Monday, December 5, 2011

பனி காலப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்


காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி மருத்துவர்கள் விளக்குகின்றனர். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அதற்கு காரணம் அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான்.

இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும்.

ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும். பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது.

இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்படுத்தாமல் தலைவலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர்களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.

பாதுகாப்பு முறை: சளி பிடித்திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும்.

மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.

காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment