Saturday, December 24, 2011

அனுமதியின்றி 3ஜி ரோமிங்: ஏர்டெல், ஐடியா, வோடாபோனுக்கு நோட்டீஸ்!

3ஜி ரோமிங் சேவையை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்க 3ஜி ரோமிங் உரிமம் ஒதுக்கப்படாத இடங்களிலும், அச்சேவையை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உரிமங்களை பெறாமலேயே பார்தி, வோடோபோன், ஐடியா உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு 3ஜி மொபைல் சேவையை வழங்கி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த சேவையை நிறுத்துமாறு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்காக அபராத தொகை செலுத்தவும் தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நோட்டீஸ் பார்தி மிட்டலின் பாரதி ஏர்டெல், விட்டோரியா கோலாவ்வின் வோடாபோன், குமாரமங்கலம் பிர்லாவின் ஐடியா, அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன், மற்றும் டாடா போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 67,719 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே 3ஜி ஒப்பந்த சேவையை நிறுத்தி விட்டதாகவும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது. தொலை தொடர்புத்துறையின் உத்தரவினால் 3ஜி சேவையைப் பயன்படுத்தும் ஒருகோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், ஆபரேட்டர்களும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

No comments:

Post a Comment