Thursday, March 24, 2011

அழுவதும் நல்லதே!


ஆஸ்திரேலிய ஓபனில் கடந்த ஆண்டு தோற்ற டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், கண்ணீர் விட்டு அழுதார். அதே மாதிரி இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வென்ற ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் இகர் காசிலாஸும் மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினார். இவர்கள் பலவீனமானவர்களா? ஆண்கள் அழுவது அழகில்லையா?
பொதுவாகவே ஆண்கள் அழுவது பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன யுக ஆண்கள் கண்ணீர் சிந்தக் கவலைப்படுவதில்லை.
இதுபற்றி மனோவியலாளர் தீப்தி கூறுகையில், ``அழுவது உண்மையில் உங்களை வலு வான நபராக ஆக்குகிறது. அது, மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை விடுவிக்கிறது. ஆனால் நமது சமூகத்தில் ஆண்கள் பாரம்பரியமாகவே கண்ணீர் சிந்தக் கூடாது என்று கூறித்தான் வளர்க்கப்பட்டுள்ளனர்'' என்கிறார்.
மென்பொருள் பொறியாளரான ராகேஷ், சமீபத்தில் தான் விவாகரத்துப் பெற்றார். அவர், ``பொது இடங்களில் நான் அழுவ தில்லை. காரணம், ஒரு விஷயம் குறித்து நான் வருநதுவதை மக்கள் அறிவதை நான் விரும்புவதில்லை. ஆனால் நான் தனி யாக இருக்கும்போது என்னால் அழுகை யைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அது தான் என்னைத் தெளிவாகச் சிந்திக்க வைக்கிறது'' என்கிறார்.

அழும் ஆண்கள் பெரும்பாலும் பெண் களைக் கவருவதில்லை. ஆனால் `அழுவது மோசம் என்பதை விட, ஆக்கபூர்வமான விஷயமே' என்கிறார் தீப்தி. அழுகையை அடக்குவது, அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது தீப்தியின் கருத்து.
``அழுகையானது உங்கள் இதயத்திலிருந்து அழுத்தத்தை விடுவிக்கிறது. நீங்கள் ஒன்றில் தடாலடியாக இறங்கும்முன் உங்களைச் சிந்திக்க வைக்கிறது'' என்று கூறுகிறார் இவர்.
ஓர் அலுவலகத்தில் சார்ட்டட் அக்கவுன்டன்டாக பணிபுரிபவர், சுரேஷ். ஒருமுறை அவர் சிறப்பாக செயல்பட்டதற்காக அலுவலகத்தில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட, வாய் விட்டு அழுதுவிட்டார்.
``அந்த நேரத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. எதிர்பாராமல் கிடைத்த அந்த மரியாதை என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. அப்போது எனது உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தியது எனக்குத் தவறாகத் தெரியவில்லை'' என்று உறுதிபடப் பேசுகிறார்.
சரியான விஷயத்துக்காக பொது இடத்தில் கண்ணீர் சிந்துவது ஏற்கத்தக்கதே. ஆனால் அழுகைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது, பிறரது கவனத்தை ஈர்ப்பது. பலருக்கு காரியம் சாதித்துக்கொள்வதற்கு எளிய வழியாக கண்ணீர் சிந்துவது இருக்கிறது. ஆனால் அதை நல்ல பழக்கம் என்று கூற முடியாது.
நிரஞ்சனின் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் இவர் தனது நண்பர்களுடன் ஒரு வனப் பகுதிக்குச் சுற்றுலா சென்றார். அப்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கூடாரம் அமைத்துத் தங்க ஏற்பாடானது. ஆனால், `என்னால் தனியாகத் தங்க முடியாது. எனக்கு பேய், தனிமையான இடம் என்றால் பயம், என அழவே ஆரம்பித்துவிட்டார். அதை இன்றும் சொல்லிக் கிண்டல் செய்கிறார்களாம்' அவரது நண்பர்கள். அழுகையில் இம்மாதிரியான `பக்க விளைவுகளும்' இருக்கின்றன!

No comments:

Post a Comment