Tuesday, December 20, 2011

கணவன்மார்களே! கண்கலங்காதீர்கள்.....

ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி, மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே…. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் ஏற்பட நேரிடுகிறது
ஆகையால் மணவாழ்க்கையில் வாழும் கணவன்மார்களுக்கு சில நல் வழிகாட்டல்கள்:

1. மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள். அது நற்செயல்(சதகா) ஆகும்.

2. வீட்டினுள் நுழையும் போது "ஸலாம்" சொல்ல மறந்து விட வேண்டாம். "ஸலாம்" சொல்வது "நபிமொழி" மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

3.) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம். அதன் தீய விளைவுகளே அதிகமானது.

4. எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

5. உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும் பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

6. தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

7. மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

8. நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

10. அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

11. பிள்ளைகளை பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள். சிலர் பிள்ளை பெறும் வரை தான் நமது கடமை, அதன் பின் மனைவி தான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12. இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

13. அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால், வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14. குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15. நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)

16. குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.

17. திரும்பி வரும் பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18. திருமணம் முடித்த பின் தனது மனைவியை "அடிமை" என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

19. எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

20. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

21. அழகாக காட்சியளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

22. மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்து விடக் கூடியது.

23. வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.

24. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன.

25. மனைவியின் குடும்பத்தார்களை பற்றி மனைவி இருக்கும் போது குறை பேச வேண்டாம்...

நபியவர்கள் நவின்றார்கள்:
பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment