷன், பொண்டாட்டியிடம் ஆணும், பெண்ணும் விழுந்து, விழுந்து பழகுகின்றனர். என்னைப் பார்த்ததும், "பைத்தியம்' எனச் சொல்லி, சிரிக்கின்றனர்.
போன வாரம் ஒரு குடியிருப்பு வீட்டு தோட்டத்தில் மூலிகை பறிக்கும் போது, அவர்கள் வீட்டுப் பையனை, மனைவிக்காரி முத்தமிடுவதை பார்த்து விட்டேன்.
மீண்டும் மகளிடம் முறையிட்டேன். அவள் என்னை, "பேக்-அப்' செய்து, இன்னொரு மகள் வீட்டுக்கு அனுப்புவதில் குறியாய் இருக்கிறாள். மருமகனோ, பாயசம் செய்து, அனைவருக்கும் வழங்கி, நான் போகப் போவதை கொண்டாடி விட்டான். இதுவரை நான்தான் ஆயிரம் பேருக்கு ஆலோசனை கூறியிருக்கிறேன்; முதன்முறையாக, உன்னிடம் ஆலோசனை கேட்கிறேன். இந்த மனிதர்குல மாணிக்கங்களின் சுயரூபங்களை வெட்ட வெளிச்சமாக்க என்ன செய்யலாம் மகளே?
காத்திருக்கும், மருத்துவப் பாட்டி.


 "காஸ்மோ' சமூகத்தின் உடலுக்கும், மனதுக்கும் வைத்தியம் பார்க்கத் துடியாய் துடிக்கிறீர்கள். உங்கள் வயது, அனுபவம், நோக்கம், கருத்தில் வைத்து, உங்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த திருமணமான தம்பதியின் மீது, வீண் பழி சுமத்துகிறீர்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
திருமண பந்தம் போன தலைமுறை ஆண், பெண்ணுக்கு தெய்வீக பந்தமாய் தெரிந்தது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றனர்; இப்போது, திருமணம் தெருமுனைகளில் கூட நிச்சயிக்கப்படுகிறது. இப்போது, திருமணம் ஒரு ஒப்பந்தம். செயற்கைக்கோள் கலாச்சாரத்தில் சிக்குண்ட ஆடவர் - பெண்டிர், "நீ காலையிலிருந்து இரவு வரை, மேயும் வரை மேய்... நானும் காலையிலிருந்து இரவு வரை மேய்கிறேன். இரவு, இருவரும் சந்திப்போம். மறுநாள் மேய்ச்சலை திட்டமிடுவோம்...' என்ற விதிவிலக்கு கணவன், மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். குறுக்கு வழியில் முன்னேற துடிப்போர், பேராசைக்காரர்கள் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. தான், தன் சுகம் மட்டும்தான் முக்கியம் இவர்களுக்கு.
இந்த தம்பதிகளை தங்களது வீடுகளுக்குள் அனுமதிப்போர், ஒன்றும் தெரியாதவர்கள் அல்லர். அவர்களுக்கு உங்களை விட அறிவு அதிகம். தம்பதிகளை வீட்டுக்குள் விட்டு தங்கள் வேலைகளை, சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். தம்பதியின் நடவடிக்கை எல்லை மீறும் போது, அவர்களை விரட்டி விடுவர் அல்லது எல்லை மீறுவதற்குள் ஒரு கட்டணத்தை வசூலித்துக் கொள்வர்.
எனக்கு சொந்தக்கார பெண்மணி ஒருவர் இருக்கிறார்; பேரழகி. பஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட க்யூ இருக்கும். கவுண்டரில் உள்ள ஆணோ, சொந்தக்கார பெண்மணிக்கு வரிசை மீறி டிக்கெட் தந்து, வளைந்து, நெளிந்து குழைவார். எந்த விஷயத்தையும் கண் சிமிட்டி, சிரித்து மோகிக்கும் அளவுக்கு பேசி சாதிப்பார். கேட்டால், "கற்பா கெட்டுப் போச்சு...' என்பார். ஆண்களின் சபலத்தை, "எக்ஸ்ப்ளாய்ட்' பண்ணி, கோடீஸ்வரி ஆகி விட்டார். உறவும், நட்பும் அவர் காலடியில். அவளின் துர்நடத்தை பற்றி எல்லாரிடமும் சென்று விளக்கம் கூற முடியுமா என்னால்? "ஆண்களே... அவளிடம் ஏமாறாதீர்கள்...' என்று எச்சரிக்க முடியுமா? அவள் வழி அவளுக்கு, என் வழி எனக்கு என்றிருக்கிறேன்; தட்ஸ் ஆல்.
நான் ஒரு கேள்வி கேட்பேன்... தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அம்மா. உங்கள் மருமகனை உங்கள் கடிதத்தில் குணக்கேடன் என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அவர் என்னென்ன தவறுகள் செய்கிறார் என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அவரை திருத்தினால், உங்கள் மகள் சிறப்பான வாழ்க்கை வாழ்வாள். அப்படியிருக்க, நீங்கள் உங்கள் மருமகனை திருத்த முற்படவில்லை அல்லது திருத்த முயற்சித்தும் அவர் திருந்தவில்லை. இந்த நிலையில், நீங்கள் உங்களது தெரு ஆண் - பெண்களை திருத்த நினைப்பது என்ன நியாயம்?
நீங்கள் அனுபவ சித்த வைத்தியர். அதனால், உ<ங்களிடம் நிறைய பேர் வைத்தியம் செய்து கொள்ள வருவதில்லை. அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள், வெற்றிகரமாக பிராக்டிஸ் செய்து வருகின்றனர். மக்களும், மாற்று மருத்துவத்துக்கு மாறி வருகின்றனர்.
ஒரு தொழிற்சாலையின் குடியிருப்பில் இருக்கும் மக்களின் நடவடிக்கைகளை, சமூகத்தின் நடவடிக்கையாக எண்ண முடியாது. ஏராளமான பணத்தைக் கொட்டி வேலை பெறுவோர், அந்த பணத்தை வேறு வேறு வழிகளில் மீட்டெடுக்க முயற்சிப்பர். அவர்களின் காதுகளில் எந்த அறிவுரையும் ஏறாது.
தீயதைக் கண்டால் கையால் தடு; முடியாவிட்டால், வார்த்தைகளால் தடு. அதுவும் முடியாவிட்டால், மனதாலாவது தடு என்கிறது இஸ்லாம். நீங்கள் மனதால் தடுங்கள் போதும். செவிடர்களுக்கு அறிவுரை ஓதாதீர்கள் அம்மா.
உங்கள் வீட்டு அளவுக்கு சித்த வைத்தியம் செய்து, அவர்களை ஆரோக்கியர் ஆக்குங்கள். பட்டு திருந்தட்டும் உங்களின் தொழிற்சாலை குடியிருப்பு மக்கள். உங்கள் சித்த வைத்திய முறைகளை சாவதற்குள் எளிய எழுத்து வடிவாக்கி, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு உதவும்படி செய்யுங்கள்.
ஆன்மிகத்தில் திளைத்து, அடுத்தடுத்து பிறவிகள் இல்லாது, பரம்பொருளுடன் இணையப் பாருங்கள் அம்மா.

No comments:

Post a Comment