Friday, December 23, 2011

மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?


படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி, திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி.தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும் வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை.பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4 நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.




சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

No comments:

Post a Comment