Friday, December 16, 2011

கருத்தடை..ஒரு விரிவான பார்வை

எதிர்பாராத கர்ப்பம், கருக்கலைப்பு என்றெல்லாம் கஷ்டப்படாமல் இல்லத்-தரசிகள் நிம்மதியான வாழ்க்கை வாழ, கருத்தடை பற்றிய விழிப்பு உணர்வு அவசியம். 
ஆண்கள் பயன்படுத்தக்கூடிய காண்டம் (condoms) வகைகள், (பெண்களுக்கான காண்டம் இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அது நடைமுறையில் இல்லை) அவசர கால கருத்தடை மாத்திரைகள் (emergency contraceptive pills), கருப்பைக்குள் வைக்கிற கருத்தடை சாதனங்-களான லூப், காப்பர்-டி மற்றும் கருப்பையில் வைக்கக் கூடிய 'லெவொநர்ஜெஸ்ட்ரல்' (Levonorgestrel) சாதனம்.. என தற்போது நிறைய கருத்தடை சாதனங்கள் இருக்கின்றன.

லூப்'-ஐ மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். 

கருப்பையில் வைக்கக்கூடிய லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதனமும் காப்பர் - டி போன்ற அமைப்போடுதான் இருக்கும். ஆனால், இதில் காப்பருக்கு பதிலாக கருத்தடை மாத்திரையை வைத்திருப்பார்கள். காப்பர் சிலருக்கு அலர்ஜி ஆகும். இதைப் பொருத்திக் கொள்வதால் மாதவிலக்கின்போது மட்டும் அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளை படுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். 

ஆனால், கருப்பையில் வைக்கக்கூடிய இந்த லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதனத்தில், காப்பருக்குப் பதில் லெவொநர்ஜெஸ்ட்ரல் மாத்திரை வைக்கப்பட்டிருப்பதால், இதுபோன்ற எந்த பக்க விளைவுகளையும் இந்த மாத்திரை ஏற்படுத்துவதில்லை. இந்த மாத்திரை, விந்தணு கருப்பைக்குள் நுழைவதையும் ஐந்து வருடம் வரை தடுக்கிறது. 

காப்பர்-டி பொருத்திக் கொண்டவர்கள் மூன்று வருடங்களுக்குப் பிறகும், லெவொநர்ஜெஸ்ட்ரல் மாத்திரை பொருத்திக் கொண்டவர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று மாற்று சாதனத்தை பொருத்திக் கொள்ள வேண்டும்.. இல்லையென்றால், அந்த சாதனத்தை கருப்பைக்குள் இருந்து நீக்கி விட வேண்டும். 

இப்படிச் செய்யாமல் விட்டால், நீண்ட நாட்கள் சாதனம் ஒரே இடத்தில் இருந்து இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதோடு, சாதனம் தன் சக்தியை இழந்து விடுவதால் மீண்டும் கருத்தரிக்கவும் வாய்ப்புண்டு. அதிலும் இந்தக் கருத்தரிப்பு கருப்பையில் நிகழாமல், கருப்பை குழாய் போன்ற இடங்களில் நிகழ்ந்து (ectopic pregnancy), இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவசியம் மருத்துவரிடம் சென்று உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்

எக்காரணம் கொண்டும் அவசர கால கருத்தடை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது. காரணம், அந்த மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

இவை தவிர, ஸ்பெர்மிஸைட்ஸ் (spermicides) எனப்படும் ஜெல் வகைகளும் உண்டு. இவற்றை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் உபயோகிக்கலாம். இவை, உள்ளே செல்லும் விந்தணுக்களின் உயிர்ப்புத் தன்மையை அழித்து விடும் சக்தி படைத்தவை.

கருத்தடை மாத்திரைகளை (oral contraceptive pills) உட்கொள்பவர்கள், அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இவை கர்ப்பவாயில் சுரக்கிற மியூக்கஸ் (mucous) என்கிற திரவத்தின் சுரப்பை அடர்த்தியாக்குவதால், விந்துவினால் நீந்தி உள்ளே செல்ல இயலாது. எனவே கரு உருவாகாது. 

எத்தனை வருடங்கள் கரு உருவாகக் கூடாது என்று நினைக்கிறார்களோ அத்தனை வருடங்கள் தினமும் தவறாமல் இந்தக் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் விந்தணுவை கருப்பைக்குள் நுழைய விடாமல் தடுப்பதோடு, சினைமுட்டை உருவாக்கத்தையும் தடுக்கிறது. எனவே இரண்டு விதங்களில் கரு உருவாவது தடுக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து சில நாட்களே ஆன அம்மாக்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்த கருத்தடை முறைதான். தாய்ப்பால் கொடுக்கும்போது பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன், சினைப்பையில் (ovary) கருமுட்டைகள் உருவாகாமல் தடுக்கிறது. 

கரு உருவாகக் காரணமாக இருக்கும் இந்த ஹார்மோன் தாய்ப்பாலை சுரக்கச் செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால், அந்த சமயத்தில் கருமுட்டை உருவாக மிகவும் குறைவான வாய்ப்பே இருக்கிறது.

இவை தவிர இயற்கையான கருத்தடை முறையும் உண்டு. மாதவிடாய் ஆரம்பித்த மூன்றாவது நாளில் இருந்து பத்தாவது நாளுக்குள்ளும், பிறகு இருபதாவது நாளில் இருந்து அடுத்த மாதவிடாய் வருகிற நாள் வரையும் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். இந்த சமயங்களில் கரு உருவாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

No comments:

Post a Comment