Friday, December 16, 2011

எல்லா ஆண்களும் ஏமாளிகள் அல்ல

ஆஸ்திரேலிய அணியின் அண்மைய வெற்றியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; இன்னும் ஐந்துபோட்டிகள் மீதமிருக்கிறது என்பதைத் தவிர. வழமை போல் இல்லாமல் மிடில் ஆர்டர் பாட்ஸ்மான்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதனை சரிவர உபயோகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்தில் ரிக்கி பான்டிங் விளையாட வாய்ப்புக்கள் உண்டு. நானூறுக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்தபடி நான் காத்திருக்கிறேன்.


கர்நாடகாவில் நடக்கும் குழப்பங்களால் பெங்களூருவின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. அலெக்ஸ் பாண்டியன் சொல்லியிருந்ததைப் போல் நான் அவ்வளவு ஓசூர் - பெங்களூர் ரோட்டை உபயோகிக்க மாட்டேன் என்பதால் அது தெரியாது. ஆனால் 'நம்ம மெட்ரோ'விற்காக மகாத்மா காந்தி ரோட்டை கந்தர கோலம் செய்திருக்கிறார்கள். பெங்களூரு டிராஃபிக் ஏற்கனவே ரொம்பவும் பிரசித்தம் இதில் இது வேறு.

=

காந்தியைப் பற்றிய கவியரங்கம் பார்த்தேன்(indeed கேட்டேன்) கலைஞர் டீவியில். பா.விஜய் மக்களைக் கவரும் படி கவிதைப் படிக்கிறார். 'காந்தி கடைசியா சொன்னது ஹே ராம், கலைஞர் முடிவாய்ச் சொன்னது No ராம்' என்று சொல்ல கரகோஷம் வானைப் பிழந்தது(கிளிஷே)' வாலி வராதது எனக்கு வருத்தமே வந்திருந்தால் நான் ரொம்பவும் ரசித்திருப்பேன். காந்தியைப் பற்றியாவது பாடியிருக்கலாம் என்றாலும் அழைத்திருக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

=

கன்னட ஹீரோ, கன்னட(?) ஹீரோயின், கன்னட வில்லன், கன்னட தயாரிப்பாளர் சேர்ந்து ஒரு தமிழ்ப்படமாம். தேவுடா தேவுடா ரொம்ப நாட்களாக தியேட்டர் சென்று தமிழ்ப்படம் பார்க்காததால் வேறு வழியில்லாமல் 'மலைக்கோட்டை'க்குச் சென்றிருந்தேன். விஷாலின் ஆக்ஷன் காட்சிகள் பார்க்கும் படியிருந்தன; அதே போல் ஆஷிஷ் வித்யார்த்தி/ஊர்வசியின் காதல் காட்சிகள்(ஊர்வசி வித்யார்த்தியின் உறவு முறை எனக்குப் புரியலை) மற்றபடிக்கு நிறைய காட்சிகளின் landscape களில் மலைக்கோட்டை தெரிகிறது. பொன்னம்பலத்தை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். மற்றபடிக்கு படம் பக்வாஸ் தான். ப்ரியாமணி ஆம்பளை மாதிரி இருக்கிறார்(இது சன்மியூஸிக்கில் அவருடைய உரையாடலுக்கு பிறகான முடிவு அல்ல) அவருடைய மேக் அப்பும், ட்ரெஸ்ஸிக்கும் கேவலமாயிருக்கு.

=

பொல்லாதவன் படத்தில் 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடல் கேட்கக்கூடியதாய் இருக்கிறது.

=

ராயல் ஆர்சிட்டின் 'டைகர் ட்ரையல்' உணவகத்தின் பஃபே நன்றாகயிருக்கிறது. புதன் கிழமைகளில் மதிய உணவிற்கு பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் வழக்கம் போல் இந்த முறை இந்த ஓட்டலுக்குச் சென்றோம். முந்தைய வாரம் சென்ற 'இந்திரா நகர்' ன் 'ரொமாலி வித் அ வியூ' வை விட வெரைட்டிகளிலும் சரி, ருசியிலும் சரி நன்றாக இருந்தது. அதைப்போல் விலையும் குறைவே.

ரொமாலி வித் அ வியூ - 245 ரூபாய்
ராயல் ஆர்சிட் 'டைகர் ட்ரையல்' - 170 ரூபாய்.

இனி ஒவ்வொரு புதன்கிழமை மட்டும் பதிவெழுத உத்தேசித்திருக்கிறேன். வேறென்ன தூக்கத்தை கட்டுப்படுத்தத்தான் - பஃபே சாப்பிட்டுவிட்டு வந்து வேலை வேறு செய்யமுடியுமா என்ன?(பஃபே பற்றி செல்லா எழுதியகவிதை(தானே?) இணைப்பாக!, பஃபே பத்தி எழுதியிருக்காருப்பா தேடிப்பாருங்க...)

=

இது நான் சமீபத்தில் வரைந்த இன்னொரு படம் - பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக்கவும்.


=

ஒரு அகநானூற்றுப் பாடலும் அதற்கான விளக்கமும்.

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள், 
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல, 
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக், 
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற 
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் 
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல், 
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்- 

முளிந்த ஓமை முதையலம் காட்டுப், 
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி, 
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப, 
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன், 
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி, 
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல், 
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர, 
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம் 
இறப்ப எண்ணுதிர் ஆயின்- 'அறத்தாறு 
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி 
அன்ன ஆக என்னுநள் போல, 

முன்னம் காட்டி, முகத்தின் உரையா 
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி 
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, 

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் 
தூநீர் பயந்த துணையமை பிணையல் 
மோயினள் உயிர்த்த காலை, மாமலர் 
மணிஉரு இழந்த அணியழி தோற்றம் 
கண்டே கடிந்தனம், செலவே-ஒண்டொடி 
உழையம் ஆகவும் இனைவோள் 
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே! 

- எழுதியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ 

ஆனால் ஆச்சர்யமாக இருக்கிறது அகநானூற்றுப் புலவர்கள் எவ்வளவு ரசித்து ரசித்து இந்தக் கவிதைகளை எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ;). அந்தப் பாடலுக்கு சுஜாதா ஐயா கொடுத்த விளக்கம்.(போன பதிவில் கொடுத்த டிஸ்க்ளெம்பர் இந்தப் பதிவுக்கும் ஒத்து வரும்.)

ஆறுதல் கூறுவதையும் பொறுக்காது, மாறுபட்ட முகமுடையவள் 
கூப்பிட்டாலும் கேளாதது போல் இருப்பாள். தன்னந்தனிபோல் ஆனாள். மெல்லமெல்ல 
அழகுமிகுந்த சிவந்த பாதங்கள் நிலத்தில் பதிய 
அருகில் வந்து கூர்மையான பற்கள் தெரிய 
வெறிதே போலிப் புன்முறுவல் பூக்கிறாள். 

பிரிந்து செல்வதை நான் உணர்வதற்குள்ளாகவே, 
ஒளிவீசும் நெற்றியுடையவள் தான்உணர்ந்து 
பிரியும் செயலைப் பற்றிய நினைவில் துயரடைகிறாள். 

பட்டுப்போன 'ஓமை' மரங்கள் உள்ள பழைய கானகத்தில் 
பளிங்கு போன்ற நெல்லிக் காய்கள் 
வட்டாடும் சிறுவர்கள் சேர்த்துவைத்ததுபோல் உதிர்ந்துகிடக்கும்! 
கதிரவன் எரிக்கும் மலைச்சாரல் அது. 

தீட்டியது போன்ற கூர்மையான முனையை உடைய 
கற்கள் விரல் நுனிகளைச் சிதைக்கும் பாதை அது. 
பரல்கள் தவிர வேறு தாவரமேதும் இல்லாத கானகம். 
அதைக் கடந்து செல்ல எண்ணுவீரானால்' - அது 
அறமல்ல' என்று சொல்லப்படும் பழமொழி 
வெறும் பேச்சுத்தான் என்பவள் போல 
குறிப்புக் காட்டி முகத்தாலும் தெரிவித்தாள். 
அதை மட்டுமே எண்ணிய ஓவியம் போல் இருந்தாள். 
கண்விழிகளைத் திரையிட்ட கண்ணீரால் பார்த்தாள். 

உடலோடு அணைத்த புதல்வனது தலையில் 
பனிநீர் சொட்டச் சூடிய பூச்சரத்தை 
முகர்ந்து பெருமூச்சு விட்டாள், அப்போது பெரிய பூக்கள் 
அழகிய உருவை இழந்து பொலிவற்று வாடின 

அதுகண்டு, பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன். 
இப்போதே இப்படி இருப்பவள் 
பிரிந்து சென்றால் பிழைக்க மாட்டாள்.

=

கடைசியாய் தலைப்பிற்கு; சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது அதில் ஒரு காதலனின் காரில் ஏறிக்கொண்டு காதலியை வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் மறிக்கும் காதலியின் தந்தை காரைச் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு கடைசியில் உள்ளே உட்கார்ந்திருக்கும் தன் மகளைக் கூட கவனிக்காமல் 'குட் செலக்ஷன்' என்று சொல்வது போல் அமைத்திருந்தார்கள். ஜெஸிலாவைப் போல் எனக்கும் இந்தத் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் இல்லையா அப்படியெல்லாம் எழுதக்கூடாது.

No comments:

Post a Comment