Saturday, December 24, 2011

மொபைல் பண பரிமாற்றத்திற்கான உச்சவரம்பை நீக்க ஆர்பிஐ முடிவு

வாடிக்கையாளர் சேவை கருதி மொபைல் பண பரிமாற்றத்துக்கான உச்சவரம்பை நீக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு மொபைல் பாங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மொபைல் பாங்கிங் வசதியில் பணப் பரிமாற்றம் செய்ய கடந்த 2009ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதற்கான உச்சவரம்பு ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், அதுபற்றி ரிசர்வ் வங்கி சமீபத்தில் மறுஆய்வு நடத்தியது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கிகள் இடையே மொபைல் பேமென்ட் சர்வீசை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அளிக்கிறது. வங்கி கணக்குகள் இடையே செல்போன் மூலம் உடனுக்குடன் பணப் பரிமாற்றம் செய்வதை இது உறுதி செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த வசதியை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கையும் தொகையும் அதிகரித்து வந்துள்ளது.
இந்த வசதிக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை கருதி மொபைல் பண பரிமாற்றத்துக்கான உச்சவரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரும்பும் தொகையை வாடிக்கையாளர்கள் இனி மொபைல் போனில் இருந்து பரிமாற்றம் செய்ய முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment