Saturday, March 26, 2011

குமரி முழுவதும் 64 வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல்


குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 64 வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். இந்நிலையில் நேற்று இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத பரவலான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவற்றில் குறிப்பாக ஜாண்ஜேக்கப், விஜயதரணி, ராபர்ட் புரூஸ் ஆகியோர் அடங்குவர். இதைப்போல் கிள்ளியூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் காங்கிரஸ் பிரமுகர் குமாரதாசும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் நாகர்கோவில்
தொகுதி வேட்பாளர் சுரேஷ் தேர்தல் அதிகாரி ராஜேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்குகள் ஏதும் இல்லை. வேட்பாளர் சுரேஷ் காரில் அணிவகுத்து வருவதால் பொதுமக்கள், மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் வந்து மனுதாக்கல் செய்ததாக தெரிவித்தார். அவருடன் பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தங்கவேல், நாகர்கோவில் சட்டமன்ற செயலாளர் மோகனன், மாவட்ட அலுவலக செயலாளர் செல்வமணி, நகர துணை செயலாளர் ரெஜிலின், கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.விளவங்கோடு தொகுதி மா. கம்யூ., வேட்பாளர் லீமாறோஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது பெயரில் 96,195 ரூபாயும், கணவர் சிங்காரன் பெயரில் 51,854 ரூபாயும் அசையும் சொத்து உள்ளது. அசையாசொத்தாக பாகோடு கிராமத்தில் வீடும், 7 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. வழக்குகள் ஏதும் இல்லை. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். 

அவருக்கு 1 கோடியே 49 லட்சத்து 23 ஆயிரம் அசையும் சொத்தும், 5 கோடியே 26 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அசையா சொத்தும் உள்ளது. கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜாண் ஜேக்கப் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு அசையும் சொத்தாக 41 லட்சத்து 211 ரூபாயும்,. மனைவி பெயரில் 16 லட்சமும் உள்ளது. அசையாசொத்தாக அவருக்கு 33 லட்சமும், மனைவி பெயரில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் உள்ளது. கார்லோன் 6 லட்சத்து 42 ஆயிரம் உள்ளது.மாவட்டம் முழுவதும் நேற்று 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment