Thursday, March 24, 2011

சினிமா... சின்னத்திரை... ஆறு வித்தியாசங்கள்!


இப்போதெல்லாம் குறைந்தபட்ச அரட்டைக்கே நம் மக்களுக்கு "பீர்" தேவைபடுவது மிகவும் வேதனையான விஷயம். நான் குடிக்கறதில்லை ஆனா நல்லா அரட்டை அடிப்பவன். இருந்தாலும் என்னைப் பார்க்க வந்தால் ஒரு டீ நிச்சயம் என்று பேச ஆரம்பிக்கிறார் பாஸ்கர் சக்தி. சமீபத்திய ரிலீஸான நான் மகான் அல்ல படத்தை வசனங்களுக்காகவும் ரசிக்க வைத்த பேனாவுக்குச் சொந்தக்காரர். அவருடைய வசனங்களைப் போலவே பேச்சிலும் யதார்த்தமான நகைச்சுவை தெறிக்கிறது.
[Image: baskar-shakthi-1-aug-26.jpg]
மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள், மேகலா என்று சின்னத் திரையில் ஆரம்பித்து இன்று எம் மகன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என்று வெள்ளித்திரை வரையில் வெற்றிகரமான எழுத்தாளராக விளங்குபவர்.

சன்னமான மழைத் தூறலில் சூடான டீயுடன் ஆரம்பிக்கிறது அவருடனான அரட்டை..

`சட்டக் கல்லூரி மாணவராக இருந்த பாஸ்கர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆனது எப்படி?

நீங்க ஆட்டோபயோகிராபி கேட்குறீங்க. அந்த அளவுக்குநான் இன்னும் வளரலை. என் சொந்த ஊர் தேனிக்குப் பக்கத்தில் இருக்கிற வடபுதுப்பட்டி கிராமம். அப்பாவுக்கு நான் வக்கீல் ஆகி வாய்தா வாங்கணும்னு ஆசை. பி.எல் சேர்ந்ததுமே எனக்கு சட்டம் ஒரு இருட்டறை ஆகிருச்சு. சுத்தமா புரியலை.சுத்தமா பிடிக்கலை. அப்பாவுக்காக பல்லை கடிச்சு படிச்சேன். படிக்கும்போதே பத்திரிக்கைத்துறை மேலே ஆர்வம் வந்திருச்சு. .அப்போ என் நண்பன் விகடனுக்காக `ட்ராவலாக்` மாதிரி தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களுக்கு பயணம் செய்து அந்த அனுபவங்களை எழுதித் தந்தான். என்கிட்ட கேமிரா இருந்ததால என்னையும்கூட அழைச்சுட்டு போனான். ஒரு சந்தர்ப்பத்தில் நானே பயணக் கட்டுரை எழுதி அனுப்பினேன். நான் எழுதியது விகடனுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. ரெகுலரா கதை, கட்டுரைகள் எழுதி அனுப்பச் சொன்னாங்க. பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பிச்சதால படிப்பு தொங்க ஆரம்பிச்சிருச்சு. ரெண்டு கை நிறைய அரியர்ஸ் சேர்ந்திருச்சு. இன்னொரு பக்கம் சுசீந்திரன், திருமுருகன்னு என்னோட மீடியா நண்பர்கள் வட்டம் பெருகிட்டே போச்சு. சரி வர்றதைப் பண்ணுவோம்ன்னு முடிவு பண்ணினேன். திருமுருகனோட `மெட்டி ஒலி` சீரியலுக்கு எழுத ஆரம்பிச்சேன். அப்படியே எழுத்து தலையெழுத்தா மாறிடுச்சு!

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவா இருக்காங்க. தமிழ் சினிமா எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறதில்லையா?

சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன்னு சினிமாவில் ஒரு சில எழுத்தாளர்கள்தான் தாக்குப் பிடிச்சு நின்னுருக்காங்க. ஆனால் அதிக அளவில் வரமுடியாமல் போனதற்குக் காரணம் இயக்குநர்கள். நான் குறையா சொல்லலை. யதார்த்தத்தை சொல்றேன். இப்போ படம் பண்ற புது இயக்குநர்கள் ஒரு கதையை ரெண்டு வருஷமா மனசில் ஊறப்போட்டு ரெடி பண்றாங்க. அதனால அந்தக் கதை பக்காவா டயலாக்கோடு ரெடி ஆகியிருக்கும். அதனால அவங்க கதைக்குத் தனியா எழுத்தாளன்தேவைபடுவதில்லை. என்னைக் கேட்டா இயக்குநர் நல்ல கிரியேட்டராமாறும்போது எழுத்தாளனுக்கு அங்கே வேலையே இருக்காது. வேணும்னா எழுத்தாளர்களை மொபைலில் வர்ற எக்ஸ்ட்ரா சர்வீஸ் மாதிரி தேவைக்கேற்ப பயன்படுத்திக்கலாம். ஆங்கிலத்தில் நாவல்களை தழுவி நிறையப் படம் எடுப்பாங்க. அந்தச் சூழல் தமிழில் இப்போதான் வர ஆரம்பிச்சிருக்கு. இனிமே எழுத்தாளர்களுக்குத் தேவை வரலாம்!

சின்னத் திரை வசனங்கள்... சினிமா வசனங்கள்... ஆறு வித்தியாசம் சொல்ல முடியுமா?

ஆறு இல்லை.. அறுபது வித்தியாசம் சொல்லலாம். சீரியலில் நீங்க நிறைய சுதந்திரம் எடுத்துக்கலாம். அவசரம் கிடையாது. சினிமாவில் எல்லாமே இன்ஸ்டன்ட் காஃபி மாதிரிதான். சூடா கொடுக்கணும். சுவையா இருக்கணும். கொஞ்சம் சொதப்பினாலும் டயலாக் போர் அடிச்சிரும். நம்மளோட இந்த சந்திப்பை சீரியலில் அழகா மூணு சீனில் விவரிக்கலாம். சினிமாவில் இது ஒரு ஷாட் மட்டும்தான். அதுக்கு மேலே இடம் கிடையாது.

உங்க எழுத்துக்களில் கிராமங்களை மட்டுமே பதிவு பண்றீங்க.. நகர வாழ்க்கையைப் பதிவு பண்ண விருப்பம் இல்லையா?

விருப்பம் இல்லைன்னு சொல்லக் கூடாது. அனுபவம் இல்லைன்னு சொல்லலாம். நான் பார்த்த, படிச்ச, அனுபவிச்ச விஷயங்களைத்தான் எழுதிட்டு இருக்கேன். அதைத்தான் எழுதவும் முடியும். நான் கிராமத்தில் பிறந்து, வளர்ந்ததால கிராமத்தில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ல முடியுது. சென்னை வந்தது பிறகு `அவள் விகடனில்` சென்னை வாழ்க்கையை மையமா வைச்சு ஒரு நாவல் எழுதினேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. பொதுவா எனக்கு ஹுயூமர் சென்ஸ் கொஞ்சம் உண்டு. எந்த விஷயத்தையுமே மென்மையா எடுத்துக்கொள்வேன். என் கதைகள் அதையேதான் பிரதிபலிக்குது. நகரத்தைப் பத்தி சொன்னாலும்இந்த ஹியூமரும், மென்மையும் என்னை விட்டுப் போகாது..!

மக்கள் மத்தியில் வாசிப்பு அனுபவம் குறைஞ்சுகிட்டே போகுதே..இது எங்கே போய் முடியும்?

இந்த நிலைமைக்கு நம்ம கல்வி முறையும், பெற்றோர்களும்தான் காரணம்னு சொல்வேன். ஆங்கிலம் மேல இருக்கற கவர்ச்சியால தாய்மொழி தமிழை சுத்தமா புறக்கணிச்சிட்டோம். இப்போ இருக்கற வாழ்க்கை முறையில் கல்விங்கிறது பிஸினஸ்க்கான முதலீடு மாதிரி ஆகிருச்சு. அதை பணம் சம்பாதிக்கும் கருவியாகத்தான் பார்க்குறாங்க. நாங்க படிக்கும் காலத்தில் போராடிச்சா லைப்ரரி போவோம். ஆனா இப்போ ஆர்குட், ஃபேஸ்புக்ல சாட் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. இல்லைன்னா பார், பப்ன்னு கிளம்பிடுறாங்க. இப்படி பசங்க வளர்றதுக்கு பெற்றோர்கள்தான் முக்கியமானகாரணம். அவங்கதான் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லணும். நல்ல புத்தகங்களை தேடி எடுத்துக் கொடுத்து, வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தணும். வாசிப்பு அனுபவம்தான் ஒருத்தனை நல்ல மனிதனா, கலைஞனா செதுக்கும்!

No comments:

Post a Comment