Sunday, November 20, 2011

தூங்கியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் : பீதியுடன் பயணம் செய்த பயணிகள்

ராசிபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சை, அதன் டிரைவர், தூங்கிக் கொண்டு ஓட்டியதால், பல இடங்களில் பஸ் தாறுமாறாக ஓடியது. அதன் காரணமாக, பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


மேலும், பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிகளை இறக்கியும், ஏற்றியும் சென்ற பஸ், அவ்வப்போது தாறுமாறாக ஓடத்துவங்கியது. டிரைவர் தூக்கத்தில் ஓட்டுகிறாரா, அல்லது போதையில் ஓட்டிச் செல்கிறாரா என தெரியாமல், பயணிகள் பீதியில் உறைந்தனர்.அவ்வப்போது பஸ்சை, சாலையை விட்டு கீழே இறங்குவதும், பின் நேராக ஓட்டுவதுமாக இருந்தார். அதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள், டிரைவரை ஆவேசமாக திட்டினர்.



ராசிபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு, 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (நவ., 18) இரவு 9.30 மணிக்கு, ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சில்( டி.என்-28, 560), 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி பயணம் செய்தனர். டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டிச் சென்றதால், பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

இதுபோல், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பஸ் தாறுமாறாக ஓடியது.இரவு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பஸ் டிரைவரை நம்பியே பயணம் செய்கின்றனர். இந்நிலையில், யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒருசில டிரைவர்கள், இஷ்டம்போல் குடித்துவிட்டும், தூங்கிக்கொண்டும் பஸ்சை இயக்குவதாலேயே, பல விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, "இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களின் டிரைவர்களை, முழு சோதனை செய்த பின்னரே பணியில் ஈடுபடுத்த, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment