Wednesday, December 14, 2011

15 வயது காதலியுடன் காதலன் தற்கொலை!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னுடைய காதலியான 15 வயது சிறுமியுடன் 22 வயது இளைஞனொருவன் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நாரம்மல, மெதகொட பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13.12.2011) இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட இளைஞன், மேற்படி காதல் விவகாரம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கிரிகெவ பகுதியைச் சேர்ந்த சமன் குமார (வயது 22) மற்றும் பாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தமாலி திலகரத்ன (வயது 15) ஆகிய இருவருமே தற்கொலை செய்துகொண்டவர்களாவர்.

இவர்களது சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக தம்பதெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment