Friday, December 2, 2011

குற்றமற்றவர் என நிரூபிப்பேன்: சென்னை திரும்பும் கனிமொழி பேட்டி

: "2ஜி ஸ்பெக்டரம் வழக்கில், நான் குற்றமற்றவர் என நிரூபிப்பேன்," என்றார் திமுக எம்.பி. கனிமொழி. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். 

டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு திரும்புவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஜாமீன் கிடைத்திருப்பது முதல்படி. ஆனால், ஜாமீனில் செல்வதை விட, இந்த வழக்கில் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டுச் செல்வதையே முக்கியமானதாக கருதுகிறேன்," என்றார் கனிமொழி.

திமுக எம்.பி. கனிமொழி மதியம் 1 மணியளவில் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவரை விமான நிலையத்தில், அவருடைய தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி வரவேற்பார் எனத் தெரிகிறது. 

சென்னை வரும் கனிமொழிக்குத் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்கக் காத்திருக்கின்றனர். 

கனிமொழியின் குடும்பத்தாரும், திமுகவின் முன்னாள் அமைச்சர்களும் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்கத் திட்டமிட்டுள்ளனர். 

திமுக மகளிரணியினர் கனிமொழியை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து அறிவாலயத்துக்கு வந்து, அங்கிருந்து வீட்டுக்குச் செல்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வரையில் கனிமொழியை வரவேற்பதற்கான போஸ்டர்கள், பேனர்கள் சாலையில் இரு மருங்கிலும் வைக்கப்பட்டுள்ளன.

"இனி நீ... பூங்கொடி அல்ல; போர்க்கொடி", "பொறுத்தார் பூமியாள்வார்", "ஏழைகளின் தோழி," "கழகத்தின் தியாகமே", குடும்ப விளக்கே", 'சூரியக் கதிரே" என்றெல்லாம் வாசகம் பொறிக்கப்பட்ட பேனர்கள் சாலையில் நிரம்பி வழிகின்றன.

No comments:

Post a Comment