Wednesday, December 14, 2011

ஃபேஸ்புக் : நேற்று - இன்று - நாளை, ஒரு புரட்சிப் பார்வை

சமிப காலமாக உலகெங்கும் பல எழுச்சி போராட்டங்கள் நடக்க துவங்கி விட்டன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. அடக்குமுறையிலிருந்தும் நீண்ட நாள் அரசாண்டவர்களிடமிருந்தும் மீண்டு வருவதிற்கான எந்தனிப்புகள், சுதந்திரத்திற்கான வேட்கையாக அடையாளம் காணப்பட்டு பல தேசங்களில் தொடரப்படுகிறது.

இந்த திடிர் தொடர் புரட்சிக்கான உத்வேகம் எகிப்தில் நடந்து புரட்சிக்கு பின் ஏற்பட்டது. ஜனவரி 25, 2011-இல் துவங்கிய எகிப்துப் புரட்சி பிப்ரவரி 11, 2011-இல் அதன் முப்பது ஆண்டு காலம் ஆட்சியாளரான 'ஹோசனி முபாரக்கை'(Hosni Mubarak) பதிவிலிருந்து ஓடவைத்தது. வெறும் பதினெட்டே நாட்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்த அந்த புரட்சி சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.

வரலாறு முழுவதும் நிறைந்துக்கிடக்கும் பல புரட்சிகளை, புரட்சிக்கான எந்தனிப்புகளை நாம் அறிவோம். அதில் வெற்றி பெற்றதும், அடக்கப்பட்டதுமான பல புரட்சிகள் 'நிகழ' எடுத்துக்கொண்ட காலங்கள் அதிகம். ஆண்டுகள் பலவாகியும் இன்னுயிர்கள் பல இழந்தும் கிடைக்கப்பட்ட, கிடைக்கப்படாத சுதந்திர போராட்டாங்கள் அவை. மிக குறுகிய காலத்தில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சி 'எகிப்திய' புரட்சியாகத்தான் இருக்க முடியும். இது எப்படி சாத்தியமாயிற்று? பதினெட்டு நாட்களுக்குள் ஒரு புரட்சியை வெற்றி பெற செய்தது எது? முப்பது ஆண்டுகாலம் அரசாண்டவனை துரத்தி அடிக்க சாத்தியம் ஏற்படுத்திக் கொடுத்தது எது?

இதற்கு மிக எளிமையான பதிலொன்று உண்டென்றால், அது 'மக்கள் சக்தி' என்பதாக மட்டுதான் இருக்க முடியும். மக்கள் சக்தி ஒன்றிணைந்தபோதெல்லாம் பல மாற்றங்களை நிகழ்த்தி காட்டி விட முடியும் என்பதற்கு சரித்திரத்தில் பல உதாரணங்கள் உண்டு. மக்கள் சக்தியை உலகிற்கு முதலில் அடையாளம் காட்டியது 'ருஷ்ய புரட்சி'தான். அதிலிருந்த சாத்தியத்தை கண்டு கொண்டு உலகம் தொடர்ந்து அதை நடைமுறை படுத்தி வருகிறது. பல தேசங்கள் விடுதலைப் பெறவும், புதிய தேசங்கள் உயிர்த்தெழவும் காரணமான அதே மக்கள் சக்திதான் எகிப்து புரட்சிக்கும் காரணம் என்றாலும், இந்த எகிப்தியப் புரட்சி பின்பற்றக் கூடிய ஒரு முன்மாதிரியை கொண்டிருக்கிறது. வருகாலம் தவிர்க்க முடியாத/கூடாத அந்த முன்மாதிரி என்ன என்பதை பார்ப்பதிற்கு முன்பாக உங்களிடம் இரண்டு கேள்விகள்.
1. ஒரு பாவப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு அதிகபட்ச இழப்பீடாக எது இருந்துவிட முடியும்? 

2. ஒரு இளைஞனின் சிறு சிந்தனை(Idea) ஒன்று புரட்சிக்கு அடித்தளமாக முடியுமா?

இந்த கேள்விகளுக்குகான விடையை இந்த கட்டுரையின் போக்கில் நீங்கள் கண்டெடுத்துவிட முடியும். 

'கலித் மொகமத் சயித்'(Khaled Mohamed Saeed) என்றும் அந்த இருபத்தியெட்டு வயது இளைஞனை எகிப்திய காவல்துறையை சார்ந்த இரண்டு காவலர்கள் கைது செய்து அழைத்துச்சென்று அடித்தே கொன்றுவிடுகிறார்கள். அவன் செய்த குற்றம் "அவன் திருட்டுக்கும் ஆயுத கடத்தலுக்கும் தேடப்பட்டவன்" என்பது காவல்துறை சொன்ன காரணம். ஆனால் உண்மையில் அவன் செய்த குற்றம், போதை கடத்தலோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப்பற்றிய கானொலியை(விடியோ) பரப்ப முயன்றது. 

அவனை கைது செய்தபோதே அவன் தலையை சுவற்றில் முட்டியும் உதைத்தும் தரையோடு தரையாக இழுத்தும் சென்றார்கள் என்பதிற்கு கண்ணால் பார்த்த சாட்சிகள் பல உண்டு. அவனின் உடலை பிணவறையில் சென்று பார்த்த அவனின் சகோதரன் தன் தொலைபேசியின் மூலமாக, அடித்து உடைக்கப்பட்டிருந்த அந்த முகத்தை புகைப்படம் எடுத்தான், பின்பு அதை இணையத்தில் வெளியிட்டான். கலித் மொகமத் சயித்தின் அந்த சிதைந்த முகம் பலரை அதிர்ச்சியடையச் செய்தது.






'கலித் மொகமத் சயித்'


சிதைந்த முகம்

துபாயிலிருக்கும் கூகுள் நிறுவனத்தில் வேலைப்பார்த்த 'வேயில் கோனிம்'(Wael Ghonim) என்னும் விற்பனை மேலாளர் ஒருவர் அந்த புகைப்படத்தை அடையாளமாகக் கொண்டு 'ஃபேஸ்புக்கில்'(Facebook) 'நாங்கள் எல்லாரும் கலித் சயித்'("We are all Khaled Said") என்னும் பக்கத்தை துவங்கினார். இந்த இணையப் பக்கம் பலரை ஒன்றிணைத்தது. லட்சக்கணக்கானவர்கள் இந்த பக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்டார்கள். பலர் அந்த உடைந்த முக புகைப்படத்தை அடையாளப் புகைப்படமாக தங்களின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு வைத்துக்கொண்டார்கள். இதன் ஊடாக மக்களிடையே ஒரு எழுச்சி உண்டானது, மக்கள் இணையத்தின் மூலமாக தங்களின் எண்ணத்தைப் பகிர்ந்துக்கொண்டார்கள், இந்த எண்ணயோட்டங்கள் செழுமையடைந்து, அவர்களை வீதியில் இறங்கி போராட தூண்டியது. 

இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் என்பது அதை இழைத்தவனுக்கு தண்டனை என்பதிலிருந்து துவங்கினாலும் அந்த அநீதி மீண்டும் நிகழாவண்ணம் சூழ்நிலையை மாற்றுவதுதான் இழைக்கப்பட்டவனுக்கான சரியான இழப்பீடாக இருக்க முடியும். இதன் அடிப்படையில் கொடுரக் கொலைக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள் அதன் ஆதாரமான அரசையே மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்தார்கள். இதன் வெளிப்பாடாக ஊரெங்கும் கலவரம், போராட்டம், ஊர்வலம் என மக்கள் திரண்டார்கள்.

(முபாரக் பதவி விலக வேண்டும் என்பதிற்கு ஏழ்மை, ஊழல், தன் மகனை அடுத்த அதிபராக்குவது போன்ற பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், மக்கள் ஒன்று கூடி போராடுவதிற்கு இந்த சம்பவமே துவக்கமானது)
ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியுப் போன்ற இணையத்தளங்களை தங்களின் பரப்புரைக்கான ஊடகங்களாக கொண்டு மக்கள் தங்களை ஒன்றிணைத்தார்கள், இதனால் எகிப்தில் இணையச்சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டது, என்றாலும் மக்கள் தங்களின் உணர்ச்சிபூர்வமான கட்டுண்டுதலில் ஒன்றிணைந்து புரட்சியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

ஒரு இளைஞனின் மரணம் அந்த தேசத்தின் ஆன்மாவை சுட்டது, அதன் வெளிப்பாடாக அந்த தேசம் தன்னை மீட்டெடுத்துக்கொண்டது. இதை விட அந்த இளைஞனின் மரணத்திற்கு என்ன இழப்பீடு பெற்றுவிட முடியும்?. மரணத்திற்கு இழப்பீடு விடுதலை என்றால் மரணிப்பதிற்கு பல உயிர்கள் உண்டு இவ்வுலகில். 

இப்படி ஒரு இளைஞனின் மரணம் தேசத்தை விடுதலையை நோக்கி நகர்த்திய காரணங்களில் முதன்மையானது, ஒரு இளைஞனின் எண்ணத்தில் உதித்த ஒரு சிறு சிந்தனைதான். அந்த இளைஞனுக்கு எகிப்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சொல்லப்போனால் அவன் அரேபிய தேசங்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு நாட்டைச் சார்ந்தவன். அவனின் சிந்தனையின் விளைவால் உருவான ஒரு கண்டுபிடிப்பே இன்று அரேபிய தேசங்கள் எங்கும் புரட்சியை நோக்கி நடைபோட செய்திருக்கின்றன.


'மார்க் சக்கர்பர்க்'

அந்த இளைஞனின் பெயர் 'மார்க் சக்கர்பர்க்'(Mark Zuckerberg), வட அமெரிக்காவைச் சார்ந்தவன். 'ஹார்வட்'(Harvard) பல்கலைக்கழகத்தின் மாணவன். அவன் சிந்தனையில் உதித்த அந்த யோசனை, நண்பர்களை ஒன்றிணைப்பது. அதாவது நாம் நண்பர்களாக ஒன்றிணைவதின் மூலம் நம்முடைய நண்பர்களையும் நண்பர்களாக்க முடியும் அல்லவா, நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற அடிப்படையில் ஒரு நட்பு வலைப்பின்னலை உருவாக்குவது. இதை இணையத்தின் மூலம் சாத்தியமாக்குவது எளிது என்பதினால் அவன் செய்தது எல்லாம் ஒரு சிறிய மென்பொருளை எழுதி அதை இணையத்தில் பதிவிட்டதுதான். அந்த நண்பர்களுக்கான வலைப்பின்னல் வளர்ந்து இன்று அறுபது கோடி(600 மில்லியன்) நபர்களை இணைத்திருக்கிறது. அந்த இளைஞனை உலகின் இளம் வயது கோட்டீஸ்வரனாக்கி இருக்கிறது.

அவனோடு சண்டைப் போட்டு பிரிந்த காதலியை பழிவாங்க தோன்றிய ஒரு யோசனைதான் அதற்கெல்லாம் ஆதாரம். பிரிந்துபோன காதலியை வெறுப்பேத்தும் விதமாக அவளின் புகைப்படம் மற்றும் பல பெண்களின் படத்தை சேகரித்து, அதைக்கொண்டு இரண்டு பெண்களின் புகைப்படத்தை அருகருகே கொடுத்து இந்த இரண்டு பெண்களின் யார் அழகானவர்கள் என்று பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்க வைப்பது என்பதாக இருந்தது அவனின் முதல் முயற்சி. இதன் மூலம் தன் முன்னால் காதலியை வேறொரு அழகான பெண்ணுடன் ஒப்பிட்டு அவள் அழகற்றவள் என்று ஊர் சொல்லுவதாக அவளை நோகச் செய்து திருப்திப்பட்டுக் கொள்வதே அவனின் நோக்கம். அந்த இணையப் பக்கத்திற்கு அவன் வைத்தப் பெயர் 'ஃபேஸ்மேஷ்'(Facemash) என்பதாகும்.

நான்கு மணி நேரத்திற்குள்ளாக 450 பார்வையாளர்களையும் 22,000 புகைப்படப் பார்த்தலையும் நிகழ்த்தியது அந்தத் தளம். இதன் காரணமாக ஹார்வட் பல்கலைக்கழகத்தின் இணைய சேவை சம்பித்துப்போனது. 'மார்க் சக்கர்பர்க்' விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டான். பின்பு தண்டனை இரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து யோசித்த யோசனை, ஹார்வட் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைப்பதிற்குகான ஒரு வலைப்பின்னலை உருவாக்குவது என்பது.

இதிலிருந்து தனித்து இன்னும் கொஞ்சம் விரிவாக்கி நண்பர்களை இணைக்கும் முயற்சியில் அவன் இறங்கினான். அந்த முயற்சிக்கு 'தி ஃபேஸ்புக்'(The Facebook) என்று பெயரிட்டான். ஜனவரி 2004-இல் இந்த தளத்தை அவன் வெளியிட்டான். இதுவும் முதலில் ஹார்வட் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சேவையாக மட்டும்தான் இருந்தது, பின்பு சில நண்பர்களோடு சேர்ந்து இன்னும் மேம்படுத்தி மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் (Stanford, Columbia, மற்றும் Yale) விரிவாக்கினான்.

இந்த தளத்தை துவங்கிய சில நாட்களிளையே அவனுடைய மூன்று நண்பர்கள் தங்களின் யோசனையை இவன் திருடி விட்டதாக வழக்கிட்டார்கள், என்றாலும் இந்த 'தி ஃபேஸ்புக்' மேலும் மேலும் வளர்ந்து 2005ஆம் ஆண்டு பல கூட்டு நிறுவன ஊழியர்களுக்குமான சேவையாக மாற்றப்பட்டது. இதில் 'ஆப்பிள்' மற்றும் 'மைக்ரோ சாப்ட்' நிறுவனமும் அடங்கும். பிறகு 'தி ஃபேஸ்புக்' என்பதிலிருந்து 'தி' நீக்கப்பட்டு இப்போது அந்த தளம் 'ஃபேஸ்புக்' என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 26, 2006-க்கு பிறகு 'இமெயில்' விலாசம் கொண்ட '13 வயதைக்' கடந்தவர்கள் அனைவருக்கும் ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம் 'ஃபேஸ்புக்'-இன் 1.6% பங்கை 240 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதனால் 'ஃபேஸ்புக்'-இன் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து நவம்பர் 2010-இல் 41 பில்லியன் டாலராக உயர்ந்தது. வட அமெரிக்காவின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் மூன்றாவது இடத்தை 'ஃபேஸ்புக்' பிடித்தது. முதல் இரண்டு - 'கூகுள்' மற்றும் 'அமெசான்'.

உலகின் பல நாடுகளில் இயங்கும் 'சமுதாய வலைத்தளங்களில்' முதன்மையானதாக 'ஃபேஸ்புக்' இருக்கிறது. சைனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்த்தான், பாக்கிஸ்தான், சிரியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்ய காரணங்களில், இஸ்லாமிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் செயல்பாடுகள் நடைபெருகிறது என்பதும் ஒன்று. 'ஃபேஸ் புக்' ஒவ்வொரு நாளும் 20,000 உறுப்பினர்களை நீக்குகிறது. தங்களின் சட்ட திட்டத்திற்கு எதிராக இருப்பதினால் மற்றும் வயது கட்டுபாடுகள் மீறப்படுகிறது என்பதைப்போன்ற காரணங்களினால். 

'ஃபேஸ்புக்' அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறது. 2008 வட அமெரிக்க தேர்தலின் போது இரண்டு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களின் 'debates'(Republican and Democratic debates)-களின் போது மாணவர்களின் கருத்துகளைக் கேட்டறிய இந்த தளம் பயன்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் உறுப்பினர்கள் இதில் கலந்துக்கொண்டனர். கருத்து கணிப்புக்கு 'ஃபேஸ்புக்' ஒரு முக்கிய தளமாக இன்று பயன்படுகிறது. மாணவர்களின் அரசியல் ஈடுபாடும், இளைஞர்களை தங்கள் பிரநிதிகளாக தேர்ந்தெடுப்பதும் மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பதும் இதனால் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

'மார்க் சக்கர்பர்க்'

பிப்ரவரி 2008-இல் கொலப்பியாவில் ஃபேஸ்புக்கின் "One Million Voices Against FARC" என்னும் குழு, லட்சக்கணக்கானவர்களை ஒருங்கிணைத்து கொலப்பிய இராணுவ குழுவிற்கு(FARC) எதிராக ஊர்வலம் நடத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 2010-இல் வடகொரியாவின் அரசாங்க இணையத்தளமான 'Uriminzokkiri' ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறது. Facebook as "ignoring the difference between correlation and causation" என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.

இருபது வருடங்கள் பிரிந்திருந்த தன் மகளை ஃபேஸ்புக்கின் வழியாக ஒரு தந்தை கண்டெடுத்திருக்கிறார். நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு மகளும் தந்தையும் இணைந்திருக்கிறார்கள். 102 வயதான ஒரு இங்கிலாந்துப் பாட்டிக்கு ஃபேஸ்புக்கின் வழியாக 4,962 நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவள் இறந்தபோது பெரும்பாண்மையோர்கள் இரங்கல் கூட்டத்திற்கு வந்தார்கள். இதனால் பிரபலம் அடைந்த அவளின் இறங்கல் செய்தி பல ஊடகங்களில் செய்தியானது. 69% வட அமெரிக்கர்கள், 67% மத்திய கிழக்கு ஆப்பிரிக்கர்கள், 58% தென்னமெரிக்கர்கள், 57% ஐரோப்பியர்கள் மற்றும் 17% ஆசியர்கள் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 

இப்படி பல வழிகளில் மாற்றங்களை நோக்கி நகரும் இந்த 'ஃபேஸ்புக்' தளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் அதன் ஆரம்ப காலங்களைப்பற்றி 'தி சோசியல் நெட்வொர்க்'(The Social Network-2010) என்னும் படம் விவரிக்கிறது. இதன் நிறுவனர் 'மார்க் சக்கர்பர்க்'-இன் மீது அவரின் நண்பர்கள் தொடுத்த வழக்குகளின் விவரிப்பாக நகரும் இந்தப்படம் பல விருதுகளை பெற்றிருக்கிறது.

படம் பார்க்க பார்க்க நம்முள் ஏற்படும் மாற்றங்களை, உற்சாகத்தை, பிரமிப்பை இங்கே வார்த்தையால் விவரிக்க முடியாது. சொல்ல முடியாத ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் இந்த படம் ஏற்படுத்துகிறது. 

இளைஞர்கள் வருங்காலத் தூண்கள் என்ற சொல்லாடல், பெரும்பாலும் உண்மையாக்கப்படுகிறது. இளைஞர்கள் முதியவர்களாக வேண்டியதில்லை, இளைஞர்களாக இருக்குபோதே வருங்காலத்தை நிர்மானிக்க கூடியவர்களாக முடியும் என்ற பேருண்மையையும், மனதில் தோன்றும் சிந்தனையானது இந்த பூமியெங்கும் நிறைந்து கிடக்கும் மனிதர்களுக்கானதாகிருப்பின் வருங்காலம் வளமாகும் என்பதும் இந்த படம் சொல்லும் செய்தி.

புரட்சிக்கான ஆயுதங்களில் ஒன்றாக இந்த சமூக வலைத்தளங்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றன. இதை உணர்த்தும் எகிப்திய புரட்சி மாற்றூடகம் ஒன்றை வருகாலத்திற்கான ஒரு புதிய பாதையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

நம் நாட்டில் இந்த தேர்தலில் 75%-80% வாக்குபதிவுகள் நிகழ்ந்ததுக்கும் கூட இந்த ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிளாக்(Blog) எழுதுதல் போன்ற இணைய சாத்தியங்கள் ஒரு காரணம் என தோன்றுகிறது. இதில் இளைஞர்கள் எழுதவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், விவாதிக்கவும், சண்டைப்போடவும் அதன் வெளிப்பாடாக செயல்படவும் செய்திருக்கிறது என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment