Wednesday, December 7, 2011

சீரழித்தவர் சிக்கிக்கொண்டதிலுள்ள மர்மம்

05.05.2003. அன்று தமிழகத்தின் பிரபலத் தயாரிப்பாளரும், இயக்குநர் மணி ரத்னத்தின் சகோதரருமான ஜி.வி என்று அழைக்கப் படும் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்திருந்த ஜி.வியா இப்படித் தற்கொலை செய்து கொண்டார் என்பதைக் கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சி அடைந்தது. அன்று ஜிவி தற்கொலை செய்து கொண்ட போதுதான், தமிழ்நாட்டில் பரவலாக அன்று இருந்த கந்து வட்டி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜி.வி குடும்பத்தைப் போல பல குடும்பங்களை சீரழித்துள்ள அன்பு என்ற அன்புச் செழியன் தற்போது மதுரை காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.








அதையொட்டி அப்போதைய ஜெயலலிதா அரசு கந்து வட்டித் தடைச் சட்டத்தை கொண்டு வந்து, கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்த பலரை உள்ளே தள்ளியது. இதனால் இந்த கந்து வட்டி விவகாரம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தாலும், சினிமாவுக்கு பைனான்ஸ் செய்து வந்தவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள்.

இதில் முதன்மையானவர் அன்பு என்று அழைக்கப் படும் அன்புச் செழியன். இவர் 2001 காலகட்டத்தில் தன்னை சசிகலாவின் பினாமி என்று அழைத்துக் கொள்வார். 2001-2006 ஆட்சி காலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பல்வேறு நபர்கள் கைது செய்யப் பட்டாலும், ஜி.வி.தற்கொலைக்கு காரணமான இந்த அன்புச் செழியன் கடைசி வரை கைது செய்யப் படவேயில்லை. அதற்கு காரணம் சசிகலாவின் ஆசி என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட அன்பு உண்மையைச் சொல்கிறாரா பொய் சொல்கிறாரா என்பது கடைசி வரையில் தெரியவில்லை.


அன்புச் செழியன்



இந்நிலையில் தற்போது அன்பு கைது செய்யப் பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள துரிசங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவர், யுவஸ்ரீ கிரியேஷன்ஸ், யுவஸ்ரீ பிக்சர்ஸ் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் சார்பில், 2004ம் வருடம் மீசை மாதவன் என்ற படத்தைத் தயாரித்தார். அப்போது, தயாரிப்புச் செலவுக்காக ரூ.20 லட்சத்தை 2 தவணைகளில் மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்ஷியர் அன்புச் செழியனிடம் வாங்கினர். இதற்கு ஈடாக, ரூ. 1 கோடி மதிப்புள்ள 7 பத்திரங்களை அடமானம் கொடுத்தார். இந்தப் பத்திரங்கள் இவரது மனைவி மற்றும் அம்மாவின் பெயர்களில் உள்ளவை. மேலும், 5 வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். செக், லெட்டர் பேட் முதலியவற்றையும் கொடுத்துள்ளார்.



இந்தக் கடனுக்காக நூற்றுக்கு ஐந்து வட்டி வீதம் மாதந்தோறும் கட்டி வந்துள்ளார். இதுவரை ரூ.1 கோடி வரை கட்டியுள்ளாராம். இருப்பினும், அவர் ஆவணத்தைக் கேட்டபோது, அன்புச் செழியன் கொடுக்கவில்லை. மேலும், காசோலை பணமின்றித் திரும்பினால் உன் மீது வழக்கு போடுவேன் என்று அன்புச் செழியன் மிரட்டினாராம்.



இந்நிலையில், அவர் அடமானம் வைத்த வீட்டு மனையை, மிரட்டி கையெழுத்து பெற்று அன்புச் செழியனின் பினாமி ராமகிருஷ்ணன் என்பவர் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார்.


தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் மதுரை புறநகர் குற்றப்பிரிவு போலீஸார் சினிமா பைனான்ஷியர் அன்புவை நள்ளிரவு கைது செய்து அதிகாலை 2 மணி அளவில் சிறையில் அடைத்தனர். இவர் மீது கந்துவட்டி, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த அன்புச் செழியனை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்த போது தான் மேலிடத்துக்கு நெருக்கம் என்று அடாவடியாக பேசியுள்ளார். இந்த அன்புச் செழியன் யார் என்பதை முழுமையா தெரிந்து கொள்ள, குமுதம் ரிப்போர்டரில் ஏற்கனவே வந்த, சொல்வதெல்லாம் உண்மை என்ற தொடரின் ஐந்தாவது பகுதியில் வந்தவற்றை படியுங்கள்.



தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவர் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். இவர் தற்கொலைச் சம்பவத்தில் புகழ்பெற்ற தாதா. ‘‘நண்பர்கள்னா உயிரக் கொடுப்பேன். எதிரின்னா தலையை எடுப்பேன்’’ என்பதுதான் இவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம். திரைப்படத் துறையில் இவரிடம் ஃபைனான்ஸ் வாங்காதவர்களுமில்லை, பாதிக்கப்படாதவர்களும் இல்லை. இன்று பயந்து நடுங்கியபடி கைதுக்கு அஞ்சி மருத்துவமனையில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக... 

‘‘சொந்தத் தம்பிய சிறையில போட்டுட்டாங்க. நானும் உடம்பு சரியில்லன்னு கணக்குக் காட்டி இப்போ அப்போன்னு ஒரு மருத்துவமனையில அட்மிட்டாகிக் கிடக்கிறேன். அந்த மருத்துவமனையின் முக்கிய புள்ளிக்கு எங்க ஊர் மருதயில ஒரு தியேட்டர் இருக்கு. அந்த தியேட்டருக்கும் நான் ஃபைனான்ஸ் செய்திருக்கேன். அந்த நன் றிக்காக என்னை இந்த இக்கட்டான நிலையில மருத்துவமனைல வச்சு காப்பாத்திக்கிட்டிருக்கார் அவர்.

ஆனா எனக்கு இப்படி ஒரு நிலை வரும்னு நான் நினைக்கவேயில்ல. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்பு மருதயில சாதாரண தண்டல் தொழில் நடத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் வட்டி, கந்து வட்டின்னு வளர்ந்தேன். கொஞ்ச நாள்ல லோக்கல்ல என் பேரு ஃபேமஸாயிடுச்சு. அந்த நேரத்துல ஓடி ஒளிஞ்சிக்கிட்டிருந்த வளர்ப்பு மகன் ஒரு வருடன் தொடர்பு கிடைக்க அவரோட காசும் என்கிட்ட கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுடுச்சு. பணத்த எடுத்துக்குனு சென்னைக்கு ரயிலேறினேன். அவ்வளவுதான், பெரிய தொழிலதிபராயிட்டேன். சென்னைக்கு சினிமா படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் பணம் கொட்டத் தொடங்கிடுச்சு. அப்போ கார்டனுக்கு நெருக்கமானவங்க ஒருத்தர் பேரச்சொல்லி அவங்க பினாமி நான்னு சொல்லிவச்சேன். யாரும் எதிர்த்துப் பேச பயந்தாங்க. 

நான் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே எங்க ஊர்ல இருக்கிற என் வீட்ல இன்கம்டேக்ஸ் ரெய்டு நடந்தது. உடனே ஸ்பாட்டுக்கு பறந்து போயி, வந்த அதிகாரிகளை அடிச்சு ஓடவிட்டேன். அதிலிருந்து என் பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சது. அடுத்து கமல், ரஜினி, விஜய்னு பெரிய பெரிய ஹீரோக்களை வச்சு படமெடுத்த தயாரிப்பாளர்ஜிக்கு ஒரு படத்துக்காக ஃபைனான்ஸ் பண்ணினேன். அவரால எங்கிட்ட வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க முடியல. அவர் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் காலையில அவர் வீட்டுக்கு நானும் என் அழகான தம்பியும் போய் இறங்கினோம். வீட்ல சோபாவுல உட்கார்ந்திருந்த அந்த ‘ஜி’ யை இழுத்துப் போட்டு அடிச்சோம். சட்ட, வேட்டியெல்லாத்தையும் உருவிட்டு வெறும் ஜட்டியோட நடு ஹால்ல குத்த வச்சு உட்கார வச்சேன். அவரு பொண்டாட்டி என் கால்ல விழுந்து அழுதாங்க. ஒரு வாரத்துல பணத்த கொடுக்கறதா சொன்னாங்க. நாங்க வந்துட்டோம். இரண்டுநாள் கழிச்சு தற்கொலை செய்துக்கப் போயிட்டாரு அந்த ‘ஜி’. அவங்க மனைவிதான் காப்பாத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அவரால படம் தயாரிக்கவே முடியல. இந்த விஷயம் சினிமா துறைக்கு பரவியதும் சினிமாக்காரங்க என்னைப் பார்த்து பயப்படத் தொடங்கிட்டாங்க.

அடுத்ததுதான் அந்தத் தயாரிப்பாளர் மரணம். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் என் கட்டுப்பாட்டுல வந்துடுச்சுன்னு சொல்லலாம். தங்கமான ஒரு படத்த எடுத்த அந்தத் தயாரிப்பாளர், என்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார். அந்தப் பட வினியோகம் சம்பந்தமா ஒரு சிக்கல் ஏற்பட்டுச்சு. அதை கேக்கச் சொல்லி நான் ஒரு கைத்தடிய அனுப்பினேன். அந்த கைத்தடி, தயாரிப்பாளரை மிரட்டியிருக்கு. போலீஸ்ல புகார் கொடுத்த தயாரிப்பாளர், கைத்தடிய கைது பண் ணவச்சிட்டாரு. இதை கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் நான் எகிறிக் குதிச்சேன். அந்த நேரம் பார்த்து அந்தத் தயாரிப்பாளர் மனைவி கொடைக்கானல்ல டூர் வந்திருக்காங்க. இத கேள்விப் பட்டு நேரா அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் அவங்கள ரூம்ல வச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்துட்டேன். ‘ரெண்டு நாள்ல பணத்த கொடு, இல்லன்னா இங்க உன் மனைவியை ‘சுத்தமாக்கி’ உட்கார வச்சு மானத்த வாங்கிடுவேன்’னு போன்ல மிரட்டினேன். அவங்க மனைவியும் அவர்கிட்ட அழுது புலம்பினாங்க. ரெண்டு நாள்ல பணம் கொடுக்க முடியாத கொந்தளிப்பால் தூக்குல தொங்கிட்டாரு. அவருக்கு நான் கொடுத்த பணத்துக்கு வட்டி போட்டு, அவரோட சொத்துக்கள எல்லாம் எழுதி வாங்கிடலாம்னு கணக்குப் போட்டு வச்சிருந்தேன். மனுஷன் தொங்கிட்டாரு. அதுக்கப்புறம் நான் வைக்கறதுதான் சினிமா ஃபீல்டுக்கே சட்டம்னு ஆயிடுச்சு.

எந்த நடிகர், நடிகை படமாக இருந்தாலும் யார் தயாரிச்சாலும் என்கிட்டதான் ஃபைனான்ஸ் வாங்கணும்ங்கிற நிலைமை உருவாயிடுச்சு. 

சொந்த ஊர்ல கந்து வட்டி வசூல் செய்த கும்பல அப்படியே சென்னைக்கு ஓட்டினு வந்துட்டேன். அதனால் எப்பவும் என்னைச் சுத்தி கூட்டம் வச்சிகிட்டேன். ஊர்ல பரோட்டா கடை மணிகண்டனையும், அழகான உடன்பிறப்பையும் தங்க வச்சு சினிமா வாங்கறது, விக்கிறதுன்னு தொழில் பார்க்க வச்சேன். கொஞ்ச நாளுக்கப்புறம் உட ன்பிறப்ப மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிட்டு பரோட்டா கடையை சென்னைக்கு அழைச்சுகிட்டு வந்துட்டேன்.

அந்த பரோட்டா கடை சென்னையில போட்ட ஆட்டம்தான் இன்னைக்கு இந்த அளவுக்கு எங்களுக்கு எதிரிகள உருவாக்கிடுச்சு. நான் ஃபைனான்ஸ் விஷயத்துல பயங்கர ஸ்டிரிக்ட்டா இருப்பேன். ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறார்னு கேள்விப்பட்டா முதல்ல அவர்கிட்ட போய் ஒரு ஐம்பது லட்ச ரூபாயை நாலு வட்டிக்கு கொடு த்துருவேன். அதுக்கப்புறம், சேட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ்னு ஒண்ணு ஒண்ணா புடுங்கி கடைசியில அந்தத் தயாரிப்பாளர நடுத்தெருவுல நிக்க வச்சுடுவேன். ராஜா மாதிரி வசூல் செய்ய வேண்டிய சில படங்கள் வசூல் இல்லாமல் போவதற்கும் ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தி பரபரப்பா இருந்த ஒரு தயாரிப்பாளர் பல நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டு ஆண்டியாகிப் போனதுக்கும் நான்தான் காரணம். 

அதேபோல பணம் வசூல் செய்யறதிலேயும் என்பாணி தனிதான். பணம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் கடைசியா அவங்களுக்கு ஒரு டைம் கொடுத்துடுவேன். அவங்க வாங்கின பணத்துக்கு வட்டிக்கு வட்டின்னு போட்டு ஒரு பெரிய தொகையை அவங்க கொடுக்க வேண்டியதா ஒரு கணக்கும் கொடுத்துருவேன். அவங்களால அந்தப் பணத்த கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் அவங்கள தூக்கினு வந்து என் பங்களாவுல இருக்கிற ரூம்ல சுத்தமாக்கி உட்கார வச்சுடுவேன். பொம்பளயா இருந் தாலும் சரி, ஆம்பளயா இருந்தாலும் சரி ஒரே ட்ரீட்மெண்ட்தான். அவங்கள அப்படி சுத்தமாக்கி உட்கார வைக்கற வரைக்கும் என் கைத்தடிங்க செய்து முடிப்பாங்க. கடைசியா நான் மட்டும் அந்த ரூம்ல போய் எதிர்ல சேர்ல உட்கார்ந்து அவங்க நாண்டுக்கினு சாவற மாதிரி அசிங்க அசிங்கமா அரைமணிநேரம் கத்துவேன். அவ்வள வுதான். அவங்க ஏற்கெனவே வாங்கி வச்சிருந்த சொத்தயெல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க.


அதே நேரத்துல அது எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எவ்வளவு அழகியா இருந்தாலும் அந்த ரூம்ல அடைபட்டு இருக்கும் போது கூட நான் அவங்கள தொடவே மாட்டேன். அவங்கள மிரட்டி அசிங்கப்படுத்தி பணத்த வாங்கிடணும்னுதான் நான் அழுத்தமாயிருப்பேனே தவிர, இவங்கள தொட்டுட்டா வரவேண்டிய பணத்துக்கு கணக்குக் காட்டிடப் போறாங்கன்னு பயப்படுவேன். அதே நேரத்துல இதுபோன்ற ஃபேமஸான பெரிய கதைகளை படிக்கிறதுக்கு எனக்கு அவ்வளவு பிடிக்காது. அப்பப்போ சின்னச் சின்ன துணுக்குகள படிச்சுட்டுப் போயிடுவேன்.

ஆனா என்கூட இருந்த பரோட்டா கடையும், உடன்பிறப்பும் இந்த விஷயத்துல பயங்கர மோசம். என்னோட பனிஷ்மெண்டுக்கு முன்னாடியே அவங்க பனிஷ்மெண்ட கொடுத்திட்டிருப்பாங்க.

அதுக்கப்புறம் ஆட்சி மாற்றம் வந்ததும் நான் கார்டன் பேரை வாபஸ் வாங்கிகிட்டு மருதயிலேயே வாரிசை கையில போட்டுக்கிட்டேன். இளவட்டமான அவருக்கு ஜாலியா இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். அவரும் அட்டாக்கும் சாயந்தரமானா என் ஆபீஸுக்கு வந்து உட்கார்ந்துடுவாங்க. பரோட்டா கடை அவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுக்க, அவங்களும் சந்தோஷமா கிளம்பிடுவாங்க. இந்த அஞ்சு வருஷத்துல ஃபைனான்ஸ் வேலையைக் கொஞ்சம் கொறச்சுகிட்டு மத்த விவகாரங்கள்ல தலைதூக்க ஆரம்பிச்சுட்டேன்.


எங்க ஊர் பக்கத்துல காரியம் நடத்துற பட்டியில சுமார் 180 ஏக்கர் வில்லங்க நிலத்த வில்லத்தனமா வாங்கிப் போட்டேன். அதுல ஒரு காலேஜை கட்டிட்டு கல்வித் தந்தையா உருவாயிடணும்கிறதுதான் எனது எதிர்காலத் திட்டம். அதுக்குள்ள ஆட்சி மாற்றமும் வந்துடுச்சு. கடந்த ஆட்சியில வாரிசை கைல வச்சுகிட்டும், மாணிக்க மந்திரிய மடக்கி வச்சுகிட்டும் நாங்க அடிச்ச எல்லா கூத்தையும் ஆதாரங்களோடு எடுத்து வச்சிருக்காங்க.


நான் ஏற்கெனவே கார்டன் பேரச் சொல்லி ஏமாத்திவிட்டதாலே இப்ப அவங்க பேரையும் பயன்படுத்த முடியல. இன்னைக்கோ, நாளைக்கோ என்னை தூக்கிடுவாங்கன்னு தெரியுது. அதுக்குள்ள உங்ககிட்ட மனம் திறந்து பேசறதுக்கு வழிசெய்தீங்க. ரொம்ப நன்றி!’’

இதுதான் அன்புச் செழியன். திரைப்படத்துறையில் விசாரித்த போது பல பேர் குடியை கெடுத்தவர் இவர் என்று சொல்கிறார்கள். இவரின் பின்புலமாகச் சொல்லப் படும் கதை, சின்ன எம்ஜிஆர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சுதாகரன், ஒரு பெரும் தொகையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும், அந்தத் தொகையில் ஒரு பகுதி நடிகர் ரித்தீஷிடம் கொடுக்கப் பட்டதாகவும், ரித்தீஷிடம் கொடுக்கப் பட்ட தொகையையே அன்புச் செழியன் வட்டிக்கு விட்டார் என்றும் சொல்லப் பட்டது. 

அன்புச் செழியனின் அடாவடிக்கு ஒரு நல்ல உதாரணம், புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் அஜீத்தையே இவர் மிரட்டியுள்ளார் என்கிறார்கள். பாலாவின் நான் கடவுள் படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப் பட்ட அஜீத், லீ மெரிடீயன் ஹோட்டலில் இந்த அன்புச் செழியனால் மிரட்டப் பட்ட பிறகே அந்தப் படத்தில் இருந்து விலகினார் என்கிறார்கள்.


அஸ்ரா கார்க்

தற்போது விஷயம் என்னவென்றால், புறநகர் எஸ்.பி. அஸ்ரா கார்கிடம் அன்புச் செழியனை கைது செய்யாமல் விட்டு விட வேண்டும் என்று பல அதிமுக பிரமுகர்கள் போனில் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான். முதன் முதலாக விசாரிக்கக் கூப்பிட்ட போதும், அன்பு சசிகலாவின் பெயரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் அசராத அஸ்ரா கார்க், கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார்.

அன்புச் செழியனை கைது செய்தது பெரிய விஷயமில்லை. இவர் மீதான வழக்கில் தண்டனை பெற்றுத் தர வேண்டியதும் காவல்துறையின் கடமை.

No comments:

Post a Comment