Saturday, December 24, 2011

குமுதம் - சொல்வதெல்லாம் வக்கிரம்... செய்வதெல்லாம் அக்கிரமம்...

புலனாய்வு துறை பத்திரிகைகளுக்கு - அடுத்தவர் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து - அவர்களின் படுக்கையறை சமாசாரங்களையும் எழுதவில்லை என்றால் தூக்கம் வராது போலும் அல்லது மண்டை வெடித்து விடும் - சிந்துபைரவி ஜனகராஜ் போல. அந்த வகையில், தற்போது குமுதம் ரிப்போர்ட்டர் அந்த ஈனத்தனமான (அவர்களுக்கு அது சமுக சேவை) வேலையை "சொல்வதெல்லாம் உண்மை (வக்ரம்)" என்கிற தலைப்பில் பிரபலங்களின் அந்தரங்களை விஷமத்தனமாய் வெளியிட துவங்கி உள்ளது...

ரஞ்சிதா, நித்யானந்தாவை நக்கீரன் பிடித்து கொண்டது போல. இது நாள் வரை, சினிமா கலைஞர்களின் பால் மாத்திரம் - தங்கள் வக்ர புத்தி சித்திரங்களை, அந்தரங்ககளை வெளியிட்டவர்கள் - இப்போது அரசியல்வாதிகள், பகுத்தறிவாளர்கள், மதபோதகர்கள் என்று அனைவர் மீதும் கை மற்றும் கண் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து - நம் இனமான தலைவரும் தப்பவில்லை. ஆனால் அவர்கள் மட்டும் உத்தம புத்திரர்கள்.

குறைந்து விட்ட சர்க்குலேஷனை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் போலும். இனி இதே அசிங்க அயோக்யத்தனத்தை - ஏனைய புலனாய்வு பத்திரிகைகளும் செய்யக்கூடும். செய்து தானே ஆக வேண்டும். ஒருவர் வாந்தி எடுப்பதை பார்த்தால் - எல்லோரும் வாந்தி வருமே. வாந்தி எடுப்பார்களே. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே...

"சொல்வதெல்லாம் உண்மை"யில் - உண்மை இருக்கிறதோ, இல்லையோ - அதை வெளியிடுபவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டுமே. அவர்களின் அலுவலகத்தில் நடந்த "சொல்வதெல்லாம் உண்மை"யை - பதிவர் சவுக்கு வெளியிட்டு இருக்கிறார். அவை போக -குமுதம் குறித்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதுவும் "சொல்வதெல்லாம் உண்மை" டைப் தான். அங்கங்கே படித்த, பார்த்த தகவல்கள்...

ஒரு முறை குமுதத்தில் நான்கு நடிகைகளின் பின்பக்கத்தை போட்டு (இடுப்பும், இடுப்பு சார்ந்த பகுதியும்) எது எது எந்தெந்த நடிகையின் இடுப்பு என்று வக்ர புத்தியுடன் கேட்டிருந்தார்கள். இவர்கள் தான் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டு - பேனா முனையை வலிமையான ஆயுதமாக பாவிக்கிறவர்களா?

மதுரை நகரில் ராம்தாஸ்க்கு எதிராக கருப்பு கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய போது - குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரும் அடி வாங்கி காயமடைந்தார். ஆனால் தாக்குதலை நடத்தியது பெரிய கை என்பதால் - தமது பத்திரிகை நிருபர் அடிவாங்கியதை கூட பெரிது படுத்தவில்லை. என்னா பத்திரிகை தர்மம். இவர்கள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.

தம் பத்திரிகையில் எழுதிய ஞானிக்கே எழுத்துரிமையை பறித்தவர்கள் என்பது மேலதிக தகவல். அந்த பத்திரிகையில் ஒரு இலக்கிய எழுத்தாளர் பணிபுரிந்தார். தமிழக இலக்கியமும், வாசிப்பாளர்களும் மதிக்கின்ற மிக பெரிய மாண்பு, ஆளுமை படைத்தவர். அவர் அங்கே பணிபுரிந்த காலத்தில் - ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அங்கே அவரின் எழுத்தை நேசிக்கின்ற ஒருவர் "இந்த மாதிரியான குப்பை பத்திரிகையில் வேலை செய்யணுமா" என்று கேட்டார்.

நம் மரியாதைக்குரிய எழுத்தாளர் இப்படி பதில் சொன்னார். "அந்த பத்திரிகை குப்பை தான். ஆனா என் படைப்பு குப்பையா, குப்பை இல்லையான்னு மட்டும் பாருங்க" என்றார். என்ன ஒரு ஆணித்தரமான, நேர்மையான பதில். நேர்மைக்கு சொந்தக்காரராக இருப்பின் - அச்சப்பட வேண்டியதில்லையே. இப்படியொரு பதிலை பெற பத்திரிகை நிர்வாகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி பதில் தந்தது நிர்வாகத்திற்கும் தெரிந்தது. பிறகு மதிப்புக்குரிய அந்த எழுத்தாளர் - அங்கிருந்து விலகி விட்டார்.

இப்படிப்பட்ட எழுத்தாளர் பணிபுரிந்த பத்திரிகையில் தான் - சரித்திர கதை என்கிற போர்வையில் சாண்டில்யனை வைத்து ஆபாசங்களை அள்ளி இறைத்தார்கள். ஹேமா ஆனந்தீர்த்தன் என்பவரை வைத்து எழுதப்பட்ட ஆபாச கதைகளை - எண்பதுகளின் மத்தியில், துக்ளகில் துர்வாசர் எனும் எழுத்தாளரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டது. 


"சொல்வதெல்லாம் உண்மையை" எழுத எதற்கு ஒரு எழுத்தாளரை அமர்த்தி - சம்பளமும் தர வேண்டும். உங்களுக்குள்ளேயே இருக்கிறதே ஆயிரம் "சொல்வதெல்லாம் உண்மை" கள்.

No comments:

Post a Comment