Thursday, November 24, 2011

கர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்ச்சி ரிப்போர்ட்


தெரிந்த மருத்துவர் ஒருவரை பார்க்கப் போயிருந்தேன்.வழக்கத்துக்கு மாறான கூட்டம்.அவரது துணைவியார் மகப்பேறு மருத்துவர்.அன்று வெளியூர் சென்றுவிட்டதால் பெண்களின் சாதாரண பிரச்சினைகளுக்கும் அவரே சேர்த்து பார்த்துக்கொண்டிருந்தார்.

என்னை பார்த்துவிட்டவர் அழைத்தார்." இவர்களிடம் கொஞ்சம் பேசிப்பார் 'என்றார்.கிராமத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள்.ஒரு இளம்பெண்ணும்,அவரது பெற்றோரும் இருந்தார்கள்.தாய் மட்டும் அதிக பதற்றத்துடன் காணப்பட்டார்.

மருத்துவர் உங்களிடம் பேசச் சொன்னார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன பிரச்சினை?'' என்றேன்.தாய் ஆத்திரத்துடன் பேச ஆரம்பித்தார்.''வாயே திறக்க மாட்டேங்கிறா! இவ யார் தலமேலயாவதுதூங்கும்போது கல்ல தூக்கி போட்டுடுவா! நான் என்ன பாவம் பண்ணேனோ !ஏன் வயித்துல வந்து பொறந்திருக்கு!நாங்க வாழறதா?சாகறதா?எப்படியாவது கலைச்சிட சொல்லுங்க சார்!"
பெண் கர்ப்பமாக இருக்கிறார்.திருமணமாகவில்லை.பதினேழு,பதினெட்டு வயது இருக்கும்.சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள்.கருவை கலைப்பதற்காக வந்திருக்கிறார்கள்.எத்தனை மாதம் தெரியாது.அது ஸ்கேன் செய்து பார்த்துதான் முடிவு செய்யவேண்டியிருக்கும்.பெண் வாயை திறக்க வில்லை.

கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் தெரிந்தால் ஒருவேளை அவருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.சட்ட உதவியை நாடலாம்.ஆனால் அந்த பெண் சொல்லவிரும்பவில்லை.அதிகம் கவலையாக இருந்தது போல் தெரியவில்லை.


பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு நான் பேசிப்ப்பார்த்தேன்."என்னை எதுவும் கேட்கவேண்டாம் .எனக்கு எதுவும் தெரியாது! "என்றார்.'நீங்கள் சொல்லும் தகவல் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் ,வெளியே யாரிடமும் சொல்ல மாட்டோம்.உங்கள் பெற்றோருக்கு கூட சொல்ல மாட்டேன்' என்றேன்.மீண்டும் அவரது பதில் உறுதியாக இருந்தது."எனக்கு தெரியாது"

தோல்வியுடன் மருத்துவரை பார்த்து சொன்னேன்."சார் ,வேலைக்காகவில்லை." புன்னகையுடன் அவர் கூறியது,"அடிக்கடி இப்படி யாராவது வருவார்கள்.இங்கே கருக்கலைப்பு செய்வதில்லை! என்றாலும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இது போன்ற பலரும் வாயைத் திறப்பதில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்."

அவரே அடுத்துக் கூறினார் "இப்படி வந்த ஒரு பெண் எங்களிடம் மட்டும் உண்மையை கூறியபோது அதிர்ந்து போய்விட்டோம்.சமூகம் திருமண உறவை அனுமதிக்காத உறவினர்களால் ஏற்பட்ட கர்ப்பம் அது! இந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலை இருக்கலாம்" என்றார்.கர்ப்பத்துக்கு காரணமானவர்களை திருமணம் செய்துகொள்ள முடியாது.அப்படிப்பட்ட உறவுகள்.

குழந்தைகள் நெருங்கிய உறவினர்கள் தெரிந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவது பல்வேறு ஆய்வுகளில் வெளிவந்த ஒன்றுதான்.கன்னிப் பெண்களுக்கும் இவை இருந்து கொண்டிருக்கிறது.சத்தமில்லாமல் கலைக்கப்பட்டுவிடும்!பெற்றோர்,பெண் மற்றும் அதற்கு காரணமானவன் தவிர சமூகத்துக்கு தெரிவதில்லை.

No comments:

Post a Comment