Tuesday, March 8, 2011

கிரந்தத்தை யுனிகோடில் புகுத்த சில பார்பன பண்டிதர்கள் ஏன் முயல்கிறார்கள்


கிரந்தத்தை யுனிகோடில் புகுத்த சில பார்பன பண்டிதர்கள் ஏன் முயல்கிறார்கள் என்பது அதன் பின்னால் உள்ள வெத்து காரணங்களையும் அலசுகிறது இந்த கட்டுரை
கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
தொகுப்புகள் ... எழுதியது  i Rate This
கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும்
நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த
எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில்
இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே
தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது
.
பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி
தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த
காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை
நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை
மறுக்கவியலாது.
அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே
இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு
முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.
கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?
கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.
1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள்
படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.
2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த
எழுத்துகள் தேவை.
இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும்
நடுநிலையோடு சிந்திக்கலாம்.
சமயச் சார்போடு வாழ்வதற்குக் கிரந்த எழுத்துத் தேவையா?
சமய நூல்களும் கிரந்த எழுத்தும்
கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க
இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ்
எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக்
கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி
சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள்
இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில்
வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால்,
அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே,
பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்;
அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.
சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்
பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை
எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை
ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா:
இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள்
நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த
எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும்
பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.
சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்
வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே
வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும்
வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை
வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல
தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி
என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும்.
ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி
வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை
அல்ல.
தமிழைத் தமிழாக்குவோம்
எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து
வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து
செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது
கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.
தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர்
எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்?
பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?
உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக்
கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே
எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி
இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ
ஒருபோதும் இல்லை.
காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச்
சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது
மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ
மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு
வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள
எவரும் இதனை ஏற்கமாட்டார்.
பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?
தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் ‘டமில்’ (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள்
அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக்
கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப்
பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை ‘அமிரிக்கா’ என்றும் மலீசியா என்றுந்தான்
எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.
எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற
மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில்
ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய)
அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.
அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை.
கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற
எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க
முடியும்.
எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத
முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின்
அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும்
பிடிவாதமும் செய்வது சரியன்று.
வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள்
ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க்
கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும்
போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.
ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி?
தமிழின் கட்டமைப்பு
தமிழ்மொழி மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட மொழி. உயிர், மெய் என அடிப்படை ஒலிகளாக 30 எழுத்துகளையும்
ஓர் ஆய்த எழுத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட செம்மொழி தமிழ். தொல்காப்பியக் காலம் தொட்டு இந்தக்
கட்டமைப்புக் குலைந்துபோகாமல் இருப்பதால்தான் தமிழ் இன்றளவும் தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல்
இருக்கிறது.
உலகின் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒலிகள் ஏறக்குறைய 25 மட்டுமே. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மையான
ஒலித்தொகுதி உண்டு. அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பு ஒலிகள் உள்ளன. ஒரு மொழியில் உள்ள ஒலிகளை வேறொரு
மொழியில் எழுதும்போது அதே ஒலிக்குறிப்போடு எழுத முடியும் என்பது இயலாத ஒன்று. பிறமொழிச் சொல்லுக்கு
மிக நெருக்கமான ஒலியைக் கொண்டுதான் மற்றொரு மொழியில் எழுத வேண்டும். அல்லது மொழியாக்கம் செய்து எழுத
வேண்டும். இந்த விதி எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.
இந்த உண்மையை உணர்ந்ததன் பயனாகத்தான் 3000 ஆண்டுக்கு முன்பே தொல்காப்பியர் வடவெழுத்தையும்
சொற்களையும் விலக்கவேண்டும் என்றார். அவருக்கு முன்னர் தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் தனித்தமிழே
விளங்கியது. பிறகுதான் பிராகிருதம் சமற்கிருதம் முதலிய வடமொழிகள் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஊடுருவின. கி.பி3ஆம் நூற்றாண்டு தொடங்கி 6ஆம் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய நானூறு(400) தமிழுக்கு இருண்ட
காலம் எனலாம். களப்பிரர், பல்லவர், மராட்டியர், மொகலாயர் முதலான அன்னியரின் ஆட்சியில் தமிழ்
சின்னபின்னமாகிப் போனது. அதேபோல், தமிழரிடையே சனாதனம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் ஆகிய
சமயங்கள் செல்வாக்குப் பெற்றதாலும் தமிழில் பிறமொழிக் கலப்புகள் பெருகின.
தமிழில் வடமொழி கலந்தது எப்போது?
வடமொழி பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கிய கி.பி.12ஆம் நூற்றாண்டில் தமிழையும் வடமொழியையும் கலந்து
எழுதும் ‘மணிப்பிரவாள நடை’ உருவானது. அப்போதுதான், வடமொழி ஒலிகளைத் தமிழில் எழுதுவதற்குப் புதிதாக சில
வரிவடிங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக, தமிழ் எழுத்துகளின் அமைப்பிலேயும், இரு தமிழ் எழுத்துகளை
ஒன்றாக இணைத்தும் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வடமொழிச் சொற்களை பெரிய அளவில்
புகுத்தித் தமிழை முடக்க விரும்பிய சிலர் செய்த அயராத முயற்சியின் விளைவாக ‘மணிப்பிரவாள நடை’ பெரும்
செல்வாக்குப் பெற்று வளர்ந்தது. சமற்கிருதச் சொற்களும் கிரந்த எழுத்துகளும் தமிழை இருபுறமும்
நெருக்கி ஒடுக்கி வைத்தன.
இவ்வாறு தமிழில் கிரந்தமும், சமற்கிருதமும் இன்னும் பிற மொழிகளும் கலந்துபோனதால் தமிழ்
தன்நிலைகெட்டுப் போனது. 12ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு நிகழ்ந்த கேட்டினை அதற்குச் சில
நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் முன் அறிவிப்புச் செய்துவிட்டார்.
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
அதாவது வடசொல் கலக்க நேர்ந்தால் அதற்கு ஒரு வரையறை செய்துகொண்டு எழுதவேண்டும் எனத் தொல்காப்பியர்
வலியுறுத்தினார். தொல்காப்பியர் பிறமொழி சொல்லையோ, ஒலியையோ அல்லது எழுத்தையோ தமிழில் கலக்கலாம் என
ஒருபோதும் சொல்லவே இல்லை. தொல்காபியர் கூறிய இலக்கணத்தைக் கடைபிடித்திருந்தாலே போதும், தமிழில் கலந்த
பிறமொழிச் சொற்கள் தமிழ் வடிவத்திலும் தமிழ் ஒலிநயத்துடனும் இருந்திருக்கும். ஆனால், தமிழின்
தனித்தன்மையும் தூய்வடிவமும் பேணப்படாமல் போனதால் தமிழுக்குள் கணக்கிலடங்காமல் பிறமொழிச் சொற்கள்
புகுந்துகொண்டன.
வடமொழிக் கலப்பால் விளைந்த கேடுகள்
இதன் விளைவுகள் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் மிகப்பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டன. வடமொழி
பெருவாரியாகக் கலந்ததால் தமிழானது கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல்வேறு மொழிகளாகச் சிதைந்து
போனது. தமிழராக இருந்தவர்கள் பல்வேறு இனத்தவராக மாறிப்போனது மட்டுமன்று பகைவராகியும் போயினர்.
அதனினும் கொடுமை என்னவெனில், தமிழிலிருந்து பிரிந்த மொழிகளின் இலக்கிய வரலாறுகளை எழுதும்போது அவை
தமிழுக்கும் முந்தியவை எனக் காட்டுவதுதான்.
வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் பரந்து விரிந்து இருந்த தமிழ்நாட்டு எல்லை சுருங்கிப்போனதும்
தனித்தனி நாடுகளாகப் பிரிந்துபோனதும் மொழிக்கலப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அடுத்து, தமிழில் இருந்த
பல்லாயிரக்கணக்கான சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டன. தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளில் குடியேறியத்
தமிழர்கள் தமிழின் அடையாளத்தை இழந்து வேற்று இனதாராகி விட்டனர். பீசித் தீவு, மொரிசியசு, இந்தோனீசியா
முதலான நாடுகளில் குடியேறிய தமிழர்கள் இன்று தமிழராக இல்லை. நம் மலேசியாவில் சில நூற்றாண்டுகளுக்கு
முன் குடியேறிய மலாக்கா செட்டிகள் இன்று தமிழராக இல்லை. மொழியில் ஏற்படும் கலப்பினால் தமிழுக்கும்
தமிழர்க்கும் நேர்ந்துள்ள கொடுமைகள் இப்படி பற்பல உள்ளன.
நல்லதமிழ்ப் பணியில் நல்லறிஞர்கள்
இந்த வரலாறுகளைச் சிறிதும் கவனிக்காமல் தமிழ்மொழியை வளர்ப்பதற்கு தமிழ் முன்னோர்கள் கிரந்தத்தையும்
சமற்கிருதத்தையும் பிற ஒலிகளையும் மொழிகளையும் தமிழுக்குள் நுழைத்தனர் என்பது வடிக்கட்டிய
பொய்யுரையாகும். தமிழின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பிறமொழி கலப்புகள் எந்த விதத்திலும்
துணைநில்லா. தமிழ் தமிழாக இருப்பதே சாலச் சிறந்தது என்பதை உணர்ந்துதான் பரிதிமாற் கலைஞர், மறைமலை
அடிகளார், திரு.வி.க, அறிஞர் அண்ணா, பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் தனித்தமிழ்
என்ற பெயரில் நல்லதமிழை வளர்த்தனர். அவர்களின் அடியொற்றி இன்றும் தமிழகத்திலும் தமிழ்நாட்டுக்கு
வெளியேயும் நல்லதமிழை முன்னெடுக்கும் பணிகள் முனைப்பாக நடைபெற்று வருகின்றன.
தனித்தமிழ் என்பது தனியொரு மொழியன்று. எந்தவொரு மொழிக்கலப்பும் இல்லாமல் முழுவதும் தமிழ்
எழுத்துகளும் தமிழ்ச் சொற்களும் கொண்டு தமிழ் இலக்கண மரபுக்குள் எழுதுவதே தனித்தமிழாகும். ஆனால்,
இந்தத் தனித்தமிழ் ஏதோ புலவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் மட்டுமே உரியது; புரிந்துகொள்ள கடினமானது;
கரடு முரடானது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, படித்த மேதைகளும் பேராசிரியர்களும் புழுகி
வருகின்றனர். தமிழில் எதுவெல்லாம் இவர்களுக்குப் புரிகிறதோ அது தமிழாம் புரியாவிட்டால் உடனே
தனித்தமிழ் என்றும் பண்டிதத் தமிழ் என்றும் கூறி தானும் மருண்டு பிறரையும் மருட்டி வருகின்றனர்.
பிறமொழி துணையின்றித் தமிழ் வளருமா?
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழில் இருந்து பிறமொழிச் சொற்கள் பேரளவில் நீக்கப்பட்டுவிட்டன.
தமிழைத் தூயதமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சி பெருமளவில் நடைபெற்று வருகின்றது.
மனநிறைவளிக்கும் வகையில் வெற்றியும் கிடைத்திருக்கின்றது. நல்லதமிழ் வளர்ச்சியில் சில செய்தி
இதழ்கள், நூலாசிரியர்கள், மக்கள் தொலைக்காட்சி போன்ற மின்னியல் ஊடகங்கள், கணினித் துறையாளர்கள் என
பல்வேறு தரப்பினரும் மிக ஆர்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் தமிழறிஞர் மணவை முஸ்தாப்பா உருவாக்கியுள்ள 6 இலக்க(இலட்சம்) தமிழ்க் கலைச்சொற்கள்
நல்லதமிழாக உள்ளன. சொல்லாய்வு அறிஞர் ப.அருளி தலைமையில் 135 அறிவியல் துறைகளுக்காக உருவாகியுள்ள
அருங்கலைச்சொல் பேரகரமுதலி பிறமொழிக் கலப்பின்றி வெளிவந்துள்ளது. தமிழ்க் கணினி இணைய வல்லுநர்கள்
வியத்தகு வகையில் புதுப்புது கலைச்சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர்.
தமிழ்நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் நாம் பயன்படுத்தும் தமிழ் மிகக் தூய்மையாக உள்ளது. அன்னிய மொழி
கலக்காமல் தமிழ் வெற்றிபெற்று வருவதற்கு இப்படிப்பட்ட ஆக்கப்பணிகள் பலவற்றைச் சான்றுகளாகக்
குறிப்பிடலாம்.
தமிழ் தமிழாக இருக்க பிறமொழி எழுத்துகளையும் சொற்களையும் அறவே நீக்கிவிட வேண்டும். பிறமொழிச்
சொல்லைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய இக்கட்டு நேர்ந்தாலோ அல்லது மொழிபெயர்க்க இயலாமல் போனாலோ தமிழ்
மரபுக்கு ஏற்ப திரித்து எழுத வேண்டும். சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகளை எழுத நேர்ந்தால்
முதலெழுத்து மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே தமிழில் இருக்கும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். மாறாக,
வலிந்து பிறமொழிச் சொற்களைத் திணிக்கக் கூடாது. இவ்வாறு சில எளிய வழிகளைப் பேணிவந்தால் தமிழ் தமிழாகவே
இருக்கும்.
முடிந்த முடிபு
மற்றைய மொழிகளைப் போல் தமிழ் பயனீட்டாளர் மொழியன்று. பயனீட்டாளர் மொழிதான் பிறமொழிகளிலிருந்து
கடன்பெற்று பிழைக்க வேண்டும். ஆனால், தமிழோ உற்பத்தி மொழி. எந்தச் சூழலிலும் புதுப்புது சொற்களைப்
புனைவதற்கு ஏற்ற மொழி. எனவே, கிரந்தம், சமற்கிருதம், பிராகிருதம், மணிப்பிரவாளம் மட்டுமல்ல ஆங்கிலம்
முதலான வேறு எந்தவொரு மொழியின் தயவும் துணையும் தமிழுக்குத் தேவையே இல்லை. தமிழ் தமிழாக இருப்பதற்கு
தமிழர்கள் தமிழராக இருந்து உரிய பணிகளை முன்னெடுப்பதே முக்கியம்.

No comments:

Post a Comment