Saturday, December 10, 2011

""ஜெ''வை மிரட்டியது யார்?

கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையில் ஜெ’ கூட்டத்தைக் கூட்ட இருக்கும் நிலையில்... ஜெ’வுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங்கள்... பரபரப்புச் சூறாவளியை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

"மதுரைக் கூட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். இல்லையெனில் ஜெயலலிதாவும் அவரது கூட்டத்தினரும் கொடூரமாக குண்டுவைத்துக் கொல்லப்படுவார்கள். இதை நேரடியாக ஒளிபரப்ப மதுரைக்கு வரவும்'’-இந்த ரீதியில் கடந்த 28-ந் தேதி சென்னையில் இருக்கும் ஜெயா டி.வி அலுவலகத்துக்குக் கடிதம்வர... ர.ர.க்கள் மத்தியில் பதட்டம் தொற்றிக்கொண்டது. இந்தக் கடிதம் அறிவொளி மதி என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தது. அடுத்தடுத்து இதேபோல் வைகைப்புயல் பாலு என்ற பெயரிலும் மதுரை 70-வது வட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி பெயரிலும் வர... பிரதமர் வரை புகாரை நீட்டியது அ.தி.மு.க..

இதனால் பரபரப்பாகக் களமிறங்கிய காக்கிகள் அறிவொளி மதி, வைகைப்புயல் பாலு ஆகிய பெயர்கள் டுபாக்கூர் என்பதைக் கண்டுபிடித்தனர். அடுத்து தி.மு.க. இளைஞரணி முத்துப்பாண்டியை அவர்கள் விசாரணை வளையத்துக்குள் அள்ளிக்கொண்டுவர...’""யாராவது மிரட்டல் கடிதத்தை தன் பெயரில் எழுதுவாங்களா? என்னை மாட்டவைக்க நடக்கும் சதி இது. அதோடு எழுதப் படிக்கவே தெரியாத நான் எப்படி கடிதம் எழுதுவேன்?''’என்றார் பரிதாபமாக முத்துப்பாண்டி. எனவே அவரை அனுப்பிவிட்ட னர். இந்த நிலையில்... ஒரு கும்பல் முத்துப்பாண்டியைக் கடுமையாகத் தாக்க... தற்போது மதுரை கென்னட் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருக்கிறார் முத்துப்பாண்டி. இது மதுரை உ.பி.க்கள் தரப்பை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் இருந்த முத்துப்பாண்டி ""அன்னைக்கு நான் உசிலம்பட்டியில் நடந்த என் உறவினர் வீட்டு கிடாவெட்டுக்குப் போயிருந்தேன். அப்ப... என் நண்பர்கள் சிலர் போன்ல வந்து... "உன் பெயர்ல ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் எழுதப்பட்டதா பேப்பர்ல போட்டிருக் காங்க'ன்னு சொன்னாங்க. இதைக்கேட்ட தும் அதிர்ந்துபோயிட்டேன். உடனே மதுரை துணை கமிஷனர் ராஜேந் திரனிடம் போய்... "இந்த மிரட்டல் கடிதத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. முன்னாள் முதல்வரான ஜெவை.. சாதாரண நிலையில் இருக்கும் நான் மிரட்டவேண்டிய அவசியமும் இல்லை. இது என் பெயரையும் எங்கக் கட்சிப் பெயரையும் கெடுக்க உருவாக்கப்பட்ட சதி. இந்தக் கடிதத்தை என் பெயரில் அனுப்பிய வர் இப்ப அ.தி.மு.க. வில் இருக்கும் என் உறவினர் ஒருத்தராத்தான் இருக்கும்'னு விளக்கத்தைக் கொடுத்துட்டு வந்தேன்''’என்றார் நம்மிடம்.

""சரி... அந்தக் கடிதத்தை எழுதிய உங்க உறவினர் யார்?''’ என்றோம்.

முத்துப்பாண்டியோ... ""வேற யாரு? அ.தி.மு.க.வில் இருக்கும் என் உறவினர் பசும்பொன் பாண்டியன் தான். முதல்ல தி.மு.க.வில்தான் எங்களோட இருந்தார். அப்புறம் ம.தி.மு.க.வுக்குத் தாவி.. அங்கிருந்து அ.தி.மு.க.வில் ஐக்கியமாயிட்டார். இப்ப அண்ணா தொழிற்சங்கத்தில் மாநிலப் பொறுப்பை அங்க வாங்கி யிருக்கார். அவர் கட்சி மாறும்போதே என்னை கூப்பிட்டார் நான் போகலை. அப்ப கோபமான அவர்... "என் பேச்சைக் கேட்காத உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன். எந்த வழியிலாவது பழிவாங்கு வேன்'னு சொன்னார். சமீபத்திலும் இப்படி மிரட்டினார். அவருக்கு தி.மு.க.வில் இருக்கும்போதே மொட்டைப் பெட்டிஷன் போடறது வழக்கம். பல பெண்களுக்குப் போட்டிருக்கார். அதனால் அடிச்சிச் சொல்றேன். அவர்தான் என்னை வம்பில் சிக்க வைக்க... என் பெயரில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் எழுதியிருப்பார். இதை ஏ.சி.கிட்ட நான் சொன்னதால்.. தன் தம்பி வல்லத்தரசு தலைமையிலான டீமை அனுப்பி என்னைத் தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த நான்.. அவங்கக்கிட்ட இருந்து தப்பித்ததே பெரிய விசயம். இதைக் கேள்விப் பட்ட அழகிரியண்ணன்... என்னை வந்து பார்த்து மருத்துவ செலவுக்கும் பண உதவி பண்ணி தைரியம் சொன்னார். போலீஸ் தீவிரமா விசாரிச்சா... அந்த பசும்பொன் பாண்டியன்தான் குற்றவாளிங்கிறது தெரியவரும்''’என்றார்.

முத்துப்பாண்டி தாக்கப் பட்டது தொடர்பாக கரிமேடு காவல்நிலையத்தில் பசும்பொன் பாண்டியன் தரப்பு மீது 6 பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட... பசும்பொன்னோ தலைமறைவாகிவிட்டார். அவர்தரப்பு நம்மிடம் ""கடந்த வாரம் ஜெயா டி.வி.யில் பசும்பொன் பாண்டியின் பேட்டி ஒளிபரப்பாச்சு. ஒரு காலத்தில் தா.கி.யின் தீவிர விசுவாசியாக இருந்த பசும்பொன் பாண்டி... தா.கி.யின் படுகொலை விவகாரம் பத்தி காரசாரமாப் பேசினார். அந்தப் பேச்சு எங்க தலைவி ஜெயலலிதாவுக்கே ரொம்பப் பிடிச்சிப்போச்சு. உடனே பேட்டி எடுத்த ரவிபெர்னாடை விட்டு.. பசும்பொன்னை கூட்டி வரச்சொல்லி... ஜெயலலிதா பாராட்டினாங்க. நிலைமை இப்படி இருக்க... பசும்பொன் ஜெ’வுக்கு மிரட்டல் கடிதம் எழுதுவாரா? தி.மு.க. தரப்புதான் மிரட்டல் கடிதங்களை எழுதியிருக்கணும்'' என்றது.

விசாரணைக் காக்கிகளோ ""யாரும் மிரட்டல் கடிதத்தை தன் பெயரில் எழுதமாட்டாங்க. யாரையாவது மாட்டவிடணும்னா தனக்குப் பிடிக்காதவங்க பேர்ல இப்படி எழுதுவாங்க. அதனால் தி.மு.க. முத்துப்பாண்டி யைப் பிடிக்காத யாரோ ஒருத்தர்தான் இந்தக் கடிதங்களை எழுதியிருக்கணும். இந்தக் கோணத்தில் எங்க விசாரணை யை முடுக்கியிருக்கோம். கூடியவிரைவில் குற்றவாளியை மடக்கிடுவோம். அப்ப ஜெ’வை மிரட்டியது அவங்கக் கட்சிக்காரங்களா... இல்லை வேற கட்சிக்காரங்களான்னு தெரிஞ்சிடும்''’என்றார்கள் சீரியசாக..

No comments:

Post a Comment