Saturday, December 24, 2011

ராஜபாட்டை- மொக்கை அல்ல, படு மொக்கை - திரைவிமர்சனம்

நம்பிக்கையான இயக்குனர் என நம்ம்ம்ம்பி முதல் நாளே படம் பார்க்க போனால் காலை வாரி விட்டு முகத்திலேயே மிதிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. ராஜபாட்டையும் அந்த பாதையில்... 

அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல.. என வித விதமான கதை களனில் கவர்ந்த சுசிந்தரன் முதல் முறையாய் வாங்கியிருக்கும் அடி... படம் பார்க்கும் நமக்கும் பார்த்து முடித்து வெளியே வரும் வரை வலிக்கிறது...

தமிழகத்தில் மோசமான வியாதியாக பரவியிருக்கும் நில அபகரிப்பு பிரச்சனைதான் கதையின் அடிநாதம். நல்ல கருதான். ஆனால் அதை சொல்லி சென்ற விதத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டாமா? ஒரு மாஸ் ஹீரோவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக தினசரிகளை மேலோட்டமாக மேய்ந்து விட்டு குத்து மதிப்பாக படம் எடுத்தால் உருப்படாது என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். 

விக்ரமை இந்த அளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டியதில்லை. அவரது ஹேர் டிசைனருக்கு எதாவது சம்பள பாக்கியா என்ன என்பது தெரியவில்லை. ப்ளீச் செய்கிறேன் பேர்வழி என்று முடிந்தவரை அவரது இமேஜை டேமேஜ் செய்திருக்கிறார். முகத்தில் நன்கு தெரியும் சுருக்கங்களும், அவருக்கான உடை தேர்வும்.... சீயான் இந்த படத்தில் நடித்ததை நினைத்து காலம் பூராவும் கண் கலங்க போகிறார்.

முதற்பாதி மொக்கை என்றால் இரண்டாம் பாதி படு மொக்கை. அழுத்தமில்லாத திரைக்கதையால்... நடந்தால் பாட்டு.. நின்றால் சண்டை என்று டெரர் கும்மி அடித்து பீதியே கிளப்புகிறார்கள்.

தமிழ் நாட்டையே தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்திருக்கும் அரசியல்வாதி வில்லி.. ஒற்றை ஹீரோவை அழிக்க லோடு லோடாக ஆட்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவரும் வந்தவர்களை எல்லாம் மிதி மிதி என மிதித்துக்கொண்டே இருக்கிறார். படம் பார்க்கும் நாம் டயர்டாகி போதும்டா சாமி என சொல்லும் வரைக்கும் மிதித்துக்கொண்டே இருக்கிறார். விடுங்க... நாம் பார்ப்பது தமிழ் சினிமா. உலக சினிமா இல்லை. 

ஹீரோயின்... ஆன்ட்டியா.... இல்லை நல்ல பிகர்தானா என முடிவு செய்வதற்குள் படத்தில் அவரது போர்ஷன் முடிந்து விடுகிறது. இந்த படத்தின் லவ் சீன்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் தேவை இல்லாமல் உங்களை கெட்ட வார்த்தை பேச வைத்த பாவம் எனக்கு வந்து சேரும்.

நல்ல நடிகர்கள்... நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல வசனகர்த்தா, நல்ல இசையமைப்பாளர் என எல்லோரும் பாரபட்சமின்றி வீணடிக்கபட்டிருக்கிறார்கள். லட்டு போன்ற ஒரு குத்து பாடலை.... தலை முடியே பீய்த்துக்கொண்டு அவசரகதியில் ஓடி வர வைக்கும் கேவலமான கிளைமாக்ஸ்க்கு அப்புறம் சொருகிவிட்டிருப்பது இயக்குனருக்கு கற்பனை பஞ்சம் தலை விரித்தாடுவதை சொல்லாமல் சொல்கிறது. லட்டு போன்ற ரெண்டு பிகர்கள்.. அருமையான மெட்டு... வெளிநாட்டு லொக்கேஷன்... என நிலத்தை விற்று.. நகையே விற்று... அதில் செலவு செய்து எடுத்த பாடலை ஆளில்லாத தியேட்டரில் காண நேரும் தயாரிப்பளருக்கு நிச்சயம் ரத்த கண்ணீர் வரும். 

படத்தில் எந்த நல்ல விஷயமுமே இல்லையா என கேட்பவர்களுக்கு... எங்கள் வாத்தியார் சுஜாதா சொல்வார், "ஒரு பியர் அடிப்பதற்கு ஒரு டாஸ்மாக்கையே வாங்க வேண்டுமா" என. அது போலத்தான், அவ்வபோது லேசாக கவரும் விஷயங்களுக்காக மொத்த படத்தையும் பார்ப்பது உங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கான சவால்.

படம் பூராவும்.. விக்ரம் தான் மலை மாடு போல புஜபலத்துடன் இருக்கிறார். கதையோ TB அட்டாக் ஆனா பேஷன்ட் போல எலும்பும் தோலுமாய் பரிதாபமாய் காட்சியளிக்கிறது.


(+) பிளஸ்

இந்த மொக்கை படத்திலும் முழு அர்பணிப்பு காட்டிய விக்ரம். 

(-) மைனஸ்

திரைக்கதை
லாஜிக் ஓட்டைகள்
இயக்கம்
சீட்டை பிராண்ட வைக்கும் இரண்டாம் பாதி. 

VERDICT : கசப்பான மசாலா. 
RATING : 3.4 / 10.0

EXTRA பிட்டுகள் 


இந்த நட்ட நடு ராத்திரியில் (மூன்று மணி) இதை எழுதுவதில் ஒரு சமூகம் சார்ந்த அக்கறை இருக்கிறது. உங்கள் பாக்கட்டில் இருக்கும் நூறு ரூபாய்
அநியாயமாக தொலைந்து போய்விட கூடாது என்கின்ற ஒரு பரிதவிப்பு இருக்கிறது. இது போன்ற மொக்கை மசாலா படங்களை பார்ப்பதற்கு செலவிடும் நேரங்களில் நீங்கள் உபயோகமாய் உங்கள் மனைவிக்கு சமையலில் உதவலாம்.. விகடனில் ராஜு முருகன் எழுதும் "வட்டியும் முதலும்" வாசிக்கலாம். நல்ல இசையே கேட்கலாம். வேறு வேலை எதுவும் இல்லையா.. நிம்மதியாய் தூங்கலாம்.

No comments:

Post a Comment