Wednesday, December 7, 2011

காந்தி என்னும் கோழை….!! இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் ?

“நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்- மாவோ”

அஹிம்சையை முழுதாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதற்காக எல்லா பிரச்சினைகளுக்கும் காலை நக்கியே தீர்வு காணலாம் என்பதை ஒருகாலும் ஏற்க முடியாது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தினார் என்பதுதான் அவர் மீதான என் வெறுப்பின் தொடக்கப் புள்ளி. அம்பேத்கர், பகத் சிங், நேதாஜி போன்றோருடனான காந்தியின் மோதல்களை படித்ததால், முற்றிலும் வெறுக்கிறேன்!

காந்தியை வசைபாடுவதற்கு முன், அஹிம்சையை பற்றிய அவரின் வரையறையை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை பொறுத்தவரையில், “அஹிம்சை என்பது ஆங்கிலேயனை துன்புறுத்தாமல் அமைதியான வழியில் போராடி சுதந்திரம் அடைவது”. (ஆனால், இந்திய மக்கள் எவ்வளவு வேண்டுமானலும் துன்பப்படலாம்)
அஹிம்சை ஏன் (நாட்டுக்கு) உதவாது?

அஹிம்சை எந்த நாட்டிற்கு உதவி இருக்கிறது? இந்தியாவிற்கா? உண்மையான அஹிம்சையால் வென்றெடுத்த சுதந்திரமென்றால், இது காந்தி பிறந்த மண் என்று பீற்றிக் கொள்ளும் அவரது தொண்டர்கள் ஏன் நாட்டில் முப்படையை நிர்மாணித்த போது எதிர்க்கவில்லை? விடுதலைக்கே உதவிய உங்களது அஹிம்சை, பாதுகாப்புக்கு உதவாதா,என்ன? “தரைப்படை, கப்பற்படை, விமானப்படை” என்பதிற்கு பதிலாக, “காலில் விழும் படை, உண்ணாவிரதப் படை, அந்நியனே வெளியேறு என்று கோஷமிடும் படை” என்று எல்லைபகுதியில் நிறுவ வேண்டியதுதானே? இப்பொழுது மட்டும் உயிரை துன்புறுத்துதல் எப்படி அய்யா சரியாகும்! இப்பொழுது ஊடுருவும் அந்நியர்களை, தீவிரவாதிகளை எதிர்க்க ஆயுதம் தேவையென்றால், அன்றைக்கு இருந்த நிலைமைக்கும் ஆயுதம் தேவைதானே?

வன்முறையில் இறங்காமல் அதே நேரம் ஒத்துழைக்காமல் போராட வேண்டும் என்று அவர் வழியில் செல்பவர்கள் யாரேனும் உண்மையிலேயே இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு பெண்ணொருத்தியை மானபங்கபடுத்த ஒரு கும்பல் வந்தால், ஒத்துழைக்கமாட்டேன் என்று ஓரமாக அமர்ந்து சத்தியாகிரகம் செய்வீரா , இல்லை எதிர்த்து சண்டை இடுவீர்களா? (சத்தியாகிரகம் செய்வேன் என்பவர்கள் தயவு செய்து வாசிப்பதை நிறுத்திவிடலாம். நான் நிற்பது எதிர்த்துருவம்.)

ஒரு பெண்ணின் நன்மைக்கே வன்முறை தீர்வென்றால், விடுதலைக்கு புரட்சி வேண்டாமா? அன்று புரட்சி இருந்தது.. போர்க்குணமும் இருந்தது…ஏனென்றால், இது காந்தி பிறந்த மண் மட்டுமன்று, நேதாஜி பிறந்த மண்ணும் கூட! இதை பிரிட்டிஷ்காரன் அறியாமலில்லை. போராட்டங்களை பிளவுப் படுத்த, ஆயுதப் போராட்டங்களில் பெரிதும் ஈடுபடாத மேல்தட்டு மக்களைச் சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அதுதான் “இந்திய தேசிய காங்கிரஸ்”. இதன் மூலம் மக்கள் அமைப்பொன்று இருக்கிறது, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் போடப்படும், மெள்ள மெள்ள சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கினான்.(ஆம் அப்படி நடந்தே என்று வாதிட நினைத்தால், நேதாஜியையும், இரண்டாம் உலகப் போரையும் படித்து விட்டு வந்து வாதிடலாம்.)
காந்தி என்ற தலைவன்!?

தலைவருக்கான தகுதியோ, மன உறுதியோ இல்லை என்று தெரிந்து, தாமாகவே பொறுப்புகளில் இருந்து விலகி நேதாஜிக்கு வழி விட்டிருக்க வேண்டும்! அது சுதந்திரப் போராட்டத்தை துரிதப் படுத்தியிருக்கும். அதை விடுத்து, புரட்சி வெடிப்பது போன்ற காலங்களில் எல்லாம் ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களை தொடங்குவதும், பின்பு உப்பு சப்பிலாத காரணங்களைக் காட்டி அப்போராட்டங்களை கலைப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்தார். நாட்டின் விடுதலையை தாமதப்படுத்தினார்.



Jallianwala Bagh massacre

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் 379 பேர் இறந்தனர், ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். ஜெனரல் டயர் என்ற வெறிநாய் நிகர் இழிபிறவியோ, துப்பாக்கி ரவைகள் தீராவிட்டால் இன்னும் சுட்டிருப்பேன் என்று கொக்கரித்தது. ஆனால் அதற்கு கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதமோ போராட்டமோ எதுவும் நடத்தாமல், அதே பஞ்சாபில் மக்களின் கலகத்தால் விளைந்த சில வெள்ளையனின் சாவுக்கும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததற்கும் கண்டனம் தெரிவித்தார்! (இதே காங்கிரஸ் கருங்காலிகளின் அடுத்த தலைமுறைகள்தான் போபால் விபத்துக்குக் காரணமான ஆண்டர்சனை காப்பற்றியது… சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இவர்கள் அடிமைகள் தான்!)

இரண்டாம் உலக போரில் நேதாஜி எதிரணியை ஆதரிக்க, காந்தியோ பிரிட்டிஷை ஆதரித்தார். அது மட்டுமின்றி பிரிட்டிஷார் அழிவார்களோ என்று நினைத்தாலே தாங்க முடியவில்லை என்று கண்ணீர் வேறு வடித்திருக்கிறார்! அவர்களின் அழிவிலிருந்து எங்களுக்கு சுதந்திரம் *தேவையில்லை*, இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார் இந்த மகான்!. பிரிட்டிஷை காப்பாற்ற இந்தியன் சாகலாம், அஹிம்சையை விடுத்து உலக போரில் ஈடுபட்ட பிரிட்டிஷை நீங்கள் ஆதரிக்கலாம், ஆனால் தாய் நாட்டின் விடுதலைக்கு வன்முறை கூடாதா! வன்முறைக்கும் புரட்சிக்கும் வித்தியாசம் தெரியாதவன் எப்படி தலைவனாக இருக்கமுடியும்?
காந்தி என்ற மனிதன்

செய்த குற்றத்தை ஒப்பு கொள்பவனெல்லாம் நல்ல மனிதன் அல்ல, அதை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பவனே மனிதன். சத்திய சோதனையில் பல உண்மைகளை சொல்லியவர்,சிறந்த மனிதர், மகாத்மா, என்றெல்லாம் இருக்கும் கற்பிதங்களையும் தாண்டி, அவரின் கோழைத்தனத்தை நிறுவ போதுமான ஆதாரங்கள் , வரலாறெங்கும் விரவிக் கிடக்கிறது.

ஏழை பங்காளனாய் இருப்பதால் சட்டையே அணியாத அவர், செருப்பு மட்டும் போட்டது ஏன், மூன்றாம் வகுப்பில் பயணிக்காமல் முதல் வகுப்பிலேயே பயணித்தது ஏன்? எத்தனை ஏழைகள் முதல் வகுப்பில் செல்கிறார்கள் ?

சாதியை ஒழிக்கும் பொறுப்புள்ள தலைவன், ‘அரிஜன்’ என்று பட்டமிட்டு அழைத்து சரியா? தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தது ஏன்? அரிஜன மக்கள் பக்குவமற்றவர்கள் என விளித்தது ஏன்? கோவில் உள்நுழைவு போராட்டத்திற்கு ஆதரவு தர மறுத்ததும் ஏனோ?

இதனால் தான் அம்பேத்கர் அவரை “நம்பதகாதவர், நேர்மையற்ற வழிகளை மேற்கொள்கிறார்” என்று தோலுரித்தார். (Because of Gandhi’s actions, Ambedkar described him as “devious and untrustworthy”)

1987இல், ஆப்ரிக்கா சென்று அஹிம்சை முறையில் போராடிய மாமனிதர், அங்கிருந்த வெள்ளை குடியேறிகள் அவரை தாக்க முற்பட்ட போது *தப்பி ஓடி ஒளிந்து, அவர்கள் மீது வழக்கு போடவும் பயந்த* அவர், அங்கேயே, அவர்களிடமே அஹிம்சையில் போரடியிருக்கலாமே? வீரத்தின் உச்சம் அஹிம்சை என்று உரைப்பவர்கள், இதை வீரம் என ஒப்புக் கொள்வார்களா?

என்னை பொறுத்தவரையில் “அஹிம்சை” என்பதைவிட “காந்தியம்” ஆபத்தானது, மோசமானது. என் நாட்டின் சுதத்திரத்தை தாமதப்படுத்தியது மட்டுமில்லாமல், வீரத்தால் விளைய வேண்டிய விடுதலையை பேடித்தனத்தால் விளைவிக்க முயற்சித்தது. அது புரட்சிகளின் முட்டுக்கட்டை. கோழைகளின் கூடாரம்.


No comments:

Post a Comment