Saturday, March 26, 2011

ஜெயலலிதாவின் ஈயடிச்சான் காப்பி தேர்தல் அறிக்கை: - முக அழகிரி கிண்டல்

மதுரை: ஜெயலலிதாவுக்கு சொந்தமாக யோசிக்கும் திறனே கிடையாது. அதனால்தான் அவர் திமுக தேர்தல் அறிக்கையைக் கூட அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல காப்பியடித்துள்ளார் என்றார் மத்திய அமைச்சர் முக அழகிரி.


மதுரையில் மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதா காரில் அமர்ந்தும், பொதுக் கூட்டத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததையும்தான் படிப்பார்.

அதே போல் அவருடைய தேர்தல் அறிக்கையும் அப்படித்தான் உள்ளது. முதல்வர் கருணாநிதியின் அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளார். பரீட்சையில் நன்றாக எழுதும் மாணவனைப் பார்த்து ஈயடிச்சான் காப்பியடிப்பதைப் போலத்தான் இதுவும்.

இதற்கெல்லாம் காரணம் அவருக்கு தோல்வி பயம் தெரிந்து விட்டது. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி சொன்னதை எல்லாம் செய்தார். சொல்லாததையும் செய்தார். 2011-ம் தேர்தல் அறிக்கையிலும் பல திட்டங்களை சொல்லி இருக்கிறார்.

அவை அனைத்தையும் கருணாநிதி செய்வார். இது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க.வின் திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டார். அதே போல் இனிமேலும் ஆட்சிக்கு வந்தால் 2006-ம் ஆண்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவார்.

குறிப்பாக திருமண உதவியாக நாங்கள் ரூ.25 ஆயிரம் தந்து கொண்டு இருக்கிறோம். ரூ.30 ஆயிரம் தருவோம் என அறிவித்துள்ளோம். ஆனால் அவர் அதனை நிறுத்திவிடுவார். அதே போல் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி உள்ளோம்.

அவர் இந்த திட்டத்தையும் மக்களுக்கு கிடைக்காத வண்ணம் செய்து விடுவார்.ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தங்கம் தருவதாக சொல்லி இருக்கிறார்.

உண்மையில் கலைஞர் வசனத்தில் `எங்கள் தங்கம்' படத்தில்தான் அவர் நடித்துள்ளார். மற்றபடி அவருக்கு தங்கத்தை பற்றி எல்லாம் தெரியாது. அவர் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, தங்கம் தரப் போவதுமில்லை, என்றார்

No comments:

Post a Comment