Thursday, March 3, 2011

காலத்தின் வாசனை



"டேய்...மாப்ள..."

குரல் கேட்டு அதிர்ந்து திரும்பினேன். கையில் கிளாசுடனும், முனை கிள்ள தயாராய் இருந்த தண்ணி பாக்கெட்டுடனும், கண்களில் தளும்பிய நீருடனும், சொல்லொண்ணா புன்னகையுடனும் நின்று கொண்டிருந்தான் அவன். மனசிற்கு பிடித்த எவ்வளோவோ இடங்களில் இந்த திருப்பதி ஓய்ன்சும் ஒன்று. தற்சமயம், டாஸ்மாக் கடைகள் என்று மாறி இருந்தாலும், பார்களை எல்லாம் பழைய அடையாளங்களுடன்தான் அழைக்க நேரிடுகிறது உள்ளூர் மனசுகளுக்கு!பிடிக்கிற இடங்களுக்கும், மனிதர்களுக்கும் காரணம் சொல்ல இயலாது. எது நகர்த்தி நம்மை, மனிதர்களிடமும், இடங்களிடமும் பொருத்துகிறது என அறுதியிட முடிவதில்லைதான்.

அப்படியான ஒரு இடத்தில் இருந்து, பழைய வாசனை வீசும் ஒரு குரலும், முகமும், புன்னகையும்!...உள்ளிருந்த சாராயமா, வழக்கம் போலான என் ஞாபக குறைவா தெரியவில்லை. பார்த்தது போல் இருக்கிறது. ஆளை பிடிபடவில்லை. தயாரற்ற ஒரு நிலையில், அவன் தந்தது மாதிரியான ஒரு சிரிப்பை தர இயலாவிட்டாலும் சிரித்து,

"ஹலோ" என்றேன்... வேறு தோணாது.

"ஹலோவா.. வக்காளி மறந்திட்டில்ல" என்றான் என் நெஞ்சை தள்ளி.

தூக்கிவாரிபோட்டது. சற்று கூசினாலும், கயிறு வீசி சர சரவென மனசில் இறங்குகிற மனிதர்களை என்ன செய்துவிட முடியும், தவிப்போடும், இனி காட்ட இயலாத சூழலோடும், நானும்,

"டேய்...மாப்ள... அடையாளமே தெரியலைடா" என்று மார்போடு அணைத்து தோராயமாய் வலைக்குள் நுழைந்தேன். "வக்காளி...மறந்துட்டியோன்னு பயந்துட்டேன் மாப்ள..அப்பா இறந்ததுக்கு வந்திருந்தேண்டா. கல்யாணியும் வந்திருந்தாள். நீ சவுதியில் இருந்து கிளம்பிட்ட, இந்தா வர்ற, அந்தா வர்றன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. புள்ளைகள் ஸ்கூல்ல இருந்து வந்துருங்கன்னு சொல்லுச்சு. சரி அப்ப நீ கிளம்புன்னு பஸ் ஏத்தி அனுப்பிவிட்டேன். நல்ல கூட்டம் மாப்ள. காடு வரைக்கும் கூட்டத்தோடு வந்துட்டு, உன் கையை கூட பிடிக்க முடியாமல் போயிட்டேன். ரொம்ப பிடிச்சவுங்க இறப்புக்கு வர்ற மாதிரி கொடுமையான விஷயம் இல்லைடா மாப்ள"
கடவுளே!..என்றிருந்தாலும் காட்டிகொள்ளாமல்.."எத்தனை குழந்தைகள்டா மாப்ள?" என்றேன்.

"ரெண்டு பொம்பளை பிள்ளைகள்டா. மாமனார் பலசரக்கு கடையில்தான் நிக்கிறேன். மரியாதை குறைவுதான். வேறு போக்கிடம் இல்லை மாப்ள".

இவன் முகத்திலேயே குரலையும் வைத்திருந்தான். குரலுக்கேற்ப முகம் மாறுவது அவ்வளவு அழகாய் இருந்தது.

"பரமக்குடி வந்த வண்டியில, அப்பா காண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் பார்த்தேன். இந்தா, இந்த திருப்பதி ஓயின்சுலதான் அப்பாவை கடைசியாக பார்த்தது. ஏழெட்டு வருஷம் இருக்கும், ஆனாலும், முகம் மறக்கலை. டீ குடிச்சுட்டு வர்றேன்னு மாமனார்ட்ட சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து, புறப்புடு புள்ளைன்னு கல்யாணியையும் கூட்டிட்டு வந்தேன். சரி அதைவிடுசவுதி வாழ்க்கைல்லாம் எப்படிடா போகுது?”

"ம்...போகுது மாப்ள..."

ஏதோ தீர்மாணித்தவன் போல,"மாப்ள...எதுல வந்த?"என்று கேட்டான்.

"TVS-50 இருக்குடா"

"சரி அப்ப கட்டிங்கோட நிறுத்து. காலேஜ் கிரவுண்டு போய் மீதியை பேசுவோம். இரு, இந்த வாடகை சைக்கிளை விட்டுட்டு வந்திர்றேன்." என்று என்னை யோசிக்க விடாது போனான்.

எதிர்பாரா பொந்திற்குள் இருந்து, இவன் புறப்பட்டு வந்ததுபோல், அப்பா இறப்பிற்கு பிறகு, இழுத்து செல்லும் எந்த நதிக்குள்ளும் முகம் மேலே மலர்த்தியபடி நீரோட்டத்தோடு போய் கொண்டிருக்க எனக்கும் பிடித்திருந்தது. கல்லூரி மைதானம் வரையில் என்னென்னவோ பேசிக்கொண்டு வந்தான்.மைதானம் வந்ததும்,

"அந்த உதிய மரத்துல வண்டியை நிறுத்து" என்றான்.

விரும்பியோ,விரும்பாமலோ பிடித்த முதலாளி ஆகி இருந்தான் எனக்கு. வெயில் வேறு. தீபாவளி மதியத்தில் அருகில் தூங்குகிற மனைவி போல் இணக்கமாக இருந்தது. எவ்வளவு காலமாச்சு! இந்த மைதானத்தில் என் கால் படாத இடமே இல்லை என நான் யோசித்து கொண்டிருக்கும் போதே,

"பார்த்தியா, என்ன வாசைனைன்னு.... இந்த உதிய மர வாசனைக்காகவே, மாசம் ஒரு தடவையாவது இங்கு வந்துருவேன். பஸ் ஸ்டாண்டுல இறங்கி, வேலவன்னுல சைக்கிள் எடுத்து, திருப்பதி ஓயின்சுல ஒரு கட்டிங்கை போட்டுட்டு நேர இந்த உதிய மரம்தான்"

பேச்சு பேச்சாக இருந்தாலும், கை, மீதி குவளையை திறக்கவும், நீரை சரிக்கவும், ஊறுகாய், முறுக்கு பொட்டலங்களை பிரிக்கவுமாக இருந்தது.

"மீதி கட்டிங்கை இங்க போட்டேன்னா...பூரணமாயுரும்...இங்கதான் நீ ஓடிட்டு இருப்ப...அப்பா வாடகை சைக்கிளில் ஸ்டாண்டு போட்டு கேரியரில் உக்கார்ந்து இருப்பார்...உன் அப்பாதான்னு ரொம்ப நாள் வரையில் தெரியாதுடா. சுந்தர்தான் சொன்னான், ராஜா அப்பாடா அது, அவன் ப்ராக்டிஸ் செய்றதை பார்த்துக்கிட்டிருப்பார்ன்னு. வாடகை சைக்கிளில் உக்கார்ந்திருப்பவர்தானேன்னு, நானாதான் பேச்சு கொடுத்தேன். ராஜா கிளாஸ்மேட் தான் நானுமுன்னு...கை எடுத்து கும்பிட்டார்....ஆடி போயிட்டேன் அப்படியே. ஏழரை மணிக்குத்தான் பஸ்ஸு. அது வரையில் இப்படி உட்கார்ந்திருப்பேன் என்று தொடங்குச்சு. தினம் வருவாரு..தினம் பேசுவாரு... எனக்கும் அவருக்கும் பேச என்ன இருக்குண்ணே தோணாது. எனக்கும் ஏழரை வரையில் நேரம் போகணும்,அவருக்கும் உன்னை பார்த்துகிட்டே பேச ஒரு துணை மாதிரி இருக்கும்".

எனக்கு அரவம் தட்ட தொடங்கியது. கடைசி பெஞ்சில் சுந்தர் அருகில் உட்காந்திருப்பான். மனசின் ஆழத்தில் கிடந்த இவன் பெயரை மேலெழுப்பி கொண்டு வருவதில் தோற்று கொண்டே இருந்தேன்.

"நீ, sn, ஸ்ரீகண்டன் எல்லாம் ஒரு செட்டு. என்னோடல்லாம் அவ்வளவா பேச மாட்டீங்க. சுந்தர் மட்டும் உங்க செட்லயும் இருப்பான், என் செட்லயும் இருப்பான். என்ன அருமையான காலங்கள்டா மாப்ள. எவ்வளவு சந்தோசம். அம்மா சேலை வாசனை மாதிரி, இந்த உதிய மரத்து வாசனையும் மனசோடையே தங்கிப்போச்சு. தாயளி...சுந்தர் செத்ததை கூட யாரும் சொல்லலைய்டா நம்ம முத்து கிருஷ்ணன், இப்ப ரபீக் ராஜா லாரில டிரைவரா ஓட்றான்....பரமகுடியில எதார்த்தமா பார்த்தேன்....பத்து பதினஞ்சு நாள் ஆச்சு மாப்ளன்னான்....வீட்டுக்கு போய், கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு.....சுந்தர் கிளாஸ்மேட்... இப்பதான் தெரியுமுன்னு சொல்லிட்டு வந்தேன்."

காலத்தை தூக்கி மடியில் வைத்து கொண்டு படம், படமாக விரித்து காட்டி கொண்டிருந்தான். பரமக்குடியான் என்று இவனை கூப்பிடுவது வரையில் என் ஞாபகம் வலுபெற்று இருந்தது. இப்படியே இவன் போய் கொண்டிருந்தால் போதும். இந்த முக்கு போய் அந்த முக்கு திரும்புவதற்குள் இவன் பெயரை மீட்டெடுத்துவிட முடியும். உள்ளிருந்த சாராயம் பூ மாதிரி இளக்கிக்கொண்டிருந்தது ரெண்டு பேரையும்.

"மாப்ள...இரு...சரக்கு பத்தலை...வாங்கிட்டு வந்துரட்டுமா?" என்று கேட்டேன். "நானும் வரவாடா...?" என்றான் உதிய மரத்தை விட்டு வர மனசில்லாமல்.

"இல்லை மாப்ள இரு...ரெண்டு நிமிஷம்..." என்றபடி வண்டியை கிளப்பினேன். திரும்பி வருவதற்குள் இவன் பெயரை பிடித்து விட எனக்கும் தனிமை தேவையாக இருந்தது.

விரட்டிப்போகிற வண்ணத்து பூச்சி, விரல்களில் வண்ணத்தை ஈஷி, பூ பூவாய் நகர்ந்து கொண்டிருப்பது போல் இவனின் பெயரும் தட்டுப்பட்டு தட்டுப்பட்டு விட்டுப்போயிற்று. பேர் அவஸ்தையோடு திரும்பி வந்தேன். உதிய மரத்து வேரில் சாய்ந்தபடி, நெளிந்த சிரிப்பொன்றை தூரத்திலேயே வீசினான்.

"என்னடா பூரணமாயிட்ட போல" என்று சிரித்து அருகிலேயே உட்கார்ந்தேன்.

"போடு மாப்ள...எப்பவும் ஒரு குவாட்ட்டார்தான் நமக்கு கணக்கு...அதுவும் இங்கு வரும் போது மட்டும்தான்" என்றான்.

"அப்பாவை கடைசியில் திருப்பதி ஒயின்ஸில் பார்த்ததாக சொன்னியேடா" என்றேன், இவனை மேலும் நகர்த்த.

”ஆமாடா மாப்ள...ஏழெட்டு வருஷம் இருக்கும்...அப்பா மாதிரி ஆட்களை பார்ல பாக்கறதுக்கு கூச்சம். ஒளியவும் மனசில்லை, தண்ணிய வாங்கிட்டு அவர் எதிரிலேயே உட்கார்ந்தேன்." இங்கு அவன் எதிரில் இருந்த குவளையவும் முழுக்க ஒட்டுமொத்தமாக சரித்தான்...வார்த்தைகள் குழறி குழறி வர தொடங்கியது.

"எதில விட்டேன்?"

"அப்பா எதிரிலேயே உட்கார்ந்தாய்?"

"என்னை அடையாளம் தெரியலை அவருக்கு. அப்பான்னு கூப்பிட கூச்சம். ஐயா பாதி அடிக்கிறீங்கலான்னு கேட்டேன். அப்பா அப்படியேதான் இருந்தார். அதே கும்பிடு, வேணாம்ப்பு...சாப்பிடுங்கன்னாரு...ஒரு ரவுண்டு போனாதான் தைரியம் வந்துரும்ல்ல நமக்கு. அப்பா...நினைவிருக்கா என்னைன்னு கேட்டேன். இல்லேயப்பூ...வயசாயிருச்சுல்லன்னாரு. இன்னாருன்னு சொல்லி, உதிய மரத்தை சொன்னதும். நல்லா ஞாபகம் இருக்கு மாப்ள...ஆத்தீ..ஆத்தீ...ன்னு கையை பிடிச்சுகிட்டாரு. அப்ப நீ அவர் முகத்தை பார்த்திருக்கணும்டா. வேற எதுவுமே சொல்லலே திருப்பி திருப்பி அந்த ஆத்தீ ஆத்தீ தான். எனக்கு கண்ணுல்லாம் நெறஞ்சு போச்சு".

எனக்கும் கண்கள் நிறைந்து. அவன் அறியாமல் துடைத்து கொண்டேன். அசங்கினால் சம்பவம் உடை படுமோ என பயமாக இருந்தது.

"பேரனைப்போய் ஸ்கூல்ல பார்த்துட்டு வரும்போது அப்படியே கொஞ்சம் சாப்புட்டு போகலாமுன்னு வந்தேன்னாரு. பய சவுதியில இருக்கான் தெரியும்லப்பான்னு கேட்டாரு. தெரியும்பா..கேள்விபட்டேன்னு சொன்னேன். எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கீங்கண்ணு கேட்டேன். இல்லைப்பா, நானும் அம்மாவும், ஊருல கிராமத்துல இருக்கோம், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பக்கமுன்னு தம்பி டவுனுக்கு வந்துட்டான்...எங்க போய்ட்டான்...ரெண்டு கிலோ மீட்டர்...இந்தா ரெண்டு மிதியில வந்து பேரனை பார்த்துட்டேன். இந்த பய தான் காசுக்காக அம்புட்டு தூரத்துல கிடக்கான். பொம்பளை புள்ளையை வச்சுருக்கான், கரையேத்தட்டும், அப்புறம் எல்லாம் சரியா வந்துரும்ப்பான்னு பேசிக்கிட்டே வாடகை சைக்கிளை எடுத்தாரு...மாப்ள... அதே வசந்தி வாடகை சைக்கிள்.”

“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா..." என்று சற்றும் எதிர் பாராமல் வழியும் கண்ணீரை துடைத்த படியே....மூசு....மூசென்று மூச்சுவிட்டான்.

"மூணு வருசமா பரமகுடியான், பரமகுடியான்னு கூப்பிட்டு, கூப்பிட்டே....மூணு வருஷமும் என் பேரே எனக்கு மறந்து போச்சு...நீங்கல்லாம் என்னங்கடா மனுஷங்க... அப்பா, சுந்தர், கேன்டீன் ஜலாலுதீன் பாய் இந்த மூணு பேரும்தான் மனசு நெறஞ்சு பேர் சொல்லி கூப்பிடறது, போங்கடா நீங்களும் உங்க பரமக்குடியானும்.”

வார்த்தை தடித்திருந்தாலும் பிடித்திருந்தது. எழுந்து தடுமாறி. மண்ணை தட்டி நடக்க தொடங்கினான். நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணி "டேய்...வண்டியில ஏறுடா போகலாம்" என்றதுக்கு.

"போ...போ...போய்கிட்டே இரு..." நிமிடத்தில் காட்சி மாறிப்போனது. அழுகையும் பீரிடலுமாக கெஞ்ச கெஞ்ச, கேட்காமல் மெயின் ரோடு வந்து விட்டான். எனக்கு வண்டியை உருட்ட மூச்சு வாங்கியது.

"டேய்...வண்டியில ஏறு மாப்ள, பஸ் ஏத்தி விடுறேன்..."


"போ...மாப்ள...போ...போய்கிட்டே இரு..." என்று சொல்லி கொண்டே சற்றும் எதிர்பாராமல். ரெண்டு கைகளையும் விரித்து. எதிரில் வந்த பேருந்தை மறித்து, நின்ற பேருந்தில் ஏறியும் விட்டான்.

செய்ய ஏதுமின்றி,ஓட்டுனரை, "மன்னியுங்கள்" என்பதாக கை கூப்பினேன். அவரும் அப்பா மாதிரியான மனிதராக இருக்க வேணும். "பரவாயில்லை....நான் பார்த்துக்கிறேன்" என்று சைகையில் சிரித்தார். வண்டியை ஓரமாக சரித்து, ஓட்டுனர் ஜன்னலோரமாக வந்து, "பரமக்குடி வண்டியில் அவனை ஏற்றி விட வேணும்"என்று கேட்டு கொண்டேன்.

"தெரியும்..சண்முக அண்ணாச்சி மருமகன்தானே" என்று சிரித்தார்.

குனிந்து ஜன்னல் வழியாக இவனை தேடியபோது, கையை மேலே தூக்கி, "போ...போ..போய் கிட்டே இரு..." என்றான் உக்கிரம் மாறாமல்.

வீடு வந்து என் தடுமாற்றம் உணர்ந்த மகன், வண்டியை வாங்கி ஸ்டாண்டு போட்டு தந்தான். "வரும்போதே....தள்ளாடித்தான் வர்றது...சவுதியில் கிடைக்கலைங்கிறதுக்காக இப்படியா....வீடே தண்ணி நாத்தம்....போய் குளிச்சுட்டு வாங்க" என்று கதவு திறந்து தந்தாள் மனைவி.

குளிப்பதற்கு முன்பாக என் பீரோ திறந்து, துணிகளுக்கு அடியில் நியூஸ் பேப்பர் சுற்றியிருந்த அந்த புகை படம் எடுத்தேன். முகம் முகமாக இவனை தேடினேன்...இருந்தான்...அதே விரிந்த புன்னகையுடன்! மன்னர் துரைசிங்கம் நினைவு கலை கல்லூரி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவர்கள் இடமிருந்து வலமாக.....பெயர் பெயராக வாசித்து வந்ததில்...

"p. நடராஜன்!"

"டேய்.... மாப்ள...நடராஜா..."

என்று நான் பெயரை கூப்பிடுவதற்க்கும்...வெளிச்சத்திற்காக மகள் வந்து ஜன்னலை திறப்பதற்கும் சரியாக இருந்தது. மழை நின்ற பிறகு மரக்கிளைகளை உலுக்கி நனைவது போல் உதியமரத்து வாசனை சரம் சரமாக இறங்க தொடங்கியது!

No comments:

Post a Comment