Sunday, March 27, 2011

ஜெ., சொல்வதை நம்ப மாட்டார்கள்: கருணாநிதி


சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன் என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர்கள் நம்பமாட்டார்கள்,'' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: "அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதை உயர்த்தி வழங்
குவேன்' என, ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு முன், இரண்டு முறை முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்களுக்கு அவர் ஏன் இட ஒதுக்கீடு வழங்கவில்லை? "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அவர்களுக்கு சமமாக இருக்கும் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பர். பிறகு, மற்ற சிறுபான்மையினரும் கேட்பர். இது இயலாத காரியம்' என்றும் ஜெயலலிதா கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல், வேறு எங்கு கட்டுவது என்றும் கேள்வி கேட்ட ஜெயலலிதா, பெரும்பான்மையினர் அவர்களுடைய உரிமையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இதை, முஸ்லிம் சகோதரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். இப்போது, "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உயர்த்தி வழங்குவேன்' என கூறுவதை, அவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால், தி.மு.க., அரசு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒக்கீட்டை அளித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்போம் என, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இதிலிருந்து, இஸ்லாமியருக்கு ஆதரவாக இருப்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment