Saturday, April 23, 2011

இன்டர்வியூ போகாமலே வேலை?


”சுரேஷ் தன் லேப் டாப்பைத் திறந்து, மெயிலில் இன்-பாக்ஸை ஓபன் பண்ணிய அடுத்த நொடியில் பிரமித்துப் போகிறான். காரணம், அமெரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற ஐ.டி. கம்பெனியில் இருந்து அவனுக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கிறது.

சந்தோஷத்துடன் விஷயத்தை அம்மா, அப்பாவிடம் சொல்கிறான். அப்பா, உற்சாகமாகி மகன் அமெரிக்காவுக்கு போவதற்கு பாஸ்போர்ட் எடுப்பது, விசா வாங்குவது பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.

இதைக் கேள்விப்பட்ட அப்பாவின் நண்பர் ஒருவர், ‘ஏம்ப்பா… எப்ப நீ அந்த கம்பெனியில இன்டர்வியூ அட்டண்ட் பண்ணினே?’ எனக் கேட்க… அப்போதுதான் உறைக்கிறது சுரேஷ§க்கு… ‘இன்டர்வியூ அட்டண்ட் பண்ணாமலே எப்படி இது?!’ என்று! மெயிலை முழுமையாகப் படித்த பின்புதான் புரிந்தது அது ஏமாற்று வேலை என்பது!”
- இன்டெர்நெட் வழியாக ஏமாற்றும் வித்தைகள் பற்றி, விறுவிறுப்பாக திரைக்கதை வசனத்தோடு சொன்னார் ‘கெம்பா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன்.


”இதைக்கேட்டதுமே… இன்டெர்நெட்டில் வேலை தேடுவது ஆபத்தானது என்று அச்சப்பட்டு பதுங்கிவிடக்கூடாது. காரணம், இன்றைய உலகில் இன்டர்நெட் இல்லாமல் இயங்கவே முடியாது என்ற சூழல்தான் நிலவுகிறது. அதுமட்டுமல்ல… இன்டர்நெட்டில்தான் ஏமாற வேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றப்படலாம் என்பதும் உண்மைதானே! எனவே, ஏமாறாமல் இருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
‘நீங்க தமிழ்லயிருந்து இங்கிலீஷ§க்கு நல்லா டிரான்ஸ்லேட் பண்ணுவீங்களா? அப்ப எங்க வெப் அட்ரஸ்ல ரெஜிஸ்டர் பண்ணுங்க’; ‘வீட்டுல இருந்தபடியே ஒரு நாளைக்கு 100 டாலர் சம்பாதிக்கணுமா..? உடனே இந்த லிங்க் அட்ரஸ்ஸ கிளிக் பண்ணுங்க’ என்று ஆரம்பித்து, இரண்டு ஸ்டெப் போனதும், மூன்றாவது ஸ்டெப்பாக ’40 டாலரை முன் பணமா செலுத்துங்க. உங்க கிரெடிட் கார்டு நம்பரை ரெஜிஸ்டர் பண்ணுங்க’ என்று அந்த வெப்சைட் கேட்டால்… உடனே அலர்ட் ஆகிவிட வேண்டும். வேலை கொடுக்கும் எந்த ஒரிஜினல் நிறுவனங்களும் நம்மிடம் இருந்து முன்பணம் கட்ட சொல்ல மாட்டார்கள்!” என்று தெளிவு படுத்தியவர்,
”அதேபோல் ‘காக்னிசென்ட்’ நிறுவனத்தில் ‘டொமஸ்டிக் காலர்’ வேலைக்கு 400-500 ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஒரு வெப்சைட்டில் விளம்பரம் வந்தால்… அது வடிகட்டின பொய்; ஏமாற்றுத் தந்திரம். அம்மாதிரியான பெரிய நிறுவனங்கள் மிடில் லெவலில் உள்ள வேலைகளுக்கு வெப்சைட்டில் விளம்பரம் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்!” என்று எச்சரித்தார்.
நிறைவாக, ”வேலை தேடுகிறேன் என்ற வேகத்தில் கிடைக்கிற அத்தனை ஜாப்-போர்ட்டல்களிலும் பயோடேட்டாவை போஸ்ட் செய்தால், அதை இன்னொரு ஏமாற்றுக் கம்பெனி கையில் எடுத்து, நீங்கள் அவர்களிடம் ரெஜிஸ்டர் செய்தது போல் மிஸ்யூஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் ரெஜிஸ்டர் செய்த போர்ட்டலில் அல்லாமல் வேறு யாரிடம் இருந்து ‘உங்களுக்கு வேலை தயார்’ என்று மெயில் வந்தாலும் அலட்சியம் செய்துவிடுங்கள்!” என்றார் கார்த்திகேயன் அக்கறையோடு!
வேலை தேடும் ஆர்வத்தில் ஹைடெக்காக ஏமாறாமல் இருக்க வேண்டியதும் முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

No comments:

Post a Comment